பதிவு செய்த நாள்
27 டிச2018
23:40
புதுடில்லி : மத்திய அரசு, அடுத்த இரண்டு ஆண்டுகளில், 7 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்கவும், வெளிநாடுகளுக்கு என, தனி தொழில் பூங்காக்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு கூறியதாவது: இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்வதற்கு வாய்ப்புள்ள துறைகள், நாடுகள் மற்றும் நிறுவனங்களை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.இதையடுத்து, தேர்வு செய்யப்பட்ட நாடுகளின் முதலீடுகளை ஈர்க்க, சிறப்பு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் உள்ள வர்த்தக வாய்ப்புகள், விரைவாக தொழில் துவங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், அன்னிய நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் ஆகியவை குறித்து, வெளிநாடுகளில் பிரசாரம் செய்யப்படும்.இதன் மூலம், இந்தியாவின் பல்வேறு துறைகளில், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 7 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சீனா :
ஜப்பான், தென்கொரியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு, இந்தியாவில், தனி தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.இங்கு, அந்தந்த நாடுகளின், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், தொழிற்சாலைகளை அமைக்கும்.இந்தியாவில், தொழில் பூங்காக்களை அமைக்க, சீனா ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தொழில் துவங்க விரும்பும் நிறுவனங்கள் பட்டியலை வழங்குமாறு, சீன அரசு அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளது.
இதேபோல, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், இந்தியாவில் தொழில் பூங்காக்கள் அமைக்க விரும்பினால், வரவேற்கப்படும். அந்நிறுவனங்களுக்கு, ‘சிறப்பு அந்தஸ்து’ அளிக்கப்படும்.இதுபோன்ற நடவடிக்கைகளால், புத்தாண்டிலும், அன்னிய முதலீட்டாளர்களின் தலைசிறந்த முதலீட்டு மையமாக, இந்தியா திகழும்.அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில், துறை சார்ந்த பிரச்னைகளுக்கு, தீர்வு காணப்படும்.
ஏற்கனவே, தொழில் துவங்குவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இதனால், உலக வங்கி அறிக்கைப்படி, சுலபமாக தொழில் துவங்கும் வசதியுள்ள நாடுகளில், இந்தியா, 130வது இடத்தில் இருந்து, 77வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு :
தமிழக அரசு, அன்னிய முதலீடுகளை ஈர்க்க, 2019, ஜன., 23, 24 தேதிகளில், சென்னையில், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறது. இதுபோல, மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திரா, ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள், அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் தீவிரமாக உள்ளன.
இந்தாண்டு, அன்னிய நிறுவனங்கள், கணினி ஹார்டுவேர்,சாப்ட்வேர், கட்டுமானம், வர்த்தகம், வாகனம், மருந்து, ரசாயனம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் அதிகபட்ச முதலீட்டை மேற்கொண்டன. அன்னிய முதலீடுகளில், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, சைப்ரஸ், ஜப்பான், சிங்கப்பூர், மொரீஷியஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆண்டுக்காண்டு ஏறுமுகம் :
கடந்த, 2017 -– 18ம் நிதியாண்டில், மறு முதலீடு உட்பட, மொத்த அன்னிய நேரடி முதலீடு, 6,196 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, 2016 -– 17ம் நிதியாண்டில், 6,022 கோடி டாலராக இருந்தது. இவை, ரூபாய் மதிப்பில், முறையே, 4.33 லட்சம் கோடி மற்றும் 4.21 லட்சம் கோடி ஆகும். நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், ஏப்ரல் – ஜூன் காலாண்டில், 1,686 கோடி டாலர், அதாவது, 1.18 லட்சம் கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீடு குவிந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|