பதிவு செய்த நாள்
20 நவ2018
23:33
புதுடில்லி : உலகளவில், திறமையானோரை உருவாக்குவதிலும், அன்னிய வல்லுனர்களை ஈர்த்து, தக்க வைப்பதிலும், இந்தியா, 53வது இடத்தைப் பிடித்துள்ளது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, ஐ.எம்.டி., வணிக கல்வி மையம், ஆண்டுதோறும், உலகளவில் திறமையானோர் வளம் குறித்து, ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிடுகிறது.இந்த ஆய்வில், ஒரு நாடு, திறமைசாலிகளை உருவாக்க, கல்வித் துறையில் மேற்கொள்ளும் முதலீடும், அது தொடர்பான முன்னேற்றமும், மதிப்பீடு செய்யப்படுகிறது.
அடுத்து, வெளிநாடுகளில் உள்ள வல்லுனர்களை, ஒரு நாடு எந்த வகையில் ஈர்த்து, சுய வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்கிறது என, ஆராயப்படுகிறது.உள்நாட்டில் உள்ள திறமைசாலிகளின் தரம், எந்த அளவிற்கு உயர்வாக உள்ளது என்பது குறித்தும், ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த மூன்று அம்சங்களின் அடிப்படையில், ஒரு நாட்டின் திறமையானோர் வளம் குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்படுகிறது.
ஆய்வறிக்கை :
அதன்படி, ஐ.எம்.டி., வணிக கல்வி மையம் இந்தாண்டு, 63 நாடுகளைச் சேர்ந்த, 6,000 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளின் கருத்துகளை கேட்டறிந்து, ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது: எத்தகைய பணிகளுக்கும் ஏற்ற, தரமான திறமைசாலிகளை தன்னகத்தே வைத்துள்ள நாடுகளில், இந்தியா, 31வது இடத்தில் உள்ளது. இது, சராசரியை விட அதிகம் என்பதால், இப்பிரிவில் இந்தியா, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அதேசமயம், கல்வித் துறையில் போதிய அளவில் முதலீடு இல்லாததும், கல்வித் திட்டத்தின் தரம் உயர்த்தப்படாமல் இருப்பதும், இப்பிரிவில், இந்தியாவை, 63வது இடத்திற்கு தள்ளிஉள்ளது.
இதன் காரணமாக, வல்லுனர் வளம் உள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா, இரண்டு இடங்கள் பின்தங்கி, 53வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு, 51வது இடத்தில் இருந்தது. இப்பட்டியலில், சுவிட்சர்லாந்து, தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறது. இதில், சிங்கப்பூர், 13வது இடத்தில் உள்ள போதிலும், ஆசிய அளவில், முதலிடத்தை பிடித்துள்ளது.
சீனா :
முன்னேறிய நாடுகள், கல்விக்கு ஒதுக்கும் சராசரி நிதியை விட, சீன அரசு, மிகக் குறைவாகவே கல்வித் திட்டங்களுக்கு செலவிடுகிறது.மேலும், அயல்நாடுகளைச் சேர்ந்த திறமைசாலிகளை ஈர்ப்பதிலும், அவர்களை தக்க வைப்பதிலும், சீன அரசுக்கு கொள்கை பிரச்னைகள் உள்ளன.இத்தகைய காரணங்களால், சர்வதேச அளவில், திறமைசாலிகள் அதிகம் உள்ள நாடுகளில், சீனா, 39வது இடத்தை பிடித்து உள்ளது.
இந்த பட்டியலில், சுலோவேக் குடியரசு, கொலம்பியா, மெக்சிகோ ஆகியவை, முறையே, 59, 60 மற்றும் 61வது இடங்களை பிடித்துள்ளன. கடைசி இரு இடங்களில், மங்கோலியா, வெனிசுலா ஆகியவை உள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
கல்வித் துறைக்கு அதிக அளவில் முதலீடு செய்து, உயர்தரமான வாழ்க்கைச் சூழல் உள்ள நாடுகள், ‘டாப் – 10’ல் இடம் பிடிக்கின்றன. இந்நாடுகள், கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் மூலம், மனித வள மூலதனத்தை மேம்படுத்திக் கொள்கின்றன. அத்துடன், வெளிநாடுகளில் இருந்து, மிகச் சிறந்த வல்லுனர்களை ஈர்த்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றன. இப்பிரிவில், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் செயல்பாடு, சராசரியாக இருந்தாலும், அவை, உள்நாட்டினரின் திறமையை வளர்க்க போதுமான முதலீடுகள் செய்யாததால், பின்தங்கியுள்ளன.
-அர்துரோ பிரிஸ், இயக்குனர், ஐ.எம்.டி., சர்வ தேச போட்டித் திறன் பிரிவு, ஐ.எம்.டி., வணிக கல்வி மையம், சுவிட்சர்லாந்து
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|