பதிவு செய்த நாள்
08 ஏப்2019
00:00
லோக்சபா தேர்தல் நெருங்கும் போது, ஏராளமான எதிர்பார்ப்புகள் வெளியே தெரியவரும். மக்களுடைய எதிர்பார்ப்புகள் ஒருபுறம் என்றால், தொழிலதிபர்கள், நுண், சிறு, குறு, நடுத்தரத் தொழில்முனைவோர், வர்த்தகர்களின் எதிர்பார்ப்புகள் மறுபுறம். புதிய அரசிடம் இருந்து இவர்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்?
கடந்த ஐந்து ஆண்டுகளில், பா.ஜ., அரசு தொழில்துறைக்குப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றித் தந்தது. மேக் இன் இந்தியா, அன்னிய நேரடி முதலீட்டின் அளவுகளை உயர்த்துவது என்றெல்லாம் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மிகச் சிறு தொழில்களை வளர்த்தெடுக்க, முத்ரா கடன்கள் கொடுக்கப்பட்டன.
ஆனாலும், ஐந்தாண்டுகள் என்பது கொஞ்சம் நீண்ட காலம். திருப்தியைப் போலவே அதிருப்தியும் வளர்ந்துகொண்டே இருக்கும். இன்னும் செய்திருக்கலாம், போதவில்லை என்ற எண்ணமும் தொழிலதிபர்களிடையே உண்டு.அதேபோல், வளர்ச்சிக்கு அடையாளமாக ஒருசில துறைகள் சொல்லப்படுவதுண்டு. குறிப்பாக, இரு சக்கர, நான்கு சக்கர வாகன விற்பனை அதிகமானால், அது சுபிட்சத்தின் அடையாளமாக கருதப்பட்டது.
எதிர்க்கட்சிகள், வளர்ச்சி எங்கே என கேட்ட போது, ஆட்டோமொபைல் துறையின் முன்னேற்றத்தையே அரசு தரப்பினர் முன்வைத்தனர்.ஆனால், இப்போது அந்த நிலைமை இல்லை. மார்ச் மாதத்தின் இறுதியில், ‘மாருதி சூசுகி’ நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அதன் கார் உற்பத்தி, சென்ற ஆண்டைவிட, 21 சதவீதம் குறைந்துள்ளது. பிப்ரவரி மாதம் மட்டும், 8 சதவீதம் குறைவு.
விற்பனையாளர்களிடம் கார்களின் இருப்பு அதிகமாகிக் கொண்டே போவதால், உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.வாகன காப்பீட்டுத் தொகை அதிகரித்திருப்பதோடு, கார்கள் வாங்குவதற்குக் கிடைத்து; வந்த கடன்களின் அளவு குறைந்துள்ளது. வட்டி விகிதமும் உயர்ந்துள்ளது; இதனால், மக்கள் துணிந்து கார்களை வாங்க மறுக்கின்றனர்.இன்னொரு செய்தியும் கவனிக்கத்தக்கது. விவசாயத்துக்கு பயன்படும் டிராக்டர்களின் விற்பனை, கடந்த ஓராண்டில் பாதியாக குறைந்துவிட்டது.
2018-- – -19 நிதியாண்டில், டிராக்டர்களின் விற்பனை வளர்ச்சி, 8 சதவீதம் தான், ஆனால், இதற்கு முந்தைய நிதியாண்டிலோ விற்பனை வளர்ச்சி, 20 சதவீதமாக இருந்தது.டிராக்டர்கள் வாங்குவதற்கான கடன் கிடைப்பதில் சிக்கல், குறுவை சாகுபடியின் அளவு குறைந்து போனது, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் போனது என, இந்த சரிவுக்குப் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த சூழ்நிலையில் தான் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. பல்வேறு தொழில் கூட்டமைப்புகளும், சங்கங்களும் வெளிப்படையாகவே தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்துள்ளன. தங்களது சிரமங்களைப் பட்டியலிட்டு, இவற்றையெல்லாம் அடுத்து வரும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே அவற்றின் கோரிக்கை.
கோரிக்கைகள் என்ன?
பெரிய தொழில்கள் ஒருசில விஷயங்களைக் கேட்கின்றன. வங்கிக் கடன்கள் வேண்டும், ஜி.எஸ்.டி., எளிமைப்படுத்தப்பட வேண்டும். சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும், கட்டுப்பாடுகளைக் குறைக்க வேண்டும். வரி வன்முறை கூடாது என்பவை தான் பெரும்பாலும் ஒலிக்கும் கோரிக்கைகள்.
