பதிவு செய்த நாள்
02 மார்2019
23:47
‘‘போலி பில் தயாரித்து வழங்குபவர்களின் செயல்கள், நீண்ட நாட்களுக்கு நீடிக்காது,’’ என, சென்னை புறநகர், ஜி.எஸ்.டி., மண்டல ஆணையர், ஜி.ரவீந்திரநாத் தெரிவித்தார்.
சென்னை உட்பட, தமிழகம் முழுவதும், போலி பில்கள் தயாரித்து மோசடி மற்றும் வரி ஏய்ப்பு செய்யும் நபர்களை, ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி துறை அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர்.இது போன்ற நடவடிக்கையில், சென்னை புறநகர், ஜி.எஸ்.டி., ஆணையரகமும் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து, புறநகர், ஜி.எஸ்.டி., ஆணையர், ஜி.ரவீந்திரநாத் கூறியதாவது:சென்னை புறநகர் ஆணையரகத்தின் கீழ், கிழக்கு கடற்கரையோரம் உள்ள பல்வேறு மாவட்டங்கள், புதுச்சேரியின் பல பகுதிகள் வருகின்றன.போலி பில் வழங்கி, உள்ளீட்டு வரி சலுகைகளை பெறும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பொதுவாக உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள், போலி பில்கள் வழங்குவதுமில்லை; பெறுவதும் இல்லை. வணிகத்தில் ஈடுபடும் வணிகர்களே, இது போன்ற செயல்களில் ஈடுபட்டு, உள்ளீட்டு வரி சலுகைகளை பெற விரும்புவர்.ஒவ்வொரு வணிகர்களின் பரிவர்த்தனைகளும், தொழில்நுட்ப ரீதியில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்களது ஆரம்ப கால வரலாறு முதல், தற்போது வரையிலான பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
போலி பில் தயாரிப்பில் ஈடுபடுவோர் குறித்து, விசாரணை நடந்து வருகிறது. அவர்களின் செயல்கள் நீண்ட நாட்கள் நீடிக்காது. விரைவில் அதற்கு தீர்வு காணப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|