பதிவு செய்த நாள்
23 ஏப்2019
23:40
மும்பை: ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அளித்த சலுகையை, அமெரிக்கா ரத்து செய்யப் போவதாக தகவல் வெளியானதால், நேற்று, இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது.
ஈரான் மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இருந்தபோதிலும், இந்தியா, சீனா உள்ளிட்ட எட்டு நாடுகள், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள, அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. இந்த சலுகையை, அமெரிக்கா, மே, 2ல் ரத்து செய்ய உள்ளதாக, நேற்று தகவல் வெளியானது. இதனால், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சர்வதேச சந்தையில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 2.56 சதவீதம் உயர்ந்து, 73.81 டாலராக அதிகரித்துள்ளது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ 495.10 புள்ளிகள் சரிவடைந்து, 38,645.18 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’ 158.35 புள்ளிகள் குறைந்து, 11,594.45 புள்ளிகளில் நிலை பெற்றது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 28 காசுகள் சரிவடைந்து, 69.63 ஆக குறைந்தது.ஒரு சில நிறுவனங்களின், நான்காம் காலாண்டு நிதி நிலை அறிக்கைகளும், சந்தை எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இல்லாததால், பங்குகள் விலை குறைந்து கைமாறின.
வர்த்தகம் பாதிக்கும் அபாயம்:
ஈரானில் இருந்து, இந்தியாவும், சீனாவும் அதிக அளவில், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கின்றன. அமெரிக்காவின் உத்தரவை மீறி, ஈரானில் இருந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால், அந்நாட்டுடன் இந்தியா, சீனா மேற்கொண்டு வரும் வர்த்தகம் பாதிக்கும் என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|