பதிவு செய்த நாள்
16 ஜூன்2018
00:42
புதுடில்லி:ஜி.எஸ்.டி., விதிமீறல் தொடர்பாக, நிறுவனங்களிடம் வசூலிக்கப்படும் அபராதத்தை, மத்திய – மாநில அரசுகள் சரிபாதியாக பங்கிட்டு கொள்ள உள்ளன.
பலமுனை வரிகளை ஒழித்து, ஒரே வரி முறையான, ஜி.எஸ்.டி., 2017, ஜூலை, 1ல் அறிமுகமானது.இந்த வரி விதிப்பில், நிறுவனங்கள் மூலப்பொருட்களுக்கு செலுத்தும் வரியை, மதிப்பு கூட்டி விற்கும் பொருட்களின் விற்பனை மூலம், உள்ளீட்டு வரியாக திரும்பப் பெறுகின்றன.
இவ்வாறு திரும்பப் பெறப்படும், உள்ளீட்டு வரிப் பயனை, பொருட்களின் விலையை குறைப்பதன் மூலம், நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.அவ்வாறு செய்யாத நிறுவனங்களை கண்காணித்து, அபராதம் விதிக்க, ‘கொள்ளை லாப தடுப்பு ஆணையம்’ என்ற அமைப்பை, மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கொள்ளை லாப தடுப்பு ஆணையம், உள்ளீட்டு வரிப் பயனை, நுகர்வோருக்கு வழங்காத நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிறுவனங்கள், முறையின்றி ஈட்டிய லாபத் தொகையை, 18 சதவீத வட்டியுடன், நுகர்வோர்களுக்கு வழங்க வேண்டும்.அத்தகைய நுகர்வோர்களை அடையாளம் காண முடியாத பட்சத்தில், அபராத தொகையில், 50 சதவீதம், மத்திய அரசு ஏற்படுத்தும், நுகர்வோர் நல நிதியத்தில் டெபாசிட் செய்யப்படும்.
எஞ்சிய, 50 சதவீத தொகை, மாநில அரசுகள் ஏற்படுத்தும், நுகர்வோர் நல நிதியங்களில் சேர்க்கப்படும்.கொள்ளை லாப தடுப்பு ஆணையம், எந்த மாநிலத்தில் உள்ள நிறுவனத்தின் மீது அபராதம் விதிக்கிறதோ, அந்த மாநில அரசின், நுகர்வோர் நல நிதியத்தில், சரிபாதி தொகை டெபாசிட் செய்யப்படும்.இதற்காக, மத்திய, ஜி.எஸ்.டி., சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|