பதிவு செய்த நாள்
01 ஜூலை2019
07:24
வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ள சூழலில், முதலீட்டாளர்கள் தங்கள் உத்தி, நிதி இலக்குகளுக்கு ஏற்ப அமைந்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு, ரெப்போ விகிதம் எனப்படும், வங்கிகளுக்கான கடன் விகிதத்தை, 75 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.
இதன் விளைவாக வங்கிகள், கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளதோடு, டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தையும் குறைத்துள்ளன. குறிப்பாக, நிரந்த வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் குறைந்துஉள்ளது. வட்டி விகிதம் குறையத்துவங்கியிருப்பது, கடன் வசதியை எதிர்பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியானது என்றாலும், வைப்பு நிதி முதலீட்டை நாடுபவர்களை இது யோசிக்க வைத்திருக்கிறது.
ஆனால், ரெப்போ விகிதம் குறைக்கப்பட்ட அளவிற்கு, வங்கிகள் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்துவிடவில்லை. நாட்டின் பெரிய வங்கியான ஸ்டேட் வங்கி, இரண்டு கோடிக்கும் குறைவான ஐந்து ஆண்டு கால வைப்பு நிதிகளுக்கு, 25 அடிப்படை புள்ளிகள் மட்டுமே வட்டியை குறைத்துள்ளது. ரெப்போ விகிதம் குறையும் போது, அதற்கேற்ப கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்காமல், வங்கிகள் மிகவும் மெதுவாக செயல்படும் என்பதே வழக்கமான கருத்தாக இருக்கிறது.
இதற்கு மாறாக, ரெப்போ விகிதத்திற்கு ஏற்ப வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் குறையாமல், மிகவும் மெதுவாக குறைக்கப்படுவதை வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த காலங்களில், வட்டி விகிதம் குறையும் சூழலில், வைப்பு நிதி வட்டி விகிதத்தை உடனடியாக குறைக்கும் போக்கையே வங்கிகள் கடைப்பிடித்து வந்துள்ளன. தற்போது, இதற்கு மாறான போக்கு நிலவ காரணம், கடந்த சில ஆண்டுகளில் டெபாசிட்கள் வளர்ச்சியை விட, கடன் வளர்ச்சி அதிகமாக இருப்பதே. கடன் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க வங்கிகளுக்கு வைப்பு நிதி மூலமான பணம் தேவை என்பதால், அவை ரெப்போ விகிதத்திற்கு ஏற்ப வட்டியை குறைக்காமல் இருக்கின்றன.
எனினும், வங்கிகளின் பணமாக்கும் தன்மை (லிக்விடிட்டி) கவலையை சரி செய்ய, ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைகள் எடுத்து வருவதால், வரும் மாதங்களில் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது. இந்த சூழலில், வைப்பு நிதி முதலீட்டாளர்கள் தங்கள் உத்தியை பொருத்தமானதாக அமைத்துக்கொள்ள வேண்டும். நடுத்தர, நீண்ட கால முதலீடு இலக்கு கொண்டவர்கள், வைப்பு நிதிகளில் நீண்ட கால அளவில் இப்போது பணத்தை முதலீடு செய்வது சரியாக இருக்கும் என, கருதப்படுகிறது.
இதன் மூலம் தற்போதைய வட்டி விகித பலனை பெற முடியும்.அதே நேரத்தில், முதலீட்டாளர்கள் கையில் உள்ள எல்லா தொகையையும், ஒரே சாதனத்தில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். முழுவதும் வைப்பு நிதியில் முதலீடு செய்வதைவிட, டெப்ட் பண்ட், மியூச்சுவல் பண்ட்களில் ஒரு பகுதியை முதலீடு செய்யலாம். டெப்ட் பண்ட்கள், தற்போது பிரச்னையில் இருப்பதால் தயங்குபவர்கள், அதிக வட்டி அளிக்கும் வைப்பு நிதிகளை நாடலாம்.
ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் மற்றும் கார்ப்பரேட் டெபாசிட்கள் அதிக வட்டி அளித்தாலும், இவை தொடர்பான ரிஸ்கையும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும். பொதுவாக, வைப்பு நிதி மற்றும் டெப்ட் பண்ட்களில் கலந்து முதலீடு செய்வது ஏற்ற உத்தியாக கருதப்படுகிறது. ஓராண்டு காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், வங்கிகள் அளிக்கும், இடையே பணத்தை விலக்கி கொள்ளக்கூடிய பிளக்சி டெபாசிட்களை நாடலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|