பதிவு செய்த நாள்
26 ஏப்2019
05:10
புதுடில்லி: சரக்கு போக்குவரத்தில்,வரி ஏய்ப்பு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க, ‘இ – வே பில்’ திட்டத்தில் சில மாற்றங்களை, மத்திய நிதியமைச்சகம் செய்துள்ளது.
ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தில் பதிவு செய்த வணிக நிறுவனங்கள், வேறு மாநிலங்களுக்கு அனுப்பும், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு மேற்பட்ட சரக்கிற்கு, ‘இ – வே பில்’ எனப்படும் மின் வழிச்சீட்டு அவசியமாகும். சரக்கு கொண்டு செல்லும் போது, வரி அதிகாரிகள் ஆய்வு செய்தால், இந்த சீட்டை காட்ட வேண்டும்.
ஓட்டை:
வரி ஏய்ப்பை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த மின்வழிச் சீட்டு திட்டத்திலும், சில ஓட்டைகள் மூலம், வரி செலுத்தாமல் பல்வேறு முறைகேடுகள் நடப்பது, தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு, ஏப்., – டிசம்பர் வரையிலான, ஒன்பது மாதங்களில், 15 ஆயிரத்து, 278 கோடி ரூபாய் அளவிற்கு, ஜி.எஸ்.டி., ஏய்ப்பு, விதிமீறல் போன்றவை நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, தொடர்பாக, 3,626 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய முறைகேடுகளை தடுக்க, மின்வழிச் சீட்டு நடைமுறையில் சில மாற்றங்களை, மத்திய நிதியமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, இனி,‘பின்கோடு’ எனப்படும், அஞ்சலக குறியீடு அடிப்படையில், சரக்கு போக்குவரத்து நடைபெறும் துாரம், தன்னிச்சையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். சரக்கு அனுப்புவோர், அதிகபட்சமாக, 10 சதவீத துாரத்தை மட்டுமே, மின்வழிச் சீட்டில் குறிப்பிட முடியும். உதாரணமாக, அஞ்சலக குறியீடு அடிப்படையில், 655 கி.மீ., துாரத்திற்கு சரக்கு போக்குவரத்து நடைபெற்றால், கூடுதலாக, 65 கி.மீ., துாரம் மட்டுமே பதிவு செய்ய முடியும். இதன்படி, அதிகபட்சமாக, 720 கி.மீ., வரை தான், மின்வழிச் சீட்டு செல்லுபடியாகும்.
இதனால், துார அடிப்படையில் நடைபெறும் முறைகேடுகள் முடிவுக்கு வரும். மேலும், ‘இன்வாய்ஸ்’ எனப்படும், விலைப்பட்டியல் மூலம், பல மின்வழிச் சீட்டுகளை உருவாக்கும் நடைமுறையும் முடிவுக்கு வருகிறது. இனி, ஒரு விலைப் பட்டியல் எண் மூலம், மின் வழிச்சீட்டு உருவாக்கப்பட்டால், அதே எண்ணில் மீண்டும் மின் வழிச் சீட்டை உருவாக்க முடியாது.
முற்றுப்புள்ளி:
சரக்கு அனுப்பும் நிறுவனம், சரக்கு பெறும் நிறுவனம், சரக்கை எடுத்துச் செல்லும் சரக்கு போக்குவரத்து நிறுவனம் ஆகியவை, ஒரு விலைப்பட்டியல் எண் மூலம், பல மின்வழிச் சீட்டுகளை உருவாக்குவது சாத்தியமில்லை என்பதால், இவ்வழியிலான முறைகேட்டிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சரக்கு போக்குவரத்து நடைபெறும் போது தாமதம் ஏற்படும்பட்சத்தில், மின்வழிச் சீட்டு காலாவதி நேரத்தை நீட்டிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், மின்வழிச் சீட்டின் காலாவதி நேரம் குறித்த தகவல்களை அறியும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மின்வழிச் சீட்டில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் சரக்கு சென்றடைவதை, உறுதி செய்து கொள்ள முடியும். இத்தகைய மாற்றங்கள், மின்வழிச் சீட்டு நடைமுறையில், வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடுகளை குறைக்க உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுப்பாடு:
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல், தொடர்ந்து இரண்டு மாதங்கள் நிலுவை இருந்தால், ‘இ – வே’ பில் பெற முடியாது என்ற புதிய கட்டுப்பாடு ஜூனில் நடைமுறைக்கு வர உள்ளது.
மத்திய நிதியமைச்சகம் ‘இ – வே பில்’ நடைமுறையில் செய்துள்ள மாற்றங்கள் வரவேற்கத்தக்கது. இதனால், நிறுவனங்கள் மற்றும் வரி அதிகாரிகள் என, இரு தரப்பினரும் பயனடைவர். வரி ஏய்ப்பு தடுக்கப்படும். வர்த்தகம் புரிவது மேலும் சுலபமாகும்
– ரஜத் மோகன், பங்குதாரர், ஏ.எம்.ஆர்.ஜி அண்டு அசோசியேட்ஸ்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|