பதிவு செய்த நாள்
01 ஜூன்2019
23:51
வாஷிங்டன்:‘முன்னுரிமை வர்த்தக நாடு’ எனும் அந்தஸ்தை, இந்தியா இழப்பதாக, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வளரும் நாடுகளுக்கு, வரியற்ற வர்த்தக சலுகைகளை வழங்கும், ஜி.எஸ்.பி., எனும் திட்டத்தை, 1974-ம் ஆண்டு அமெரிக்கா அறிமுகம் செய்தது.இத்திட்டத்தின் கீழ், பல்வேறு வளரும் நாடுகளுக்கு, அமெரிக்கா வர்த்தக முன்னுரிமை சலுகையை வழங்கி வருகிறது.
இதன்படி, சலுகை பட்டியலிலுள்ள நாடுகளிலிருந்து, அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப் படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு வரி எதுவும் கிடையாது. இந்த சலுகையால் அதிகம் பயன் பெறும் நாடாக இந்தியா இருந்து வந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர், டிரம்ப், இந்த சிறப்பு அந்தஸ்தை, இந்தியா இழப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்தியா, 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 2,000த்துக்கும் மேற்பட்ட பொருட்களை, முன்னுரிமை திட்டத்தில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதனால், மோட்டார் பாகங்கள், நவரத்தினம், ஆபரணங்கள், ஜவுளி, ரசாயன பொருட்கள் உள்ளிட்ட பல துறைகள் பயனடைந்து வந்தன.இந்திய சந்தையில், அமெரிக்காவை சமமாக நடத்தவும், அணுகவும் அனுமதிக்கவில்லை என்ற காரணத்தால், இந்த அந்தஸ்து நீக்கப்படுவதாகவும், ஜூன், 5ம் தேதி முதல் இது அமலுக்கு வருவதாகவும், டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மார்ச், 4ல், இந்தியா, துருக்கி ஆகிய இரு நாடுகளையும் பட்டியலிலிருந்து நீக்க முடிவு செய்திருப்பதாக, டிரம்ப் அறிவித்திருந்தார்.இந்தியா சமமாக நடத்தவில்லை என்றும், துருக்கி வளர்ந்த நாடாகி விட்டதாகவும் இதற்கு அவர் காரணம் தெரிவித்திருந்தார்.
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ரத்து குறித்து, அமெரிக்காவின், ஜி.எஸ்.பி., திட்டத்தை சேர்ந்த உயரதிகாரி, டான் அந்தோணி கூறியதாவது:அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள், இனி ஆண்டு தோறும், 300 மில்லியன் டாலர் அதிக வரியை சந்திக்க வேண்டியதிருக்கும். முன்னுரிமை சலுகை இல்லாத நிலையில், அமெரிக்காவின் சிறிய தொழிலகங்கள் புதிய வரியை சந்திக்கும். இதனால், வேலை இழப்புகள் உருவாகும்.அமெரிக்க இறக்குமதியாளர்கள் அதிகம் பணம் செலுத்த வேண்டியதிருக்கும்.
அதேபோல், சில அமெரிக்க ஏற்றுமதியாளர்கள், இப்போது இருப்பதைப் போலவே, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தடைக்கற்களை சந்திக்க வேண்டியதிருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.அமெரிக்காவின் இந்த அறிவிப்பு குறித்து, வர்த்தக அமைச்சகம் தெரிவித்து உள்ளதாவது:
இந்தியாவின் பொருளாதார இணைப்பை வலுப்படுத்த, தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இரு நாடுகளுக்கு இடையேயான எந்தவொரு உறவிலும், குறிப்பாக பொருளாதார உறவுகளில் இருந்து வரும் பிரச்னைகள், அந்தந்த காலகட்டங்களில் தீர்த்து வைக்கப்படும்.பரஸ்பர நன்மை ஏற்படும் வகையில், இரு நாடுகளும், உறவுகளை வளர்த்துக் கொள்வதற்காக தீவிரமாக இணைந்து பணியாற்றும் என நம்புகிறோம்.இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி
இந்தியாவிலிருந்து, அமெரிக்காவுக்கு, 2017ல் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு, 4,860 கோடி டாலராகும்.இதில், முன்னுரிமை வர்த்தக திட்ட சலுகையின் கீழ், 560 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|