பதிவு செய்த நாள்
17 செப்2018
00:05
தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர், தள்ளுபடி விலையில் பரிவர்த்தனை செய்யப்படும் தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்க பரிசீலனை செய்யலாம்.
இந்திய ரூபாய் மதிப்பின் போக்கு, சர்வதேச பொருளாதார அம்சங்கள், கச்சா எண்ணெய் விலை போக்கு உள்ளிட்ட அம்சங்கள் காரணமாக, ஒரு முதலீட்டு வாய்ப்பாக தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு, தங்கத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. ரூபாயின் போக்கு இதே திசையில் தான் இருக்கும் என, வல்லுனர்கள் கணித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக கச்சா எண்ணெய் விலை அமைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து, ரூபாய் மதிப்பை பாதித்துள்ளது.
தங்கத்தில் முதலீடு :
அதே நேரத்தில், அமெரிக்க டாலர் வலுப்பெறுவதும், இந்திய ரூபாய்க்கு சிக்கலாக அமைந்துள்ளது. இவற்றின் காரணமாக தங்கத்தின் மீது கவனம் குவிந்துள்ளது. ஆனால், ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக மட்டுமே, தங்கத்தின் விலை உயர்ந்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது என, வல்லுனர்கள் கருதுகின்றனர். வலுவான டாலர் சர்வதேச அளவில் தங்கத்தின் விலையை கட்டுப்படுத்தலாம். எனினும், இந்திய சந்தையில் இதன் தாக்கம் குறைவாகவே இருக்கும். எனவே, உள்ளூரில் தங்கத்தின் விலை போக்கிற்கு ஏற்ப முதலீட்டாளர்கள் முடிவு எடுக்கலாம். பொதுவாக முதலீடு நோக்கில், தங்கம் அதிக பலன் தருவதில்லை என்றே கருதப்படுகிறது.
எனினும், தங்கத்தின் ஆதார அம்சம் காரணமாக, ஒருவரின் முதலீட்டு கூடையில் தங்கம் குறிப்பிட்ட அளவு இருக்கலாம். இது பரவலாக்கத்திற்கும் உதவும். அந்த வகையில், முதலீடு நோக்கில் தங்கத்தை அணுகுவோர், தற்போது அதற்கான வாய்ப்பை பரிசீலிக்கலாம் என்கின்றனர். தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் அதற்கான பல்வேறு வாய்ப்புகளை பரிசீலிக்கலாம். நகை வடிவில் தங்கத்தை வாங்குவது, பொருத்தமான முதலீட்டு உத்தியாக அமைவதில்லை. தங்க கட்டியாக வாங்கலாம் என்றாலும், அதில் தூய்மை மற்றும் பாதுகாப்பாக பராமரிக்கும் அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எனவே, காகித வடிவிலான தங்க முதலீடான தங்க, இ.டி.எப்., அல்லது தங்க நிதிகளை நாடலாம். அதே போல அரசின் தங்க சேமிப்பு பத்திரங்களையும் அணுகலாம்.
தங்க பத்திரங்கள் :
தங்க இ.டி.எப்.,கள் பணம் ஆக்கும் தன்மையையும் பெற்றுள்ளன. தங்கத்தின் விலை போக்கிற்கு ஏற்ப பலன் அளிக்கும். ரிசர்வு வங்கி மூலம் அரசு வெளியிடும் தங்க சேமிப்பு பத்திரங்கள், 2.5 சதவீத வட்டி எனும் கூடுதல் பலனையும் அளிக்கின்றன. கடந்த, 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பத்திரங்கள் ஒவ்வொரு கட்டமாக வெளியிடப்படுகின்றன. இந்த பத்திரங்கள் வெளியாகும் போது வாங்கலாம் என்பதோடு, இவற்றை பங்குச்சந்தையிலும் வாங்கலாம்.
இதுவரை வெளியான தங்க சேமிப்பு பத்திரங்கள் பங்குச்சந்தையில் தற்போதைய தங்க விலையோடு ஒப்பிடும் போது, 14 – 16 சதவீத தள்ளுபடி விலையில் பரிவர்த்தனை ஆகின்றன. அந்த வகையில் இவை ஈர்ப்புடையதாக அமைகின்றன. எனவே தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளவர்கள், தள்ளுபடி விலையில் பரிவர்த்தனை செய்யப்படும் தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்கலாம் என வல்லுனர்கள் கருதுகின்றனர். ஆனால், ஒன்று இந்த பத்திரங்களில் பணமாக்கும் தன்மை குறைவு என்பதால், முதிர்வு காலம் வரை வைத்திருக்க கூடியவர்கள் மட்டுமே, இவற்றை சந்தையில் வாங்குவது பொருத்தமாக இருக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|