பதிவு செய்த நாள்
31 டிச2018
07:18
ஐந்து ஆண்டு கால ஆட்சியின் கடைசி ஆறு மாதங்கள்... தேசிய அளவிலான தேர்தல் முடிந்து, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியில் அமரப் போகும், புதிய அரசின் அடுத்த ஆறு மாதங்கள்...இந்த விறுவிறுப்பான அரசியல் சூழலில், முதலீட்டு பார்வைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்கு முதலீட்டாளர்கள் தள்ளப்படுவது உறுதி. இதற்கான பின்புலம் என்ன? இதில், அரசியல் மற்றும் பொருளாதார தாக்கம் எத்தகையது? இதை புரிந்து கொள்ள, முதலீட்டாளர்கள் ஐந்து ஆண்டுகளில் என்ன செய்தனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அடிப்படையில், 2014ம் ஆண்டில் மட்டும் தான், மோடி அரசு எடுத்த கொள்கையின் அடிப்படையில் முதலீட்டு தேர்வுகள் அமைந்தன. ஆனால், தொடர்ந்து பொருளாதார மாற்றங்கள் வேகம் பிடிக்காத சூழலில், முதலீட்டாளர்கள், தங்கள் தேர்வுகளை, அரசியல் தாக்கத்திலிருந்தும், கொள்கை மாற்ற தாக்கத்திலிருந்தும் தனிமைப்படுத்த துவங்கினர்.
நிறுவனங்களின் அடிப்படையில் மட்டுமே, தேர்வுகள் அமைந்தன. அது மட்டுமின்றி, பெரு நிறுவன தேர்வுகள் தவிர்க்கப்பட்டு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை தேடியே முதலீடுகள் குவிந்தன.இந்த மாற்றம், முதலீட்டாளர்களின் முதலீட்டு பார்வைகளின் பிரதிபலிப்பு தானே ஒழிய, அரசியல் மாற்றங்கள் சார்ந்து அமைந்தது அல்ல. இந்த போக்கில் பலர் வெற்றி கண்டதை கண்டு, மற்றவர்களும் அதே பாதையை தேர்ந்தெடுத்தனர்.
இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக, மோடி அரசின் பொருளாதார பார்வைகள் சார்ந்து, முதலீட்டை தேர்வு செய்யாமல், வேறு முறைகளில் முதலீடுகள் செய்து, பலர் வெற்றியும் கண்டனர்.இந்த போக்கு தொடர்ந்து, 2018ல் நிலைக்கவில்லை. சந்தையில் ஒரு குறுகிய பகுதியில் முதலீடுகள் குவிந்தும், அது, சந்தையின் சரிவில் முடிந்தது. ஒரு குறிப்பிட்ட தேர்வு முறையில் அமையும் பங்குகளில் முதலீடுகள் குவிந்தும், சந்தை சரிந்தது பலருக்கு அதிர்ச்சியை தந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து முதலீட்டாளர்கள் இன்னமும் மீளாத ஒரு சூழலில் தான், அவர்கள் அடுத்தகட்ட நகர்வுக்கு, தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் வீழ்ச்சி கண்ட பெருவாரியான நிறுவனங்களின் பங்கு மதிப்பு கூடுமா என, ஏங்கி காத்திருக்கும் முதலீட்டாளர்கள், தங்கள் தேர்வுகளை, அரசு கொள்கை சார்ந்து அமைத்துக் கொள்ளக்கூடிய நிலைக்கு, 2019ல் தள்ளப்படலாம்.இதற்கு, முதலீட்டாளர்கள் முதலில் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான நிறுவன அளவிலான ஆய்வுகளை செய்யவும், கொள்கை மாற்றங்கள் செல்லும் திசை சார்ந்த முதலீட்டு பார்வைகளை அமைத்துக் கொள்ளவும், வரும் காலாண்டு காலத்தை முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.
முதலீடுகளை உரிய நேரத்தில், சரியான புரிதல் சார்ந்து, மாற்றி அமைத்துக்கொள்ள இது பெரிதும் உதவும். இந்த காரணங்களால், 2019ம் ஆண்டு, ஒரு சவாலான ஆண்டாகவே முதலீட்டாளர்களுக்கு அமையும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|