பதிவு செய்த நாள்
09 டிச2018
23:55
ஐந்து மாநில தேர்தல்களில் ஓட்டுப்பதிவு முடிந்து, கருத்துக் கணிப்புகள் வெளியான சூழ்நிலையில், சந்தையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை அறியும் ஆர்வமே அனைவர் மனதிலும் நிறைந்துள்ளது.
கணிப்புகள் யூக அடிப்படையில் சொல்லப்பட்டது இல்லை என்றாலும், அவற்றை முழுவதும் நம்பிவிட முடியாது. அதேசமயம், அவை சொல்லும் கள யதார்த்தத்தையும் புறந்தள்ளிவிட முடியாது.ஆளும், பா.ஜ., தன் நிலையில் சற்று சரிந்தது தெரிகிறது. இந்த சரிவின் தாக்கத்தை சரியாக அளவிட, தேர்தலின் முடிவுகள் தெரிந்தாக வேண்டும். அந்த முடிவுகளுக்கு காத்திருந்து, நம்முடைய அரசியல் சார்ந்த கணிப்பை எடுப்பது நல்லது.
ஆனாலும், வரும், 2019 பொது தேர்தல் மிகக் கடினமாக போட்டியிடப்படும் தேர்தலாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. கூட்டணிகளின் பலமே ஆட்சிக்கு வழிவகுக்கும் என்பதிலும் தெளிவு பிறந்துள்ளது.ஆக, கூட்டணிகளை பற்றி இன்னும் சரியான புரிதல் இல்லாத சூழலில், முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
அடிப்படையில், நாம் குறுகிய கால நிகழ்வுகளை ஒதுக்கிவிட்டு, நெடுங்காலத்தை சார்ந்து நம் நகர்வுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். யார் ஆட்சிக்கு வருகின்றனர் என்ற அரசியல் பார்வை, வெறும் குறுகிய கால சந்தை மாற்றங்களை மட்டுமே பாதிக்கும். வரும் அரசு, முந்தைய அரசின் பொருளாதார கொள்கைகளில் இருந்து எவ்வளவு மாறுபடும் என்பதே இப்போதைய கேள்வியாக இருக்க வேண்டும். அதில் தெளிவு ஏற்பட்டால், சந்தை போக்கில் ஏற்படும் குறுகிய கால மாற்றங்களை, நமக்கு சாதகமாக அமைத்துக் கொள்ளலாம்.
நிலையான, ஒரு கட்சி ஆட்சிக்கு வராது என்றே வைத்துக் கொள்வோம். கூட்டணி ஆட்சி வந்தாலும், அந்த ஆட்சிக்கு நாட்டின் பொருளாதார கொள்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டிய உடனடி கட்டாயம் ஏற்படும்.அன்னிய முதலீடு, ரூபாய் மதிப்பு, ஏற்றுமதி வளர்ச்சி, இறக்குமதி குறைப்பு, பணவீக்க நிர்வாகம், வட்டி விகித மேலாண்மை என, பல பரிணாமங்களில் புதிய அரசின் நிலைப்பாடுகளை உலகமும், நம் சந்தைகளும் கூர்ந்து கவனிக்கும்.
முதலீட்டாளர்களின் பார்வை, வெறும் கவனிப்போடு நின்றுவிடாது. அவர்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளை முதல் நாளில் இருந்தே சந்தை வர்த்தகத்தில் வெளிக்காட்டுவர்.அப்போது, பங்கு மதிப்பீடுகள் மாறலாம். அந்த சூழ்நிலையை நமக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.
எல்லா பங்குகளையும் விற்கும் நிலைக்கு பங்கு வர்த்தகர்கள் தள்ளப்படலாம்.
முதலீட்டாளர்கள் அந்த நேரத்தில் பங்குகளை வாங்க தயாராக வேண்டும். எல்லாரும் பங்குகளை விற்கும் நேரத்தில், நாம் மாற்றி யோசித்து, முதலீடு செய்ய நம்மை இப்போதே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.புதிய அரசின் பொருளாதார கொள்கைகளால், வரும் காலங்களில் சாதகமடையும் துறை மற்றும் நிறுவன பங்குகளை வாங்கி குவிக்க, நாம் இப்போதிலிருந்தே தயாராக வேண்டும்.
அரசுகள் மாறினாலும், கொள்கைகள் அடிக்கடி மாறாது என்பதை நினைவில் கொண்டு, நம்முடைய முதலீட்டு பார்வையை அமைத்துக் கொள்வது மிக அவசியம்.அரசியல் பார்வைகள், குறுகிய கால சந்தை மாற்றங்களை மட்டுமே நிர்ணயிக்கும். உருவாகும் பொருளாதார சூழல் சார்ந்த சிந்தனை மட்டுமே, வருங்காலத்தில் நம் பங்கு முதலீடு வெற்றி பெற வழிவகுக்கும்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர், பங்குசந்தை
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|