பதிவு செய்த நாள்
14 நவ2018
23:13
லக்னோ:‘பிரதமர் மோடி, தொலைநோக்கு பார்வையுடன், அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியும்’ என, இந்திய வர்த்தகம் மற்றும் தொழிலக கூட்டமைப்பான – அசோசெம் தெரிவித்துள்ளது.
ஹால்டியா – வாரணாசிநேற்று முன்தினம், உ.பி., மாநிலம், வாரணாசியில், பிரதமர் மோடி, நாட்டில் முதன் முதலாக, கங்கை நதியோரம் அமைக்கப்பட்ட பன்முக போக்குவரத்து முனையம் உட்பட, 2,413 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தார்.
மேலும், கோல்கட்டாவின் ஹால்டியா துறைமுகத்தில் இருந்து, கங்கை நதி வழியே வாரணாசிக்கு வந்த, நாட்டின் முதல் நதி நீர் சரக்குப் பெட்டக போக்குவரத்து சேவையை ஏற்றுக் கொண்டார்.அத்துடன், 1,572 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளையும், இரண்டு கழிவுநீர் மேலாண்மை திட்டங்களையும் துவக்கி வைத்தார்.
வேலைவாய்ப்பு
இது குறித்து, அசோசெம் செகரட்டரி ஜெனரல், உதய் குமார் வர்மா கூறியதாவது:பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, புதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கும், தற்போது உள்ளவற்றை மேம்படுத்தவும், அதிக முக்கியத்துவம் அளித்து வருவது வரவேற்கத்தக்கது.
கங்கையில் அமைக்கப்பட்டுள்ள, நதி நீர் போக்குவரத்து முனையம், சரக்கு மற்றும் சேவை கள் போக்குவரத்து வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும்.இதுபோன்ற, அடிப்படை கட்டமைப்பு வசதிகள், தொழில் புரிவதற்கான செலவினங்களை குறைக்கும். உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம், நம்பிக்கையை அதிகரிக்க உதவும்.இதனால், உள்ளூரில் வர்த்தகம் பெருகும். ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும். பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இதன் மூலம், உ.பி., மட்டுமின்றி, நாட்டு மக்கள் வாழ்வாதாரமும் மேம்படும்.
சங்கிலி தொடர்
இதுபோன்ற, நதி நீர், சாலை போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் உள்ள குறைபாடுகள், ஒரு நிறுவனத்தின் உற்பத்தி, வினியோகம், நுகர்வு என, சங்கிலித் தொடராக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அபாயம் உள்ளது.குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஏற்கனவே, நிதிப் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன.
இந்நிறுவனங்களிடம், தொழில்நுட்ப ஆற்றல், சந்தைப்படுத்தும் வசதி ஆகியவையும் குறைவாக உள்ளது.இத்தகைய சூழலில், தொழில் துறை மேம்பட, குறிப்பாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி காண, சாலை, ரயில், விமானம், நீர்வழி போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அவசியம் தேவை.
மேலும், தடையற்ற மின்சாரம், தொலை தொடர்பு, ஆய்வுக் கூடங்கள், வடிவமைப்பு மையங்கள் போன்ற வசதிகளும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அவசியம். வாரணாசியில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகள், குறு,சிறு, நடுத்தர நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட உதவும். இதனால், உ.பி., மட்டுமின்றி, நாட்டின் ஒட்டுமொத்த தொழில் துறையும் வளர்ச்சி காணும்.இவ்வாறு அவர் கூறினார்.
50 காசு போதும்
ஒரு கிலோ மீட்டர் சரக்கு போக்குவரத்துக்கு, சாலையில், 1.50 ரூபாய்; ரயிலில், 1 ரூபாய் செலவாகும். இதை, நதி நீர் மூலம், 0.50 காசுகள் செலவில் முடித்து விடலாம்.கோவா, மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில், உலக வங்கி நிதியுதவியுடன், 30 நதிநீர் போக்குவரத்து திட்டப் பணிகளை மத்திய அரசு துரிதகதியில் மேற்கொண்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|