பதிவு செய்த நாள்
29 அக்2018
23:30
‘ஜிம் – 2’ என்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், எம்.எஸ்.எம்.இ., துறையில் முதலீடுகளை பெற, மாவட்ட அளவில், 100 கோடி முதல், 3,000 கோடி ரூபாய் வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில், வரும் ஜன., 23, 24ம் தேதிகளில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில் நடைபெறுகிறது; இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.இந்த மாநாட்டில், எம்.எஸ்.எம்.இ., எனும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீடை பெற, மாவட்ட அளவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெரிய நிறுவனங்கள் அதிக முதலீடுகள் செய்தாலும், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் முதலீடுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. முதல் மாநாட்டில், எம்.எஸ்.எம்.இ., சார்பில், 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் பெறப்பட்டன. இந்த ஆண்டு, 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை, முதலீடுகள் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதனால், தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களுக்கும், 100 கோடி முதல், 3,000 கோடி ரூபாய் வரை, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில், சிறிய மாவட்டங்களுக்கு, 100 கோடி ரூபாயும்; கோவை போன்ற பெரிய மாவட்டங்களுக்கு, 3,000 கோடி ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்வதில், தொழில் முனைவோர்கள் ஆர்வமாக உள்ளனர். அவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|