எம்.எஸ்.எம்.இ., பகுதியினர் தான் அதிகம் பேசியிருக்கின்றனர். இந்தியாவின் பெருமளவி லான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இந்த துறையினரின் வேதனைகள் கொஞ்சம் யோசிக்க வைக்கின்றன.குத்தகைக்கு விடப்படும் தொழிற்சாலை நிலங்களை அந்தந்த தொழிற்சாலைகளுக்கே விற்பனை செய்ய வேண்டும். இதனால், தொழில் வளர்ச்சிக் கழகம் உட்பட பல்வேறு அரசு நிறுவனங்களால் ஏற்படும் தொல்லை இருக்காது.
தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்கு கொடுக்கப்படும் மானியத்தால், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்தகைய ஏற்றத்தாழ்வு கூடாது. ஒரு தரப்பு நிறுவனங்களுக்கு ஒரு கட்டணமும் இன்னொரு தரப்பு நிறுவனங்களுக்கு வேறொரு கட்டணமும் வசூலிப்பது, ஒரு கண்ணில் வெண்ணெயையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பது போலிருக்கிறது என்கின்றனர்.
தொழிற்சாலை நிலங்களை மேம்படுத்துவதற்கு விதிக்கப்படும் வரி குறைக்கப்பட வேண்டும். அதேபோல், 2 கோடி ரூபாய் வரை வாங்கப்படும் தொழிற்கடனுக்கு, வீட்டுக்கடனுக்கு வாங்கப்படும் வட்டி விகிதமே நிர்ணயிக்கப்பட வேண்டும்.டில்லி நொய்டாவைச் சேர்ந்த, எம்.எஸ்.எம்.இ., கூட்டமைப்பு வைத்துள்ள கோரிக்கைகள் முக்கியமானவை.பெரிய நிறுவனங்கள் வந்து முதலீடு செய்து தொழிற்சாலைகளைத் தொடங்கினால் தான், எம்.எஸ்.எம்.இ., தொழில்கள் செழிக்கும்.
கடந்த, 15 ஆண்டுகளாக, நொய்டாவில் எந்த புதிய பெரிய தொழிற்சாலைகளும் அமைக்கப் படாத நிலையில், இவர்களுடைய உற்பத்தியும், வளர்ச்சியும் தேக்க நிலையை எட்டி விட்டன.இதே நிலைமை, அனைத்து பெருநகரங்களுக்கு அருகே இருக்கும் தொழிற் பகுதிகளுக்கும் பொருந்தும்.மருத்துவ துறையில் உள்ள, எம்.எஸ்.எம்.இ.,க்கள் வேறொரு கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
இந்திய அரசு கொள்கைகளை வகுக்கும் போது, அவை பன்னாட்டு மருந்து நிறுவனங்களை மனதில் கொள்கின்றன. மாறாக, இத்துறையில் உள்ள சிறு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளையும் விவாதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம், தொழில் வாய்ப்புகள் பரவலாகும்.அனைத்திந்திய வர்த்தகர் அமைப்பு, ஒருவித மிரட்டல் தொனியில் தங்கள் கோரிக்கைகளை வைத்துள்ளன.
ஏழு கோடி வர்த்தகர்களையும், அவற்றில் பணியாற்றும், 30 கோடி ஊழியர்களையும் ஓட்டு வங்கியாக கருதி வைக்கப்படும் கோரிக்கைகள் இவை.பல பகுதிகள் வாடகைச் சட்டம், வர்த்தகர்களுக்கு விரோதமாக இருக்கிறது. அதைத் திருத்த வேண்டும். மின்னணு வர்த்தகத்தை எந்த அரசும் நெறிப்படுத்த முனைவதில்லை. அவர்கள் வழங்கும் டிஸ்கவுண்டுகள் முன்னே சாதாரண வர்த்தகர்கள் நிற்க முடியாது. நியாயமற்ற ஏற்றத்தாழ்வு இது. இதை அடுத்து வரும் அரசு களைய வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை.
ஒரு தொழில் கூட்டமைப்பு வைத்த கோரிக்கை தான் வித்தியாசமானது. தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் இருப்பது போன்று, தொழில்முனைவோர்கள், முதலாளிகளுக்கும் ஓய்வூதியத் திட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும் என், கோரியுள்ளனர்.எல்லாருமே அரசில் உள்ள சிவப்பு நாடா, தாமதம், ஒப்புதல்களைப் பெறுவதற்கு வழங்க வேண்டிய கையூட்டு ஆகியவற்றால் நொந்துபோயுள்ளனர்.
தொழிலைச் சுலபமாக, நம்பிக்கையுடன் நடத்துவதற்கு வழி செய்து கொடுங்கள் என, கோருகின்றனர். இவற்றை கவனித்து வழி செய்து கொடுத்தால், தொழில்கள் மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரமே உயரும் என்பது நிச்சயம்.
ஆர்.வெங்கடேஷ்
பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|