பதிவு செய்த நாள்
03 மார்2019
23:35
போர் அபாயம், எல்லை தாக்குதல்கள், நாட்டின் மொத்த உள்நாடு உற்பத்தி வளர்ச்சி எதிர்பார்ப்பை விட குறைவு என, தொடர்ந்து சந்தையை அச்சுறுத்தும் விதமாக, பல தகவல்கள் வந்த போதும், சந்தை அதிகம் விழவில்லை.
‘நிப்டி’ மற்றும், ‘சென்செக்ஸ்’ தொடர்ந்து வலிமை காட்டி வருவதை, சந்தை பார்வையாளர்கள் கவனித்து வருகின்றனர். ஆனால், குறியீடுகள் குறையாவிட்டாலும், சந்தையின் பெருவாரியான பங்குகள் மதிப்பிழந்த நிலையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன.
குறியீடுகள் வெளிப்படுத்தும் வலிமை, நமக்கு என்ன உணர்த்துகிறது? இந்த சூழ்நிலையில் நம் முதலீடுகளை வலிமைப்படுத்த, நாம் என்ன செய்ய வேண்டும்?சந்தை குறியீடுகள் விழாமல் இருக்க முக்கிய காரணம், எப்.ஐ.ஐ., எனும் அன்னிய முதலீட்டாளர்கள், மீண்டும் இந்திய பங்குகளை வாங்க துவங்கியதும், பி.எப்., நிதி சேமிப்புகள் குறியீடுகளில் செலுத்தப்படுவதும் தான்.
பிம்பம்
இந்த இரண்டு முன்னேற்றங்களும், சந்தைக்கு தக்க சமயத்தில் கை கொடுத்துள்ளன. தொடர்ந்து, போர் நிலைமை மோசமடையாமல் அமைதி திரும்பும் பட்சத்தில், சந்தை மேலும் உயர வாய்ப்புகள் அதிகம். இதற்கு உள்நாட்டு அரசியல் காரணங்களும் உண்டு.சில வாரங்களுக்கு முன், தேர்தல் கணிப்புகள், நிலையான ஆட்சி அமையாது என்ற பிம்பத்தை ஏற்படுத்தி வந்தன.
ஆனால், ஆளும் தரப்பு அமைத்து வரும் கூட்டணி வியூகங்களும், எதிர் தரப்பில் ஏற்பட தவறிய ஒற்றுமையும், சந்தையின் அரசியல் பார்வையை மாற்றி உள்ளன.வரும் வாரங்களில் அரசியல் பார்வைகள் மாறக்கூடும்; போர் அச்சங்கள் விலகவும் செய்யலாம். நிலையான ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பு வலிமை பெறலாம்.வளரும் சூழல் பற்றிய தெளிவு, பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை வளர்க்கலாம்.
இன்னும் தாமதப்படுத்தினால், இந்திய பங்குகளில் முதலீடு செய்து, உரிய நேரத்தில் லாபமடையும் வாய்ப்பு நழுவுமோ என்ற எண்ணம் தோன்றலாம்.சூழல் மாற்றங்கள், சந்தை போக்கை மிக விரைவாக மாற்றி அமைக்கவும் செய்யலாம். அப்போது, பன்னாட்டு முதலீட்டாளர்கள், மீண்டும் இந்திய சந்தையின் போக்கை நிர்ணயிப்பர்.
எதிர்பார்ப்பு
இந்திய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், கடந்த ஆண்டு, சந்தை வீழ்ச்சி அடையாமல் தடுத்தன. ஆனால், அந்நிறுவனங்களின் முதலீட்டாளர்கள், அதிக லாபம் அடையவில்லை; பலர், நஷ்டம் கண்டனர்.மீண்டும் சந்தை ஏற்றம் காணும் போது, இவை முதலீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டி தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூடும்.
சந்தை காணக்கூடிய மாற்றங்களை, முதலீட்டாளர்களாகிய நாம், கூர்ந்து கவனிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். வரும் வாரங்கள், மிக இக்கட்டான காலகட்டம் என்றே சொல்ல வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|