பதிவு செய்த நாள்
04 மே2019
23:25
புதுடில்லி:நான்கு பன்னாட்டு, ‘ஆடிட்’ நிறுவனங்கள், சட்டச் சேவைகள் வழங்க, டில்லி பார் கவுன்சில் தடை விதித்துள்ளது.இந்திய சட்ட நிறுவனங்கள் சங்கத் தலைவர், லலித் பாசின், 2015ல், டில்லி பார் கவுன்சிலில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில் கூறப்பட்ட விபரம்:
இந்திய அரசியல் சாசன சட்டப்படி, நிறுவனங்களின் வரவு – செலவு கணக்கை தணிக்கை செய்யும் ஆடிட் நிறுவனங்கள், சட்டச் சேவைகள் வழங்க முடியாது.ஆனால், பன்னாட்டு நிறுவனங்களான, ‘கே.பி.எம்.ஜி., பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர், எர்னஸ்ட் அண்டு யங், டெலாய்ட்’ ஆகிய நான்கு கணக்கு தணிக்கை நிறுவனங்கள், சட்டம் சார்ந்த சேவைகளையும் வழங்குகின்றன.
இந்நிறுவனங்கள், சட்ட வல்லுனர்களை பணிக்கு அமர்த்தி, சட்ட ஆலோசனைகள் அளிக்கின்றன. அத்துடன், வாடிக்கையாளர்களுக்கு கூட்டுத் தொழில், கையகப்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பான ஆவணங்களையும் தயாரித்து தருகின்றன.
இப்பணிகளை, இந்திய பார் கவுன்சிலில் பதிவு செய்த நிறுவனங்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.ஆனால், நான்கு நிறுவனங்களும் அவ்வாறு பதிவு செய்யவில்லை. அதனால், சட்டமீறல் குற்றத்திற்காக, நான்கு கணக்கு தணிக்கை நிறுவனங்களும், சட்டச் சேவைகள் வழங்க தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஏற்று, நான்கு நிறுவனங்களும், சட்டச் சேவைகள் வழங்க, டில்லி பார் கவுன்சில் தடை விதித்துள்ளது. அத்துடன், அந்நிறுவனங்கள் எந்தெந்த இடங்களில் சட்டச் சேவைகள் வழங்கி வருகின்றன என்பதையும், பணிக்கு அமர்த்தியுள்ள சட்ட வல்லுனர்கள் விபரங்களையும் வழங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அடுத்த விசாரணை, வரும், 12ம் தேதி நடைபெறும் என, டில்லி பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.இதனிடையே, ‘கணக்கு தணிக்கை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, டில்லி பார் கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது; ஐ.சி.ஏ.ஐ.,க்குத் தான் அதிகாரம் உள்ளது’ என, அதன் முன்னாள் தலைவர், நவீன் குப்தா தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|