பதிவு செய்த நாள்
19 ஜூலை2018
23:58
புதுடில்லி : நாளை, டில்லியில் நடைபெற உள்ள, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், 30 – -40 பொருட்களின் வரி குறைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
டில்லியில், ஜி.எஸ்.டி.,கவுன்சிலின், 28வது கூட்டம், அதன் தலைவர் அருண் ஜெட்லி தலைமையில், நாளை நடைபெற உள்ளது. கைத்தறி ஜவுளி இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜி.எஸ்.டி., வரி விதிப்பின் கீழ், அதிக அளவில் நிறுவனங்கள் இணைந்து வருகின்றன. அத்துடன், வரி செலுத்தும் நிறுவனங்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால், சில பொருட்களின் வரியை குறைத்தாலும், ஜி.எஸ்.டி., வருவாய் அதிகம் பாதிக்காது என, மத்திய அரசு கருதுகிறது.
அதனால், நாளை, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், பல்வேறு பொருட்களின் வரி குறைப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என, தெரிகிறது.பெரும்பாலான கைத்தறி ஜவுளி வகைகள், கைவினை பொருட்கள், சானிட்டரி நாப்கின்கள் ஆகியவற்றுக்கான, 12 சதவீத, ஜி.எஸ்.டி., குறைக்கப்படும் என, தெரிகிறது. அமைப்பு சாரா துறையில், வேலைவாய்ப்பை உருவாக்க, அத்துறை சார்ந்த சில பொருட்கள் மற்றும் சேவைகளின் வரி குறைய வாய்ப்பு உள்ளது.
வருவாய் பாதிப்பின்றி, வேலைவாய்ப்பையும், நுகர்வையும் அதிகரிக்க உதவும் பிரிவுகளைச் சேர்ந்த, 30 -– 40 பொருட்களின் வரி குறைக்கப்படும் என, தெரிகிறது.
சட்ட திருத்தம் :
அத்துடன், ஜி.எஸ்.டி., பதிவு நடைமுறையை சுலபமாக்குவது, கணக்கு தாக்கலுக்கு எளிமையான புதிய படிவத்தை அறிமுகப்படுத்துவது உட்பட, ஜி.எஸ்.டி., சட்டத்தில், 46 பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்வது குறித்தும், ஜி.எஸ்.டி., கவுன்சில் முடிவெடுக்க உள்ளது. வேளாண் துறை மேம்பாட்டிற்காக, ஜி.எஸ்.டி.,யில், 1 சதவீதம் கூடுதல் வரி விதிக்கவும், சில்லரை விற்பனையில், மின்னணு பணப் பரிவர்த்தனைகளுக்கு சலுகைகள் அளிப்பது குறித்தும், கவுன்சில் விவாதிக்கும் மேலும், ஜி.எஸ்.டி., பிரிவுகளை, நான்கில் இருந்து, மூன்று அல்லது இரண்டாக குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும். இந்த கூட்டத்தில், இயற்கை எரிவாயு மற்றும் விமான எரிபொருளை, ஜி.எஸ்.டி.,யில் கொண்டு வரும் திட்டம் இடம்பெறாது என, தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
328 பொருட்கள் :
கடந்த, 2017 நவம்பரில், 28 சதவீத வரி பிரிவில் இருந்து, 178 பொருட்கள் நீக்கப்பட்டன. உணவகங்களுக்கான வரி, 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.இந்தாண்டு ஜனவரியில், 54 சேவைகள் மற்றும் 29 பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டது.இந்த வகையில், மொத்தம், 328 பொருட்களின் வரி குறைக்கப்பட்டுள்ளது.இந்நிலையிலும், 2017- – 18ம் நிதியாண்டில், ஏப்., – டிச., வரை, ஜி.எஸ்.டி., மூலம், 7.41 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. அதாவது, சராசரியாக, மாதம், 89,885 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளது. நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டில், ஏப்ரலில், வரி வசூல், 1.03 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. இது, மே மற்றும் ஜூன் மாதங்களில், முறையே, 94,016 கோடி மற்றும் 95,610 கோடி ரூபாயாக இருந்தது.
தமிழகம் கோரிக்கை :
டில்லியில் நடைபெறும் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்கிறார். மீன்பிடி கருவிகள், வெண்ணெய், நெய், கைத்தறி, காதி உட்பட ‘50 பொருட்களின் மீதான வரி குறைப்பு மற்றும் வரி விலக்குக்கு, தமிழகத்தின் சார்பில் ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|