பதிவு செய்த நாள்
23 ஏப்2019
23:58
புதுடில்லி : ‘பி அண்டு ஜி., என, சுருக்கமாக அழைக்கப்படும், 'புராக்டர் அண்டு கேம்பிள்' நிறுவனம், ஜி.எஸ்.டி., குறைப்பின் பயனை நுகர்வோருக்கு வழங்காமல், 250 கோடி ரூபாய் லாபமீட்டியதை, மிகை லாப தடுப்பு தலைமை இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளது.
கடந்த, 2017, நவ.,15ல், 178 பொருட்களுக்கான, ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டது. இதன்படி, வாஷிங் பவுடர், ஷாம்பூ, அழகு சாதனங்கள், பற்பராமரிப்பு பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கான, ஜி.எஸ்.டி., 28 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.ஜி.எஸ்.டி.,யின், மிகை லாப தடுப்பு சட்ட விதிகளின் படி, ஜி.எஸ்.டி., குறைக்கப்படும் போது, அதனால் பெறும் பயனை, நுகர்வோருக்கு நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
அதாவது, நிறுவனங்கள் பொருட்கள் விலையை குறைக்க வேண்டும். அவ்வாறு விலை குறைப்பு செய்யாத நிறுவனங்கள் மீது, நுகர்வோர் புகார் அளித்தால், மிகை லாப தடுப்பு தலைமை இயக்குனரகம் நடவடிக்கை எடுக்கும்.
ஆய்வு:
அந்நிறுவனங்களின் வர்த்தக பரிவர்த்தனை ஆவணங்கள் பரிசீலிக்கப்படும். ஜி.எஸ்.டி., குறைப்புக்கு முன், குறைத்த பின் மேற்கொண்ட வியாபாரம் ஆராயப்படும்.அதில், வரி குறைப்பின் பயனை நுகர்வோருக்கு வழங்காமல் உள்ளது தெரியவந்தால், அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, தேசிய மிகை லாப தடுப்பு ஆணையத்திடம் பரிந்துரைக்கப்படும்.
இந்த வகையில், மிகை லாப தடுப்பு தலைமை இயக்குனரகத்திற்கு, பி அண்டு ஜி., நிறுவனம், வரி குறைப்பின் பயனை, நுகர்வோருக்கு வழங்கவில்லை என, புகார்கள் வந்தன.இதைத் தொடர்ந்து, பி அண்டு ஜி., நிறுவனத்தின் வர்த்தக பரிவர்த்தனைகள் ஆராயப்பட்டன. அதில், அந்நிறுவனம், வரி குறைப்பின் பயனை நுகர்வோருக்கு வழங்காதது தெரியவந்தது.அதன்படி, பி அண்டு ஜி., நிறுவனம், வரி குறைக்கப்பட்ட பொருட்களுக்கு, விற்பனை விலையை குறைக்காமல், 250 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பி அண்டு ஜி., நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க, தேசிய மிகை லாப தடுப்பு ஆணையத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பி அண்டு ஜி., அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்ட நிறுவனங்களிடம், அவை ஈட்டிய மிகை லாபம், அபராதமாக வசூலிக்கப்பட்டு, தேசிய நுகர்வோர் நல நிதியத்தில் சேர்க்கப்படும். கடந்த ஆண்டு, இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம், வரி குறைப்பின் பயனை, நுகர்வோருக்கு வழங்காமல், 535 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதை, மிகை லாப தடுப்பு தலைமை இயக்குனரகம் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.
புராக்டர் அண்டு கேம்பிள் நிறுவனம், சமூகப் பொறுப்புடன், எப்போதும் ஜி.எஸ்.டி., குறைப்பின் பயனை, நுகர்வோருக்கு வழங்கத் தவறியதில்லை. நிகர லாபத்தை, விலை குறைப்பின் மூலம் நுகர்வோருக்கு வழங்கியுள்ளோம். இது குறித்து, ஊடகங்களில் விளம்பரங்களையும் வெளியிட்டுள்ளோம்.
–செய்தி தொடர்பாளர் ,புராக்டர் அண்டு கேம்பிள்
நுகர்பொருட்கள் :
புராக்டர் அண்டு கேம்பிள் நிறுவனம், வாஷிங் பவுடர், அழகு மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறது. அவற்றில், ‘ஏரியல், டைட், ஹெட்ஸ் அண்டு ஷோல்டர்ஸ், பேன்டீன், ஓலே, கில்லட், ஓரல் – பி, பேம்பர்ஸ், விக்ஸ், விஷ்பர்’ போன்றவை அடங்கியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|