பதிவு செய்த நாள்
04 மே2019
00:07
லண்டன்:கடந்த ஆண்டு, இந்தியாவில் இருந்து அதிக அளவிலான அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களை ஈர்த்த நாடுகளில், பிரிட்டன் முதலிடத்தை பிடித்துள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில், மேயரின், அதிகாரபூர்வ சர்வதேச வர்த்தக மேம்பாட்டு பணிகளை, ‘லண்டன் அண்டு பார்ட்னர்ஸ்’ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.இந்நிறுவனம், 2018ல், பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட, அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்கள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஆண்டு, இந்தியாவில் இருந்து அதிக அளவில், அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களை ஈர்த்த நாடுகளில், பிரிட்டன் முதலிடத்தை பிடித்துள்ளது.இந்த வகையில், 2018ல், இந்திய முதலீட்டாளர்களின், 52 திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. இது, 2017ல் மேற்கொண்டதை விட, 100 சதவீதம் அதிகம்.
இந்தியர்கள், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில், முறையே, 51 மற்றும் 32 திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர்.இந்தியாவில் இருந்து, பிரிட்டன் ஈர்த்த அன்னிய முதலீடுகளில், லண்டன் நகரம், 60 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இந்நகரில், பல்வேறு துறைகளில், இந்தியர்களின் முதலீடு, ஓராண்டில், 255 சதவீதம் அதிகரித்து, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இது வரை இல்லாத வகையில், இந்தியர்கள், லண்டனில், 32 திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். அவர்கள், துபாய் மற்றும் சிங்கப்பூரில் செய்த முதலீடு, இதை விட குறைவாகும்.இந்திய நிறுவனங்கள், லண்டனை மையமாக வைத்து, சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றன.இதன் காரணமாக, லண்டனில், இந்தியர்களின் முதலீடு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, லண்டனில், நிதிச் சேவைகள், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில், வர்த்தக வாய்ப்பு நன்கு உள்ளது.கடந்த, 10 ஆண்டுகளில், லண்டனில் உள்ள இந்திய நிறுவனங்கள், 249 கோடி பவுண்டு, அதாவது, 22 ஆயிரத்து, 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன; அத்துடன், 5,691 புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன.
இந்தியாவில், வலைதளம் மூலம் வாடகை கார் சேவை வழங்கும், ‘ஓலா’ நிறுவனம், கடந்த ஆண்டு, லண்டனில் முதலீடு செய்யும் திட்டத்தை அறிவித்தது.ஓட்டல் அறை சேவையை வழங்கும், ‘ஓயோ’ நிறுவனம், லண்டனில் முதலீடு செய்ய உள்ளதாக, சமீபத்தில் தெரிவித்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலதிபர்கள் குழு வருகை
லண்டன் மேயரின் சர்வதேச வர்த்தக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பிரிட்டன் தொழிலதிபர்கள் குழு, பரஸ்பர வர்த்தக வாய்ப்புகளை அறிய, நான்கு நாள் பயணமாக, 6ம் தேதி இந்தியா வருகிறது; சென்னை, பெங்களூரு, மும்பை நகரங்களில், இந்திய தொழிலதிபர்களை சந்தித்து பேச உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|