பதிவு செய்த நாள்
29 மார்2019
00:20
புதுடில்லி, மார்ச் 29–நடப்பு நிதியாண்டிற்கான நேரடி வரி வருவாய், இலக்கை விட குறையும் நிலை உருவானதை அடுத்து, வசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு, வருமான வரி அதிகாரிகளுக்கு, மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
இவ்வாரியத்தின் வருவாய் பிரிவு உறுப்பினர், நீனா குமார், பிராந்திய வருமான வரித் துறை தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது: நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், நேரடி வரிகள் மூலம், 12 லட்சம் கோடி ரூபாய் திரட்ட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடப்பு மார்ச், 23ம் தேதி வரை, 10 லட்சத்து, 21 ஆயிரத்து, 251 கோடி ரூபாய் தான் வசூலாகியுள்ளது.இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, 14.9 சதவீதம் குறைவாகும். அதனால், வரி வசூலுக்கு பொறுப்பேற்றுள்ள அதிகாரிகள், எந்தெந்த பிரிவுகளில் வருவாய் மந்த மாக உள்ளது என்பதை கண்டறிந்து, அவற்றில் கவனம் செலுத்தி, வசூலை அதிகரிக்க வேண்டும்.
முன்கூட்டிய வரிதனி நபர் வருமான வரி, கார்ப்பரேட் நிறுவனங்கள் வரி மற்றும் முன்கூட்டியே செலுத்தும் வரி ஆகியவற்றை உள்ளடக்கிய, நேரடி வரிகளில், எந்த பிரிவு சுணக்கத்தில் உள்ளது என்பதை ஆராய்ந்து, வசூல் நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும். கடந்த வாரம், வரி வசூல் வளர்ச்சி, மைனஸ் 5.2 சதவீதத்தில் இருந்து, மைனஸ் 6.9 சதவீதமாக பின்னடைவைக் கண்டுள்ளது.இது, மிகவும் ஏமாற்ற மாக உள்ளது. எனவே, வரித் துறை அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு, நிலுவையில் உள்ள வரி உட்பட, வரி வருவாயை அதிகரிக்க வேண்டும். வரி மதிப்பீட்டு ஆண்டில், திரட்டப்படும் வரி வருவாய் தான், வரித் துறையின் செயல்பாட்டிற்கு அளவுகோலாக உள்ளது. அதன் அடிப்படையில் தான், நிகர வரி வருவாய் மதிப்பீடு செய்யப்படுகிறது.
வரி வசூலை அதிகரிப்பது தொடர்பாக, வருமான வரித் துறை அதிகாரி களிடம் பலமுறை பேச்சு நடத்தப்பட்டுள்ளது. அப்போது, வரி வசூலை உயர்த்துவதற்கான திட்டங்களும் முன்வைக்கப்பட்டன.அத்திட்டங்களை திறம்பட செயல்படுத்தி இருந்தால், வரி வசூல் அதிகரித்திருக்கும். ஆனால், தற்போதைய வரி வசூல் அவ்வாறு இல்லை.அதனால், வரித் துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, அனைத்து வழிகளிலும் வரி வருவாயை அதிகரிக்க வேண்டும். நடப்பு நிதியாண்டு முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ளதால், சிறிதும் தாமதிக்காமல், நிலுவையில் உள்ள வரி உள்ளிட்டவற்றை வசூலிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமும் ஆய்வு:
மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர், பி.சி.மோடி, சமீபத்தில் காணொலி காட்சி மூலம், நாடு முழுவதும் உள்ள வருமான வரித் துறைஉயரதிகாரிகளிடம் பேசினார்.அப்போது, நேரடி வரி வருவாய் குறைந்தது குறித்து கவலை தெரிவித்த அவர், நடப்பு நிதியாண்டிற்கு நிர்ணயித்த இலக்கை அடைய, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார்.அன்றாட வரி வருவாய் நிலவரங்களை, பி.சி.மோடி கண்காணித்து வருகிறார். முன்கூட்டியே செலுத்தப்பட்ட வரி, நிலுவையில் உள்ள வரி, வரி ஏய்ப்பை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்காணிக்கிறார்.தாமாகவே முன்வந்து கறுப்பு பண விபரங்களை அளித்து, முறையாக வரி செலுத்துவோர் குறித்தும், அவர் ஆய்வு செய்கிறார் என, வருமான வரித் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|