பதிவு செய்த நாள்
25 ஜூலை2018
23:16
புதுடில்லி : வாஷிங் மிஷின், ரெப்ரிஜிரேட்டர் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட பொருட்களின் வரி குறைப்பு, நாளை அமலுக்கு வரும் நிலையில், இறக்குமதி பொருட்களை அதிகம் சார்ந்துள்ள, கார், ‘டிவி’ நிறுவனங்கள், விலையை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகின்றன.
இதற்கு, ‘டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தான் காரணம்’ என, இந்நிறுவனங்கள் கூறுகின்றன. தற்போது, ரூபாய் மதிப்பு, 68.75 – 68.86 என, ஏற்ற, இறக்கமாக காணப்படுகிறது. கடந்த, 19ல், ரூபாய் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், 69.1 ஆக குறைந்தது. அது முதல், ரூபாய் மதிப்பு உயர்ந்து வருகிறது. எனினும், இதர ஆசிய கரன்சிகளை ஒப்பிடும் போது, ரூபாய் மீதான தாக்கம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால், கார் பாகங்கள் இறக்குமதி செலவினம் கூடியிருப்பதால், கார் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக, ‘மாருதி சுசூகி’ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம், பெரும்பான்மை கார் பாகங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கிறது. இன்ஜின், மின் கருவிகள் உள்ளிட்ட சில சாதனங்களை இறக்குமதி செய்கிறது. அத்துடன், ஜப்பானின் சுசூகி நிறுவனத்திற்கு, ‘ராயல்டி’ தொகை வழங்குகிறது.
‘உடனடியாக கார் விலை உயராது; ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டால், சப்ளையர்களுடன், விலை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும்’ என, ‘டொயோட்டா’ நிறுவனம் கூறியுள்ளது. இதேபோல, ‘மெர்சிடஸ் பென்ஸ்’ நிறுவனமும், பொறுத்திருந்து பார்க்க முடிவு செய்து உள்ளது. ‘ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி தொடர்ந்தால், கார் விலை உயர்வை தவிர்க்க முடியாது’ என, ‘ஆடி’ நிறுவனம் தெரிவித்து உள்ளது.
‘பானாசோனிக் இந்தியா’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், மனீஷ் சர்மா, ‘‘தற்போதைய சூழலை சமாளிப்பது சிரமமாக உள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில், குறிப்பாக, 32 அங்குல, ‘டிவி’ விலை உயர வாய்ப்புள்ளது,’’ என்றார்.
இதே வகை, ‘டிவி’ விலை, 15 சதவீதம் உயரும் என, ‘தாம்சன் டிவி’ விற்பனையில் ஈடுபட்டுள்ள ‘சூப்பர் பிளாஸ்ட்ரானிக்ஸ்’ தெரிவித்துள்ளது. ‘சோனி’ நிறுவனம், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|