பதிவு செய்த நாள்
04 பிப்2019
00:25
வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட், வரும் பொதுத் தேர்தலுக்கான கொந்தளிக்கும் சந்தை சூழலை உருவாக்கி விட்டது என்றே சொல்ல வேண்டும்.
கடந்த சில வாரங்களாக, சந்தையின் போக்கில் ஒரு வித அச்சம் தெளிவாக தெரிந்தது. அது ஆட்சி மாற்றமோ, நிலையற்ற ஆட்சியோ அமையும் என்ற எண்ணத்தால் ஏற்பட்டது என்பது, நாம் அனைவரும் அறிந்ததே.அப்படி ஒரு நிலையற்ற ஆட்சி அமைந்தால், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கள் இந்திய முதலீடுகளை எப்படி அணுகுவர் என்கிற கவலை, உள்நாட்டு முதலீட்டாளர்கள் மனதில் ஏற்பட்டு விட்டது.
நிலையான ஆட்சி பற்றிய முதலீட்டாளர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளும் நியாயமானது தானா? ஆட்சி மாற்றம் என்பது, ஜனநாயகத்தில் நடக்கக்கூடிய இயல்பான நிகழ்வு. அதற்கு, ஏன் முதலீட்டாளர்கள் அஞ்ச வேண்டும்?
மத்தியில் நிலையான ஆட்சி, சீரான பொருளாதார கொள்கைகள், வளர்ச்சிக்கு வழிவகுக்கும் கொள்கைகள், மக்கள் நலம் சார்ந்த பொருளாதார மேலாண்மை ஆகியவை உள்ளடக்கிய ஆட்சி, சந்தைக்கு மிக அத்தியாவசியமாகும்.கடந்த ஆண்டு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியில் இருந்து மீள, முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.
அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற, சந்தையில் தொடர்ந்து பன்னாட்டு முதலீடுகளும், நேரடி அன்னிய முதலீடுகளும் பெருக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. அப்படி அமைந்தால், தங்கள் சந்தை முதலீடுகள் உரிய வெற்றி அடையும் என்பதே முதலீட்டாளர்களின் நம்பிக்கை.
ஆட்சியில் இருக்கும் கட்சியே தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டம், பெரும்பாலான உள்நாட்டு முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பாக இருப்பதும் இதைச் சார்ந்ததே ஆகும்.மேலும், இந்த அரசு தங்களுக்கு போதிய சலுகைகள் தரவில்லை என்கிற வருத்தம், அதன் ஆதரவாளர்களின் மத்தியில் இருப்பதும் உண்மை. இதற்கு காரணம், இந்த அரசு, உள்நாட்டு முதலீட்டாளர்கள் மீது தொடர்ந்து பல விதமான வரிகளை சுமத்தியது.
இருப்பினும், அதை முதலீட்டாளர்கள் ஏற்று அரசுக்கு ஆதரவு தந்தனர். காரணம், நிலையான ஆட்சி தொடர வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்ந்திருந்ததால் தான்.இந்த சூழலில், அடுத்து ஆட்சிக்கு யார் வருவர் என்பதை யூகிக்க துடிக்கும் சந்தைக்கு, இந்த பட்ஜெட் ஒரு நற்செய்தியாக அமைந்தது.வாக்காளர்கள் மத்தியில் அரசுக்கு ஆதரவு தொடரும் என்ற எதிர்பார்ப்பு கூடி உள்ளது.
இனி வரும் வாரங்களில், கருத்துக் கணிப்புகள் மேலும் சாதகமானால், சந்தை மேலும் உயர வாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிறது. மாறாக, மீண்டும் இழுபறி நிலை ஏற்பட்டால், சந்தையின் அச்சம் பெருகும்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
பங்குச்சந்தை
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|