பதிவு செய்த நாள்
15 ஜூலை2018
01:05
புதுடில்லி: அன்னிய, ‘ஆன்லைன்’ நிறுவனங்கள், இந்தியாவில் ஈட்டும், குறிப்பிட்ட வரம்பிற்கு மேற்பட்ட வருவாய் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப, வரி விதிப்பது குறித்து, கருத்து தெரிவிக்குமாறு, மத்திய நேரடி வரிகள் வாரியம் கோரியுள்ளது.
மத்திய அரசு, புதிய நிதிச் சட்டத்தின் கீழ், இந்தியாவில், குறிப்பிடத்தக்க பொருளாதார ஆதாயம் பெறும் வெளிநாட்டினருக்கு, வருமான வரி விதிக்கும் சட்டப் பிரிவை அறிமுகப்படுத்தி
உள்ளது.பொருளாதார ஆதாயம் என்பது, இந்தியாவில் மேற்கொள்ளும், சரக்கு, சேவை அல்லது சொத்து பரிவர்த்தனைகள் மற்றும் 'டேட்டா' எனப்படும் தரவுகள் அல்லது சாப்ட்வேர் பதிவிறக்கம் ஆகியவற்றை குறிக்கும். மேலும், 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் நடைபெறும் வர்த்தக ஊக்குவிப்பு நடவடிக்கைகள்; 'டுவிட்டர், பேஸ்புக்' போன்றவற்றில் உரையாடும் பயனாளிகள் அடிப்படையில் பெறும் ஆதாயம் ஆகியவையும் அடங்கும்.
இதுகுறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:வருமான வரிச் சட்டம், 9ம் பிரிவின் கீழ், மூன்று அம்சங்கள் தொடர்பாக, கருத்து தெரிவிக்குமாறு, மத்திய நேரடி வரிகள் வாரியம் கோரியுள்ளது.l வெளிநாட்டினர், இந்தியாவில் மேற்கொள்ளும் சரக்கு அல்லது சேவை சார்ந்த பரிவர்த்தனைகளின் வருவாய்க்கு, வரி வரம்பை நிர்ணயம் செய்வது
l ‘டிஜிட்டல்’ வாயிலான சரக்குகள், சேவைகள், தரவுகள் அல்லது சாப்ட்வேர் பதிவிறக்கம் ஆகியவற்றின் பரிவர்த்தனைகளில் கிடைக்கும் வருவாய்க்கு வரி வரம்பை நிர்ணயிப்பது
l ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தில், வெளிநாட்டினர், இந்தியாவில் மேற்கொள்ளும்
வர்த்தக ஊக்குவிப்பு செயல்கள் அல்லது உரையாடல்களில், பங்கு கொள்வோர் எண்ணிக்கைக்கு ஏற்ப, வரி விதிப்பை அமல்படுத்துவது குறித்து கருத்து கேட்கப்படுகிறது.
இந்த அம்சங்கள் குறித்து, ஆகஸ்ட், 10 வரை, கருத்து தெரிவிக்கலாம். இவ்வாறு அவர்
கூறினார். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், ‘அமேசான், கூகுள், நெட்பிளிக்ஸ், பேஸ்புக், டுவிட்டர்’ போன்ற அன்னிய ஆன்லைன் சேவை நிறுவனங்கள், வருவாய் மற்றும் வாடிக்கையாளர்கள் அடிப்படையில், வரி செலுத்த நேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
வரி வருவாய் அதிகரிக்கும் : ‘வரி விதிப்புக்கு முன், கருத்து கேட்பது, வருமான வரித் துறையின் தோழமையான அணுகுமுறையை காட்டுகிறது. வெளிநாட்டு டிஜிட்டல் நிறுவனங்கள், இந்தியாவில் அலுவலகம், கடை என, எதிலும் முதலீடு செய்யாமல், வாடிக்கையாளர்களிடம் இருந்து பெருமளவு வருவாய் ஈட்டுகின்றன. ‘அதனால், பயனாளிகள் அடிப்படையில் வரம்பு நிர்ணயித்து, வரி விதிக்கும் முறை வரவேற்கத்தக்கது. இந்த வரி விதிப்பால், உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு, டிஜிட்டல் மூலம் புதிய வணிகங்களில் ஈடுபடுவோர், இந்திய வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்படுவர். வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில், அவற்றுக்கான வாடிக்கையாளர்கள் அடிப்படையில் வரி செலுத்தும் நிலை ஏற்படும். இதனால், வரி வருவாய் அதிகரிக்கும்’ என, நாங்கியா அட்வைசர்ஸ் எல்.எல்.பி., நிர்வாக பங்குதாரர், ராகேஷ் நாங்கியா கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|