பதிவு செய்த நாள்
06 ஜூலை2018
01:12
புதுடில்லி:ஜி.எஸ்.டி.,யில் ‘ரிவர்ஸ் சார்ஜ்’ நடைமுறையை மீண்டும் அமல்படுத்துவது குறித்து, மாநில நிதியமைச்சர்கள் குழு, சில தினங்களில் விவாதிக்க உள்ளது.
ஜி.எஸ்.டி., 2017 ஜூலை 1ல் அறிமுகமானது. அதில், ‘ரிவர்ஸ் சார்ஜ்’ நடைமுறையில், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்யாதவர்களிடம் வரி வசூலிப்பதில் சிரமங்களை சந்திப்பதாக, வணிகர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து, ஜி.எஸ்.டி., கவுன்சில், கடந்த ஆண்டு அக்டோபரில், ரிவர்ஸ் சார்ஜ் நடைமுறையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.அதன்பின், அமலாக்கம் அறிவிக்கப்பட்டு, மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியாக, செப்., 30 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரிவர்ஸ் சார்ஜ் குறித்து பரிசீலிக்க, பீஹார் துணை முதல்வர் சுஷில் மோடி தலைமையில், மாநில நிதியமைச்சர்கள் கூட்டம், டில்லியில், 8ம் தேதி நடைபெற உள்ளது. அதில், ரிவர்ஸ் சார்ஜ் குறித்து, முடிவு செய்யப்படும்.இக்குழுவின் அறிக்கை குறித்து, வரும், 21ல், டில்லியில் நடைபெற உள்ள, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும்.
அத்துடன், ‘டிஜிட்டல்’ பணப் பரிவர்த்தனைக்கு தள்ளுபடி வழங்குவது குறித்து, இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வரி ஏய்ப்பு தடுக்கப்படும்
தற்போது, ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்யாதவரிடம் இருந்து சரக்கை வாங்கும் போது, பதிவு செய்த வணிகர், வரி செலுத்த நேர்கிறது.‘ரிவர்ஸ் சார்ஜ்’ நடைமுறையில், சரக்கை கொள்முதல் செய்வோர், வரியை நேரடியாக அரசுக்கு செலுத்த வேண்டும். அதனால், இத்திட்டம் அமலானால், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்தவருக்கு சரக்கு சப்ளை செய்யவே, பதிவு பெற்ற வணிகர் முன்னுரிமை அளிப்பார். இதன் காரணமாக வரி ஏய்ப்பு தடுக்கப்படும் என்பதுடன், அரசு வரி வருவாயும் அதிகரிக்கும். எனவே, ரிவர்ஸ் சார்ஜ் நடைமுறையை மீண்டும் அமல்படுத்த, பல மாநில அரசுகள் ஆர்வமாக உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|