பதிவு செய்த நாள்
02 டிச2018
23:47
ரூபாயின் மதிப்பு இழப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, அன்னிய முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான பங்கு விற்பனை என்ற சூழலில் துவங்கிய நவம்பர் மாதம், முற்றிலும் மாறுபட்ட சூழலில் முடிந்தது.
கச்சா எண்ணெய் விலை சரிவு, ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு மற்றும் அன்னிய முதலீட்டாளர் களின் மனமாற்றம் என எல்லாமே தலைகீழாக மாறி, இந்திய முதலீட்டாளர்களை, இன்ப அதிர்ச்சியில் விட்டுச் சென்றது நவம்பர் மாதம்.மேலும், டிசம்பர் மாதம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த ஆண்டு பங்கு முதலீட்டில் யாருமே பணம் சம்பாதிக்காத சூழலில், ஆண்டு முழுவதும் இந்திய பங்குகளை விற்று வந்த அன்னிய முதலீட்டாளர்கள், எதற்காக இப்படி மனம் மாறினர்? அவர்களது மனமாற்றம் நிலைக்குமா என்ற கேள்விக்குறிகள், அனைவரது எண்ண ஓட்டத்திலும்எழுகின்றன.வரும் வார இறுதியில், ஓட்டுப்பதிவு முடிந்து, ஐந்து மாநிலங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகள், வெள்ளியன்று மாலை வெளியிடப்படும்.
இந்த எதிர்பார்ப்பில், வரும் வாரம் முழுவதும்பங்கு வர்த்தகம்அமையும்.சந்தை பல தருணங்களில் வருங்காலத்தை சரியாக யூகிக்கும் வலிமை படைத்தது.சரியோ, தவறோ, சந்தை அந்த யூகங்களை தவறாமல் செய்யும். வரும் வாரத்தில், சந்தையின் யூகங்கள்பங்கு வர்த்தகத்தில்தெளிவாக வெளிப்படும்.
இந்த சூழலில் தான், அன்னிய முதலீட்டாளர்கள் நவம்பரில் இந்திய பங்குகளை வாங்கியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி யுள்ளது.அன்னிய முதலீட்டாளர்கள், 2019 தேர்தல் முடிவுகள் பற்றிய தெளிவு பெற்ற பின், இந்திய சந்தைக்கு திரும்புவர் என்ற பொதுவான பார்வை இப்போது கேள்விக்குறியாகி உள்ளது.
அன்னிய முதலீட்டாளர்கள், தொடர்ந்து இந்திய பங்குகளை வாங்க, பல முக்கிய பொருளாதார காரணங்கள் இருக்கின்றன.கச்சா எண்ணெய் சார்ந்த அச்சங்கள் விலகியது, ரூபாயின் மதிப்பு கூடியது, ஜப்பான் நாட்டோடு இந்திய போட்ட செலாவணி மாற்று உடன்பாடு மற்றும் வங்கி சீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை, அன்னிய முதலீட்டாளர்களின் அச்சத்தை பெரிதும் போக்கிவிட்டன.
எப்படியும் அவர்கள் மொத்த முதலீட்டில், இந்திய முதலீடுகளின் பங்கு மிகவும் குறைவு. அதையும், அவர்கள் கடந்த ஆண்டு வெளியில் எடுத்து சென்றுவிட்டனர். அடுத்த ஆண்டு எப்படியும் மீண்டும் முதலீடு செய்ய வேண்டி இருக்கலாம்.இத்தகைய சூழலில், இப்போது இருக்கும் சாதகமான சந்தை மற்றும் பொருளாதார வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துவிட்டதாகவேதெரிகிறது.
ஆளும் தரப்பு தேர்தலில் அதிக பின்னடைவு அடையாவிட்டால், சந்தையில் அன்னிய முதலீடு மீண்டும் வேகம் பிடிக்கும்.அதேசமயம், அரசியல் பின்னடைவு ஏற்பட்டால், அதன் அடிப்படை யில் முதலீட்டாளர்கள் எப்படி வருங்காலப் பார்வையை அமைத்துக் கொள்கின்றனர் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டிய தருணம் இது.
கச்சா எண்ணெய் விலை, ரூபாய் மதிப்பு மற்றும் குறைவான பணவீக்கம் ஆகியவை தற்போது இந்தியாவிற்கு சாதகமான இடத்தில் இருப்பது, சந்தையின் முதலீட்டு பார்வையில் நிச்சயம் எதிரொலிக்கும்.டிசம்பர் மாத பங்கு வர்த்தகம், வரும் ஆண்டிற்கு முன்னோடியாக இருக்கும் என்பதை இப்போது தெளிவாக உணர முடிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|