பதிவு செய்த நாள்
28 ஜன2019
07:31
வரி சேமிப்புக்கான முதலீட்டை தேர்வு செய்யும் போது, பல்வேறு அம்சங்களை பரிசீலிக்க வேண்டும். இந்த வகை முதலீட்டின் நோக்கம், வரிச்சலுகை பெறுவது தான் என்றாலும், அதை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. அந்த முதலீடு, நிதி இலக்கிற்கும் உகந்ததாக இருக்க வேண்டும். எனவே தான் வரிசேமிப்பை, முதலீட்டை தனியே மேற்கொள்ளாமல், ஒட்டுமொத்த நிதி திட்டமிடலில், ஒரு அங்கமாக கொள்ள வேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது.
வரி சேமிப்பு முதலீட்டிற்கான நிதி சாதனத்தை தேர்வு செய்யும் போது, குறிப்பிட்ட அந்த முதலீடு, குறுகிய கால நோக்கில் வரிச்சலுகை பெற உதவுவதோடு, நீண்ட கால நோக்கில் நிதி இலக்குகளை நிறைவேற்றவும் உதவ வேண்டும். இதற்கு ஒருவரின், ‘ரிஸ்க்’ உள்ளிட்ட அம்சங்களையும், கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், முதலீடு செய்பவரின் வயதும் இதில் முக்கிய பங்கு வகிப்பதை உணர வேண்டும்.
இளைஞர்களுக்கு முதலீடு:
பலவகை வரி சேமிப்பு முதலீடுகள் இருந்தாலும், ஒரு முதலீடு எல்லா தரப்பினருக்கும் ஏற்றதாக இருக்கும் என, சொல்ல முடியாது. உதாரணமாக, புதிதாக சம்பாதிக்கத்துவங்கியிருக்கும் இளைஞர் ஒருவரை எடுத்துக்கொள்வோம். வரி சேமிப்புக்காக அவர், பி.பி.எப்., முதலீடு அல்லது ஆயுள் காப்பீட்டை நாடலாம். இதன் மூலம் வரிசேமிப்பின் பலனை பெற முடியும் என்றாலும், இதில் உள்ள சிக்கல்களை நினைத்துப்பார்க்க வேண்டும். பி.பி.எப்., ஆயுள் காப்பீடு இரண்டுமே நீண்ட கால முதலீடு. இது, அவருக்கு பொருத்தம் இல்லாமல் அமையலாம்.
சம்பாதிக்க துவங்கியிருக்கும் இளைஞருக்கு, குறுகிய கால பணத்தேவைகள் அதிகம் இருக்கலாம். இது போன்ற நேரங்களில், வரிச்சேமிப்புக்காக நீண்ட கால முதலீடுகளை நாடியிருந்தால், அந்த பணத்தை எடுக்க முடியாது. எனவே, வயதில் இளையவர்கள் எனில், எளிதில் பணமாக்கும் தன்மை உடைய குறுகிய கால முதலீடுகளை, வரிசேமிப்புக்காக நாடுவது சரியாக இருக்கும். ஆயுள் காப்பீடு முக்கியம் என்றாலும், முதலீடு அம்சம் கொண்ட பாலிசி எடுப்பதற்கு பதில், பாதுகாப்பு மட்டும் அளிக்கும், ‘டெர்ம் பாலிசி’யை நாடலாம். பொதுவாக, வரி சேமிப்பு முதலீட்டில் சமபங்கு அம்சம் இருப்பதும் சிறந்தது என, சொல்லப்படுகிறது.
சம்பங்கு அம்சம்:
இதன் மூலம் நீண்ட கால நோக்கிலான பலனையும் பெறலாம். எனவே, ஒருவர் தன் தேவை மற்றும் ரிஸ்க் அம்சங்களுக்கு ஏற்ப, சமபங்கு அம்சம் கொண்ட முதலீடுகளை தேர்வு செய்ய வேண்டும். இ.எல்.எஸ்.எஸ்., அல்லது யூலிப்களை நாடலாம். ஓய்வு கால சேமிப்பிற்கு, சமபங்கு அம்சம் கொண்ட என்.பி.எஸ்., திட்டத்தை நாடலாம். இளம் வயதினர், சமபங்கு அம்சம் கொண்ட முதலீட்டை அதிகம் நாடுவது ஏற்றதாக இருக்கும். இந்த அடிப்படையில், வரி சேமிப்பு முதலீடு வயதுக்கேற்பவும் அமைவது பொருத்தமாக இருக்கும் என, வலியுறுத்தப்படுகிறது.
மத்திய தர வயதினர் எனில், பொறுப்புகள் அதிகம் இருக்கும் என்பதோடு, நிதி இலக்குகள் குறித்த தெளிவும் இருக்கும். இந்த கட்டத்தில் காப்பீடு போதுமானதாக இருக்கிறதா, என பரிசீலிக்க வேண்டும். பி.பி.எப்., உள்ளிட்ட கடன்சார் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். ஓய்வு காலத்தை நெருங்கும் போது, குறைந்த ரிஸ்க் உடைய மற்றும் நிலையான வருமானம் அளிக்கும் முதலீட்டு வாய்ப்புகளை நாடுவது பொருத்தமாக இருக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|