பதிவு செய்த நாள்
18 ஜூன்2018
07:06
பங்கு முதலீட்டில் இலக்குகளின் பங்கு என்ன? இலக்குகள் அவசியம் தானா? அவற்றை எப்படி நிர்ணயிப்பது? அவற்றை அடையும் வரை நாம் என்னென்ன செய்ய வேண்டும்?
இந்த கேள்விகளுக்கு விடை தேடாமல், நாம் செய்யும் பங்கு முதலீட்டின் பலன்கள், சராசரியை எட்டுவது கூட கடினம். முதலில் இதை நாம் உணர வேண்டும். ஆனால், நாம் பங்கு முதலீட்டை, ஒரு பொழுதுபோக்கை போல அணுகுவதையே அதிகம் விரும்புகிறோம். அப்படி, அணுகுவதன் பின்விளைவுகளை யோசிக்காவிட்டால், அது தான் நாம் செய்யும் பெரும் தவறு.
தேவையான தெளிவு :
நம் முழு கவனமும் திசை திரும்பாமல் நிலைக்க, தெளிவான இலக்குகள் உதவுகின்றன. அந்த கவனம், நம் முடிவுகளின் தன்மையையும், தரத்தையும் உயர்த்தக் கூடியவை. நம் இலக்கை உணர்ந்து, அதை கவனத்தில் கொண்டு எடுக்கும் முடிவுகள், இலக்குகளின் பலன்களை எளிதாக அடையும் வலிமை கொண்டவையாக அமையும். இலக்குகள் சார்ந்த முடிவுகளுக்கு, நாம் கொடுக்கும் முக்கியத்துவமும் அதிகரிக்கும்.
முதலீட்டு முடிவுகள், தெளிவான நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் அமைவது மிக அவசியம். இதற்கு தேவையான தெளிவு, நம்மில் பலருக்கு இல்லை. அத்தகைய தெளிவை அடைய, நாம் போதிய முயற்சி செய்யத் தவறுவதே இதற்கு காரணம். ஆக, இலக்குகள் அவசியம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனாலும், அவை எந்த அளவு நம் நிதி வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை, நாம் இன்னும் புரிந்து நடக்க வேண்டும்.
வேண்டிய மாற்றங்கள் :
அந்த புரிதல் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து பார்ப்போம். அடிப்படையில், இலக்குகள் இரு வகை; குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்குகள். சில நேரங்களில், குறுகிய கால இலக்குகள் நிறைவேறாமல் போகலாம். சந்தையின் சூழல் அப்படி அமையக்கூடும். அப்படி அமையும் போது ஏற்படும் உணர்ச்சிகளை, முதிர்வோடும், பொறுமையோடும் கையாள பழக வேண்டும்.
ஆனால், இது எளிதல்ல. எதிர்பார்ப்புகளால் ஏற்படும் ஏமாற்றத்தின் தாக்கம் எப்போதுமே அதிகமாக இருக்கும். அதை நாம் நெறிப்படுத்த பழக வேண்டியது அவசியம். காலதாமதங்களை புரிந்து கொள்வதும், ஆய்வு செய்து தெளிவு பெறுவதும் மிக முக்கியம். பொதுவாக, குறுகிய கால இலக்குகளில் வரும் ஏமாற்றத்தை சீராகக் கையாண்டால், அதுவே நீண்டகால இலக்குகள் நிறைவேற வழிவகுக்கும். ஆனால், இரு வகை இலக்குகளை அடைவதிலும் காலதாமதங்கள் ஏற்படலாம். இங்கு, பொறுமை சோதிக்கப்படும் சூழல் ஏற்படும். அதை அறிவுபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் கையாள பழக வேண்டும். இரண்டும் ஒருங்கே கலந்த முதலீட்டு முடிவுகளை, கடினமான நேரங்களில் எடுக்க வேண்டிய கட்டாயம், ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் ஏற்படும்.
எதேச்சையான நிகழ்வு :
இது, தொடர் பயிற்சியால் மட்டுமே ஒவ்வொருவருக்கும் சாத்தியமாகும். தொடர்ந்து இலக்குகளை மனதில் கொண்டு, ஒவ்வொரு முதலீட்டு முடிவையும் இலக்கு சார்போடு அமைத்துக்கொள்ள வேண்டும். மேலும், தொடர்ந்து அவற்றை ஆய்வு மூலம் மேற்பார்வை செய்து, முதலீட்டை மேலாண்மை செய்யும் பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி செய்யும் முதலீட்டாளர்கள் மட்டுமே, உறுதியாக வெற்றி பெறுவர். அப்படி இல்லாமல் ஏற்படும் முதலீட்டு வெற்றிகளை, எதேச்சையான நிகழ்வுகளாக மட்டுமே பார்க்க முடியும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|