பதிவு செய்த நாள்
24 ஆக2018
23:27
புதுடில்லி : ‘டாடா சன்ஸ், தனியார் நிறுவனமாக மாற்றப்படுவதை தடை செய்ய முடியாது’ என, என்.சி.எல்.ஏ.டி., எனப்படும், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனதலைவர், ரத்தன் டாடா, 2012ல், ஓய்வு பெற்று, கவுரவ தலைவரானார். இதையடுத்து, அதே ஆண்டு, டிசம்பரில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக, சைரஸ் மிஸ்திரி பொறுப்பேற்றார். அவரது, நான்கு ஆண்டு செயல்பாடுகளில், ரத்தன் டாடா அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, டாடா சன்ஸ் இயக்குனர் குழு ஒப்புதலுடன், சைரஸ் மிஸ்திரி, 2016, அக்., 24ல் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து, சைரஸ் மிஸ்திரி தாக்கல் செய்த மனுவை, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து, சைரஸ் மிஸ்திரி, என்.சி.எல்.ஏ.டி.,யில் மேல்முறையீடு செய்து உள்ளார்.
தலையீடு :
இந்நிலையில், 2017, செப்., 21ல், டாடா சன்ஸ் நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், டாடா சன்ஸ் நிறுவனத்தை, நிகர்நிலை பொது நிறுவனம் என்ற அந்தஸ்தில் இருந்து, தனியார் நிறுவனமாக மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகர் நிலை பொது நிறுவன பங்குகளை வெளிச் சந்தையில் விற்கலாம். ஆனால், தனியார் நிறுவனப் பங்குகளை, அவ்வாறு விற்க முடியாது. அந்நிறுவனத்தின் இதர பங்குதாரர்களுக்கு மட்டுமே விற்க முடியும்.
சைரஸ் மிஸ்திரியின், ஷபூர்ஜி பலோன்ஜி குடும்பம் வசம், டாடா சன்ஸ் நிறுவனத்தின், 18.4 சதவீத பங்குகள் உள்ளன. அவற்றை முழுவதுமாக வாங்கி, டாடா குழுமத்தில், சைரஸ் மிஸ்திரியின் தலையீட்டை அடியோடு முடிவுக்கு கொண்டு வருவதற்காகவே, டாடா சன்ஸ், தனியார் நிறுவனமாக மாற்ற நடவடிக்கை எடுத்தது.
மறுப்பு :
இந்நிலையில், 6ம் தேதி, டாடா சன்ஸ், தனியார் நிறுவனமாக மாற, தேசிய நிறுவனங்கள் பதிவாளர் அலுவலகம் ஒப்புதல் வழங்கியது. இதை எதிர்த்து, ‘தனியார் நிறுவனமாக டாடா சன்ஸ் மாறுவதற்கு, இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என, சைரஸ் மிஸ்திரி சார்பில், என்.சி.எல்.ஏ.டி.,யில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி, எஸ்.ஜே.முகோபாத்யா தலைமையிலான அமர்வு, டாடா சன்ஸ், தனியார் நிறுவனமாக மாறுவதற்கு, தடை விதிக்க முடியாது என, மறுத்து விட்டது. அதேசமயம், ‘சைரஸ் மிஸ்திரியிடம், பங்குகளை விற்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது’ என, டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக, 10 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி கூறி, விசாரணையை, செப்.,24க்கு தள்ளி வைத்தனர்.
ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம் :
சைரஸ் மிஸ்திரி தலைமையிலான, ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம், ஆண்டுக்கு, 28 ஆயிரம் கோடி ரூபாய் விற்றுமுதலுடன், ரியல் எஸ்டேட், கட்டுமானம், ஜவுளி, பொறியியல் உட்பட, பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளது. சைரஸ் மிஸ்திரி குடும்பத்தினர், டாடா சன்ஸ் நிறுவனத்தின், 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வைத்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|