பதிவு செய்த நாள்
03 ஜூன்2019
00:22
கச்சா எண்ணெய்
இந்த
ஆண்டின் ஆரம்பம் முதல், விலை அதிகரித்து வர்த்தகமாகி வந்த கச்சா
எண்ணெய், மே மாதத்தில், 1 பேரலுக்கு, 700 ரூபாய் வரை சரிந்தது.
தற்போது, 1 பேரல் விலை, 3,778 ரூபாய் என்ற நிலையில், பொருள் வாணிப
சந்தையில் வர்த்தகமாகி வருகிறது.ஜனவரி மாதம் முதல், ஏப்ரல்
மாதம் வரை, கச்சா எண்ணெய், 1 பேரலுக்கு, 1,500 ரூபாய் வரை உயர்ந்தது. இந்த
உயர்வில், நேர் பாதி அளவுக்கு, மே மாதத்தில் மட்டும் சரிந்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
கடந்த வியாழன் அன்று, அமெரிக்க அதிபர்,
மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 10ம்
தேதி முதல், 5 சதவீதம் அளவுக்கு இறக்குமதி வரியை அதிகப்படுத்தி
அறிவித்துள்ளார்.மேலும், அக்டோபர், 1ம் தேதி முதல், 25 சதவீதம்
வரை அதிகப்படுத்தப்படலாம் எனவும் அறிவித்துள்ளார். அமெரிக்க
சுத்திகரிப்பு நிறுவனங்கள், தினசரி, 7 லட்சம் பேரல்களை இறக்குமதி
செய்து வரும் சூழலில், இவ்வறிவிப்பு, நிறுவனங்களின் கொள்முதல்
விலையை அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட
சஞ்சலம் காரணமாக, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில், கச்சா எண்ணெய்
கடுமையான விலை சரிவை சந்தித்தது. எண்ணெய் உற்பத்தி நாடுகளின்
கூட்டமைப்பு, இம்மாத இறுதியில் கூட உள்ளது.கடந்த, 2018
டிசம்பரில், ஒபெக் உறுப்பு நாடுகளும், ரஷ்யாவும் இணைந்து, தினசரி
உற்பத்தியை, 1.2 மில்லியன் பேரல்கள் குறைத்து, விலை ஏற்றத்தை அதிகரிக்க
முடிவெடுத்தன. இந்த உற்பத்தி குறைப்பு முடிவு, இம்மாதத்துடன்
முடிவுக்கு வருகிறது.
இந்த உற்பத்தி குறைப்பை மீண்டும்
நீட்டிப்பது குறித்து, கலந்தாலோசனை நடைபெற உள்ளது. உற்பத்தி
குறைப்பை மீண்டும் தொடரலாமா; வேண்டாமா என்பது குறித்து,
நடைபெறவிருக்கும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த வார இறுதியில் சீனா,
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு, 60
பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதி வரியை, கடந்த சனிக்கிழமை
முதல் அமல்படுத்தியது.
அமெரிக்கா, கடந்த மாதம், சீனப்
பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகரித்ததற்கு எதிராக, சீன அரசு
இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.அமெரிக்காவின் எண்ணெய்
உற்பத்தி அதிகரித்து வருகிறது. உலக அளவில் தினசரி உற்பத்தியில்,
அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இரண்டாவதாக சவுதி அரேபியாவும்,
மூன்றாவதாக ரஷ்யாவும் உள்ளன.
அமெரிக்காவில் இயங்கி வரும்
ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்த வண்ணம்
உள்ளது. தற்போது, 892 குழாய்கள் செயல்பட்டு வருகின்றன. சவுதி
அரேபியா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள், உலகின் மொத்த நுகர்வு
தேவையில், 60 சதவீதத்தை பூர்த்தி செய்வது குறிப்பிடத்தக்கது.
