பதிவு செய்த நாள்
29 ஜூன்2018
00:12
சின்னவெங்காயம் கொள்முதல்; விவசாயிகள் மகிழ்ச்சி
காங்கேயம் : சின்ன வெங்காயம் கொள்முதல் விலை கிலோ, 55 ரூபாயாக அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சின்னவெங்காயம் சாகுபடி, திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையம், சம்பந்தம்பாளையம், காங்கேயம், குண்டடம் பகுதிகளில் அதிகளவில் நடக்கிறது. உள்ளூர் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு திண்டுக்கல், திருச்சி, கோவை, மதுரை, சென்னை மற்றும் கேரள மாநிலத்துக்கு அனுப்பப்படுகிறது.
வறட்சியால் கடந்தாண்டு கிலோ, 150 ரூபாய் வரை, கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக, வெளிமாநில வரத்தாலும், தமிழகத்தில் அதிகளவு அறுவடை செய்யப்பட்டதாலும், விலை சரிந்து கிலோ, 15 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த, 10 நாட்களாக, வெங்காய விளைச்சல் குறைந்ததாலும், கர்நாடகாவில் அதிகமழை பெய்து, வரத்து நின்றதாலும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. தற்போது கிலோ, 50 முதல், 55 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
–––
தேனி வாழைக்காய் ஏற்றுமதி சரிவு
சின்னமனுார் : அரபு நாடுகளுக்கு, பிலிப்பைன்சில் இருந்து வாழைக்காய் இறக்குமதியாவதால், தேனி வாழைக்காய் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டு, கிலோ, 9 ரூபாயாக குறைந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் இருந்து, ‘திசு வாழை’ அரபு நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி ஆகிறது. இதற்காக வாழைக்காய்கள் வெட்டி, பதப்படுத்தப்பட்டு கப்பல்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது மாம்பழம் சீசனால், உள்ளூர் மார்க்கெட்டில் விலை சரிவை சந்தித்த வாழைக்காய்கள், ஏற்றுமதி பாதிப்பால் மேலும் சரிந்துள்ளது. கடந்த மாதம், 1 கிலோ வாழைக்காய், 17 ரூபாய் வரை விற்றது; தற்போது, 9 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இது குறித்து, குச்சனுார் விவசாயி முருகன் கூறுகையில், ‘‘அரபு நாடுகளுக்கு பிலிப்பைன்ஸில் இருந்து வாழைக்காய் இறக்குமதி துவங்கியுள்ளதால், அங்கு தேனி காய்க்கு, ‘கிராக்கி’ இல்லை. இங்கே தார்களை வெட்டி இருப்பு வைத்து விற்கும் வசதியில்லாததால், கிடைக்கும் விலைக்கு விற்பனை செய்யும் நிலை உள்ளது,’’ என்றார்.
––––
வடமாநில வரத்து சரிவால் உளுத்தம் பருப்பு விலை உயர்வு
சேலம் : வட மாநிலங்களிலிருந்து, உளுத்தம் பருப்பு வரத்து சரிந்ததால், தமிழகத்தில், விலை கிலோவுக்கு நான்கு ரூபாய் உயர்ந்தது.
தமிழக உளுந்தம் பருப்பு தேவையில், 80 சதவீதத்தை, மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்கள் பூர்த்தி செய்கின்றன. கடந்த மாதம் வரை அங்கிருந்து வாரம், 150 லாரிகளில் வந்த வரத்து, தற்போது, 100 லாரிகளாக குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வை எதிர்பார்த்து மொத்த வியாபாரிகள் இருப்பு வைத்து வருகின்றனர். அதன்படி நேற்று கிலோவுக்கு நான்கு ரூபாய் உயர்ந்தது.
கடந்த வாரம் வரை முதல் ரக உளுத்தம் பருப்பு கிலோ, 76க்கு விற்றது, 80 ரூபாய்; இரண்டாம் ரகம், 66க்கு விற்றது, 70 ரூபாய்; மூன்றாம் ரகம், 56க்கு விற்றது, 60 ரூபாய் என, உயர்ந்துள்ளது. வடமாநில உளுத்தம் பருப்பு வரத்து தொடர்ந்து சரிந்து வருவதால், விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|