பதிவு செய்த நாள்
23 ஜன2019
23:33
புதுடில்லி : நாட்டின் இறால் ஏற்றுமதி, 10 மாதங்களில், 20.63 சதவீதம் உயர்ந்து, 394 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, இந்திய ரூபாய் மதிப்பில், 27 ஆயிரம் கோடியாகும்.
இது குறித்து, கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல், நடப்பு ஜனவரி வரை, நாட்டின் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி, 13.27 சதவீதம் அதிகரித்து, 564 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, இந்திய ரூபாய் மதிப்பில், 39 ஆயிரம் கோடியாகும். இதில், இறால்களின் பங்கு, 27 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உள்ளது. இந்திய கடல் உணவு ஏற்றுமதியில், பதப்படுத்தப்பட்ட இறால், தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியில், அளவு மற்றும் வருவாயில், இறால் முறையே, 42.05 சதவீதம் மற்றும் 69.95 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.இதே காலத்தில், இறால் ஏற்றுமதி, 4 லட்சத்து, 56 ஆயிரத்து, 404 டன்னாக உயர்ந்துள்ளது. இது, 2017 – -18ம் நிதியாண்டின், ஏப்ரல் – ஜனவரி வரை, 3 லட்சத்து, 78 ஆயிரத்து, 355 டன்னாக இருந்தது.
விதிமுறை:
ஐரோப்பிய கூட்டமைப்பு, பதப்படுத்தப்பட்ட இறால்களில், நச்சு அளவீடு தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்கி உள்ளது.இதனாலும், இறால் உற்பத்தியில் முன்னணியில் உள்ள சில நாடுகளின் அபரிமிதமான ஏற்றுமதியாலும், சர்வதேச சந்தையில், இறால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இருந்தபோதிலும், இந்திய இறால்களின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, சர்வதேச சந்தையில், பதப்படுத்தப்பட்ட இறால் மற்றும் மீன் ஏற்றுமதியில், இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்தியா கடல் உணவு பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில், அமெரிக்கா, 34 சதவீத பங்குடன், முதலிடத்தில் உள்ளது.இதை தொடர்ந்து, தென் கிழக்கு ஆசியா, ஐரோப்பிய கூட்டமைப்பு, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சீனாவும் உள்ளன.இந்திய கடல் உணவுகளின் தனிச் சுவை காரணமாக, அவற்றுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு காணப்படுகிறது.
இந்தியாவில் இருந்து, கறுப்பு புலி இறால், வனாமி, பதப்படுத்தப்பட்ட கடல் புலி இறால் வகைகள் அதிக அளவில் ஏற்றுமதியாகின்றன.
துறைமுகம்:
மதிப்பீட்டு காலத்தில், இந்திய துறைமுகங்கள், 564 கோடி டாலர் மதிப்புள்ள, 10 லட்சத்து, 85 ஆயிரத்து, 378 டன் கடல் உணவு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளன. இதில், குஜராத்தின், பிபாவவ் துறைமுகம், 2 லட்சத்து, 47 ஆயிரத்து, 873 டன் கடல் உணவு பொருட்களை கையாண்டு, முதலிடத்தை பிடித்துள்ளது.அடுத்த இடங்களில், விசாகப்பட்டினம், ஜவஹர்லால் நேரு துறைமுகம், கிருஷ்ணப்பட்டினம், துாத்துக்குடி, சென்னை மற்றும் மங்களூரு துறைமுகங்கள் உள்ளன.
இறால் உற்பத்தியில், ஆந்திரா, தமிழகம், மஹாராஷ்டிரா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|