பதிவு செய்த நாள்
23 நவ2018
23:38
புதுடில்லி : கடந்த ஆண்டை விட, இந்தாண்டு, நவராத்திரி, தீபாவளி பண்டிகை காலத்தில், பயணியர் கார் மற்றும் இரு சக்கர வாகன விற்பனை குறைந்துள்ளதாக, வாகன முகமை நிறுவனங்கள் கூட்டமைப்பான, ‘படா’ தெரிவித்து உள்ளது.
இது குறித்து, இக்கூட்டமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கை: கடந்த, 2017ல், செப்., 21 முதல், நவ., 1 வரையிலான பண்டிகை காலத்தில், ஒட்டுமொத்தமாக, 23,01,986 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன.இது, இந்தாண்டு, அக்., 10 முதல், நவ., 1 வரையிலான, 42 நாட்களில், 11 சதவீதம் குறைந்து, 20,49,391 ஆக சரிவடைந்துள்ளது.
இதே காலத்தில், பயணியர் வாகனப் பதிவு, 14 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 3,33,456லிருந்து, 2,87,717 ஆக குறைந்து உள்ளது.கடன் வசதிஇரு சக்கர வாகனப்பதிவு, 13 சதவீதம் சரிவடைந்து, 18,11,703 லிருந்து, 15,83,276 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த இரு பிரிவுகளிலும், இதுவரை காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. முகமை நிறுவனங்களிடம், வாகனங்களின் தேக்கமும் அதிகரித்து உள்ளது.
பண்டிகை காலத்திற்கு முன், இரு சக்கர வாகனங்களின் தேக்க காலம், 60 நாட்களாகவும், பயணியர் வாகனங்களின் தேக்க காலம், 50 நாட்கள் என்ற அளவிலும் இருந்தது.இது, பண்டிகைக்கு பின், முறையே, 50 மற்றும் 45 நாட்களாக குறைந்துள்ள போதிலும், அது, இயல்பான தேக்க நிலையை விட அதிகம்என்பது குறிப்பிடத்தக்கது. வாகன விற்பனையில், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பங்கு முக்கியமானதாக உள்ளது. இந்நிறுவனங்கள் தரும் கடன் வசதியால், பெரும்பான்மை வாகனங்கள் விற்பனையாகின்றன.
தற்போது, வங்கி சாரா நிதி நிறுவனங்கள், பணப்புழக்க நெருக்கடியை சந்தித்துள்ளன. இதன் காரணமாக, அவை, வாகன கடன் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.நடவடிக்கைமத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் துறையில், பணப்புழக்கத்தை சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேசமயம், இந்தாண்டு பண்டிகை காலத்தில், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் விற்பனை, முறையே, 10 மற்றும் 16 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இந்தாண்டு, ஏப்., 1 முதல், நவ., 20 வரை, ஒட்டுமொத்த வாகனப் பதிவு, 6.5 சதவீதம் உயர்ந்து, 1,19,89,705 ஆக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில், 1,12,54,305 ஆக இருந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பல காரணங்கள் :
இந்தாண்டு பண்டிகை காலத்தில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் பயணியர் கார்கள் விற்பனை குறைந்துள்ளது. சமீப ஆண்டுகளில், இது போன்றதொரு மந்தமான பண்டிகை காலத்தை, வாகனத் துறை கண்டதில்லை.இதற்கு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, புதிய விதிமுறைப்படி உயர்ந்துள்ள காப்பீட்டு கட்டணம், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பண நெருக்கடி என, பல காரணங்களை கூறலாம். இதனால் பலர், வாகனம் வாங்கும் முடிவை தள்ளிப் போட்டுள்ளனர்.
-ஆஷிஷ் ஹர்ஷராஜ் கலே, தலைவர், வாகன முகமை நிறுவனங்கள் கூட்டமைப்பு
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|