பதிவு செய்த நாள்
27 ஜூன்2019
07:03
புதுடில்லி: அடுத்த இரண்டு ஆண்டுகளில், நல்ல வளர்ச்சியை எட்ட முடியும் என, இந்திய நிறுவனங்கள் நம்பிக்கையாக இருப்பதாக, எச்.எஸ்.பி.சி., நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகளவிலான, 14 சந்தைகளில், 2,500 நிறுவனங்களில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எச்.எஸ்.பி.சி., நிறுவனத்தின் இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகளவில், மிகவும் நம்பிக்கையான பார்வையை கொண்டிருப்பதில், இந்தோனேஷியாவுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தை, இந்தியா பிடித்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், வளர்ச்சியை எட்ட முடியும் என, பத்தில், ஒன்பது இந்திய நிறுவனங்கள் கருதுகின்றன.மேலும், 77 சதவீத நிறுவனங்கள், ஓராண்டுக்கு முன்பு இருந்ததை விட, தற்போது, அதிக நம்பிக்கையுடன் உள்ளன. 44 சதவீத ஏற்றுமதியாளர்கள், அதாவது, கிட்டத்தட்ட பாதி பேர், தங்களது ஏற்றுமதி, 5 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என, கருதுகின்றனர்.
இதேபோல் சீனாவுக்கு அடுத்தபடியாக, 59 சதவீத நிறுவனங்கள், தங்கள் முதலீட்டை, நிலையான முதலீட்டுக்கு மாற்றம் செய்ய விரும்புகின்றன.பிற எல்லா சந்தைகளிலும் காணாத ஒன்றை இந்திய சந்தையில் காணமுடிகிறது. இந்திய வணிகங்களில், 33 சதவீதம், சுற்றுச்சூழல் ரீதியாக மாற வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கின்றன என்பது தான் அது.செயற்கை நுண்ணறிவு, 5ஜி உள்ளிட்டவை அடுத்த இரண்டு ஆண்டுகளில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கும் என, இந்திய நிறுவனங்கள் கருது கின்றன. இவை உலக சராசரியை விட அதிகமாகும்.
கடந்த நிதியாண்டில், இந்திய பொருளாதாரம், ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில், 6.8 சதவீதமாக சரிவடைந்துள்ளது என்ற நிலையிலும், இந்திய நிறுவனங்கள் நம்பிக்கையுடன் உள்ளன.அதேபோல், 14 உலக சந்தைகளில், மிகப் பெரும் முதலீட்டு ஆர்வத்துடன் இருப்பதும், இந்திய நிறுவனங்கள் தான். ஆய்வில் பங்கேற்ற எந்த இந்திய நிறுவனமும், தங்களுடைய முதலீட்டை குறைத்து கொள்ளும் திட்டம் இருப்பதாக தெரிவிக்கவில்லை.
அதுமட்டுமல்ல, இந்தோனேஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளைப் போலவே, இந்திய நிறுவனங்களும், தங்களுடைய தற்போதைய லாபத்திலிருந்து முதலீடு செய்ய விரும்புகின்றன.‘ஆன்லைன்’ மூலமாக பொருட்களை அல்லது சேவைகளை விற்பதற்கான திறன் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் கண்டு பிடிப்பு, வாடிக்கையாளர்கள் அனுபவத்தை மேம்படுத்துதல் போன்றவற்றில் முதலீடு செய்ய, இந்தோனேஷியாவுக்கு அடுத்தபடியாக, இந்திய நிறுவனங்கள் தான் திட்டமிட்டுள்ளன.
இந்திய பொருளாதாரத்தின் வலிமையும், மக்கள் தொகை ஆற்றலும், வளர்ச்சிக்கு பல வாய்ப்புகளை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|