தங்கம் வெள்ளி
சர்வதேச
சந்தையில், கடந்த மே மாதம், தங்கத்தின் விலை அதிகரித்து,
வர்த்தகம் நடைபெற்றது. அதற்கு முந்தைய மூன்று மாதங்களில், இதை விட
விலை குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.மே மாதத்தில் மட்டும், 1 அவுன்ஸ், 31.104 கிராம் தங்கம், 40 அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு விலை ஏற்றம் காணப்பட்டது.இந்த விலையேற்றத்துக்கு முக்கியமான காரணங்கள்:
அமெரிக்கா,
சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும், வர்த்தக போர்
காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல்.இந்த மோதல் போக்கு காரணமாக,
பொருளாதார வளர்ச்சி குறையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.அமெரிக்காவின்
அண்டை நாடான மெக்சிகோ நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும்
பொருட்களுக்கு, கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளார், அமெரிக்க
அதிபர் டிரம்ப்.மேலும், 10ம் தேதி முதல், மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும், 5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
வர்த்தக
மோதல் காரணமாக, அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குறையக்கூடும்.
இதனால், அமெரிக்க மத்திய வங்கி, அடுத்து நடைபெறவிருக்கும்
கூட்டத்தில், வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பு குறைவாக
இருக்கும் என்று கருதப்படுகிறது.இதன் காரணமாக, அமெரிக்காவின்
நாணய குறியீடான, ‘டாலர் இண்டெக்ஸ்’ சரிந்தது. இது, தங்கம் விலை
ஏற்றத்துக்கு காரணமாக அமைந்தது. அமெரிக்காவின், 10 ஆண்டு கால அரசு
கருவூல ஆதாயம், இந்த ஆண்டில் இதுவரை, 20 சதவீதம் அளவுக்கு
சரிந்துள்ளது.
இப்படிப்பட்ட சூழல்கள் நிலவியதால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்தனர்.தங்கம்
மற்றும் வெள்ளி ஆகியவை எப்போதும் ஒரே மாதிரியான விலை போக்கை
கொண்டிருக்கும். ஆனால், தற்போது எதிர்மறையான போக்கில் வர்த்தகம் நடைபெறுகிறது.
மே
மாதத்தில் தங்கம் விலை உயர்ந்தும், வெள்ளி விலை சரிந்தும் வர்த்தகம்
ஆனது. இதற்கு, வெள்ளியின் நுகர்வு தேவை முக்கிய காரணமாக
அமைந்ததாகக் கூறப்படுகிறது. தங்கம் எப்போதும் ஒரு முதலீட்டு
பொருளாகவே கருதப்படும். ஆனால், வெள்ளியின் விலை, அதன் தொழிற்சாலை
தேவை மற்றும் ஆபரண தேவையைப் பொறுத்து அமையும்.
செம்பு
செம்பு,
கடந்த மூன்று மாதங்களாக, தொடர்ந்து விலை சரிந்து வர்த்தகமாகி
வருகிறது. பொருள் வாணிப சந்தையில், மார்ச் முதல் மே வரையிலான
காலகட்டத்தில், 1 கிலோவுக்கு, 60 ரூபாய் வரை விலை சரிவு நிகழ்ந்துள்ளது.மே
மாதத்தில் மட்டும், 1 கிலோவுக்கு, 40 ரூபாய் சரிந்துள்ளது
குறிப்பிடத்தக்கது. தற்போது, 1 கிலோ, 406 ரூபாய் என்ற நிலையில்
வர்த்தகம் நடைபெறுகிறது.
இந்த சரிவுக்கு, பல்வேறு காரணங்கள் உள்ளன.உலகின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி சரிவு, இதற்கு முக்கியமான காரணமாகும்.செம்பு அதிக அளவில் நுகரப்படும் நாடான,
சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி மந்தம் இன்னொரு காரணம். வர்த்தகப்
போர் காரணமாக, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் ஏற்றுமதி
பாதிப்படைந்து உள்ளது. இதனால், தொழில் துறை வளர்ச்சியில் சரிவு
ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் செம்பு நுகர்வு கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது.
உலகில், செம்பை அதிக அளவில் தொழிற்சாலை
உபயோகத்துக்குப் பயன்படுத்தும் நாடு சீனா. அந்நாட்டின்
பொருளாதார வளர்ச்சியை முன்வைத்தே, செம்பு உள்ளிட்ட கமாடிட்டிகளின்
விலை மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது.தற்போதைய சூழலில்,
சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறையும் என்ற அச்சம்
காரணமாக, செம்பு விலை சரிந்து வருகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|