பதிவு செய்த நாள்
16 ஜூலை2018
02:34
சந்தையின் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி, தொடர்ந்து உச்சம் தொடும் இந்த வேளையில், சந்தையில் உற்சாகம் அதிகம் தென்படவில்லை. மாறாக, பெருவாரியான முதலீட்டாளர்களின் முதலீடுகள், தொடர் வீழ்ச்சியை சந்திக்கும் சூழலே நிலவுகிறது.
சந்தை உச்சத்தை தொட்டால் ஏற்படும் உற்சாகமோ, குதுாகலமோ துளியும் இல்லை. சந்தை குறியீடுகள் உயர்ந்தும், தங்கள் கையிருப்பில் உள்ள முதலீடுகள் சரிவர வர்த்தகமாகாத நிலைமை தான் பலருக்கும்.அவற்றில் பல தொடர் வீழ்ச்சியை காணும் இந்த நேரத்தில், கவலைக் குறிகள் மெல்ல வெளியே தெரிய ஆரம்பித்து உள்ளன. முதலீட்டாளர்களின் மனதில் சோர்வும், கவலையும் மட்டுமே ஓங்கி நிற்கிறது.
இந்த ஆண்டு செய்யப்பட்ட முதலீடுகள் எதுவும், அடக்க விலையைவிட அதிகமாக இல்லை என்ற நிலைமையை, பல முதலீட்டாளர்கள் இப்போது எதிர்கொள்கின்றனர்.இனி அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதறியாது பலரும் ஒருவித தவிப்பில் இருப்பது தெரிகிறது. பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்தவர்கள், முதலீடுகள் விரைவில் மீண்டு எழும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.
நாளடைவில் இந்த நம்பிக்கை எப்படி மாறும் என்பதை சந்தை தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகிறது.எஸ்.ஐ.பி., சார்ந்த பணவரத்து குறையும் சூழ்நிலை ஏற்படாது என்ற நம்பிக்கையும் குறைந்து வருகிறது. சந்தைக்கு வரும் ரொக்க பணவரத்தும் குறையத் துவங்கி உள்ளது. இனி தொடர்ந்து பணவரத்து குறையும் சூழலே தெரிகிறது.
இந்த சூழ்நிலையில், உயரும் பணவீக்கம், கச்சா விலை, ஏறும் டாலர் மதிப்பு ஆகியவை, சந்தையின் அச்ச உணர்வை மேலும் அதிகரிக்கும் வண்ணம் அமைந்து வருகின்றன.ஆனால், அச்ச உணர்வுகள் வெளிப்படையாக, முழுவதுமாக தெரியாவிட்டாலும், சந்தையை நன்கு அறிந்த வட்டாரங்கள் கவலைப்பட துவங்கிவிட்டன. இதே நிலைமை தொடர்ந்தாலே, சந்தையில் பெரும்தாக்கம் ஏற்படும் என்ற கள நிலைமை அவர்களை பாதிக்கிறது.
ஆனாலும், உறுதியான ஒரு நிலைப்பாட்டை எடுக்க எவரும் தயாராக இல்லை. எப்படியாவது சரிந்த பங்குகள் மீண்டும் உயிர்த்தெழும் என்ற நம்பிக்கையில் பெருவாரியான வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் காத்திருக்கின்றனர்.இந்த சூழலில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு கணக்குகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 15 வரை இந்த அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கும்.
நிறுவனங்கள், சந்தையின் எதிர்பார்ப்பை விஞ்சும் வகையில் வளர்ச்சி கண்டால் மட்டுமே, அவை விலை சரிவை தவிர்க்க முடியும். மாறாக, சந்தையின் எதிர்பார்ப்பைவிட குறைந்த வளர்ச்சி அமைந்தால், அந்த நிறுவன பங்குகள், விலை சரிவை சந்திக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
ஆகவே, நிலவும் சூழலில், அச்சமும் படபடப்பும் இருப்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். இனி வரும் வாரங்களில் ஏற்படும் பணவரத்து மாற்றங்கள், லாப வளர்ச்சி மற்றும் பொருளாதார குறியீடுகள், சந்தையின் வருங்கால வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும்.சந்தையில் தென்படும் முதலீட்டு தயக்கம், இதை உணர்ந்ததன் வெளிப்பாடே ஆகும்.வரும் வாரங்கள், இந்த நிதியாண்டின் சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் வகையில் அமையும். வளரும் சூழல் சார்ந்து முதலீட்டு தேர்வுகள் அமையாததே, சந்தையில் முதலீட்டாளர்களின் சங்கடங்களுக்கு முக்கிய காரணம்.
வருங்கால சூழலுக்கு ஏற்ப, முதலீடுகளை அமைத்துக் கொள்ள, முதலீட்டாளர்கள் இப்போதாவது முயற்சிக்க வேண்டும். சந்தை சந்திக்கப் போகும் சவால்களை மனதில் கொண்டு, முதலீட்டு வேகத்தை மாற்றிக் கொள்ளவேண்டும்.இதை காலத்தோடு செய்தால் மட்டுமே, மேலும் நஷ்டம் அடைவதை தவிர்க்க முடியும்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|