பதிவு செய்த நாள்
02 ஜூலை2019
23:39
புதுடில்லி:புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை குறித்து, சம்பந்தப்பட்ட அனைவரது கருத்துகளையும், மத்திய வர்த்தக துறை அமைச்சகம் கேட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், ஏற்று மதியை அதிகரிப்பதற்கும் உதவும் வகையில், வெளிநாட்டு வர்த்தக கொள்கையை உருவாக்குவதற்காக, அனைவரது கருத்துகளையும் மத்திய வர்த்தக துறை அமைச்சகம் கேட்டுள்ளது.
இது குறித்து, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகமான, டி.ஜி.எப்.டி., தெரிவித்துள்ளதாவது: தற்போது நடைமுறையில் இருக்கும், 2015-–2020ம் ஆண்டிற்கான, வெளிநாட்டு வர்த்தக கொள்கை, திருத்தி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அனைவரிடமிருந்தும், இது குறித்த ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் எதிர்பார்க்கப் படுகின்றன.இவ்வாறு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள, வெளிநாட்டு வர்த்தக கொள்கை, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ளது. 2020 முதல், 2025ம் ஆண்டு வரையிலான, ஐந்தாண்டுகளுக்கான, புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை இந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தக கொள்கையின் அடிப்படையில் தான், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகள், ஊக்கத்தொகைகள் அறிவிக்கப்படுகின்றன.தற்போது, வரிச்சலுகைகள், வணிக ஏற்றுமதி, சேவை ஏற்றுமதி ஆகியவற்றுக்கான, இந்திய திட்டங்களான, எம்.இ.ஐ.எஸ்., எஸ்.இ.ஐ.எஸ்., ஆகியவற்றின் கீழ் வழங்கப்படுகின்றன. இத்தகைய வரிச் சலுகைகள் குறித்து, உலக வர்த்தக அமைப்பில், அமெரிக்கா புகார் தெரிவித்து வருகிறது.
இதனால், உலகளாவிய வர்த்தக கொள்கைக்கு ஏற்ப, வரிச் சலுகைகள் வழங்குவதை, மத்திய அரசு மறு சீரமைப்பு செய்யக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பான, எப்.ஐ.இ.ஓ., வின் முன்னாள் தலைவர், கணேஷ் குமார் குப்தா, புதிய திட்டமானது, எண்ணெய் மற்றும் மின்சாரம் போன்றவற்றுக்கான, மறைமுக வரிகளைத் திருப்பிச் செலுத்துதல், மற்றும் மண்டி வரி போன்ற மாநில வரிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லுாதியானாவை சேர்ந்த ஏற்றுமதியாளரான, எஸ்.சி., ரால்ஹான், ஏற்றுமதியாளர்களுக்கு, வருமான வரி விதிப்பிலிருந்து விலக்கு கோரியுள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:தற்போதைய ஏற்றுமதி சூழ்நிலை நன்றாக இல்லை. இந்த சூழ்நிலையில், வருமான வரி விலக்கை, குறைந்தது, ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பது குறித்து அரசு சிந்திக்க வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கு, சர்வதேச விலையில், மூலப்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய அவசியமும் உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஏற்றுமதி2011-_12 ஆண்டு முதல், இந்தியாவின் ஏற்றுமதி, 30 ஆயிரம் கோடி அமெரிக்க டாலராக உயர்ந்து வருகிறது. 2018_-19 ம் ஆண்டில், வெளிநாட்டு ஏற்றுமதி, 9 சதவீதம் அதிகரித்து, 33.10 கோடி டாலராக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|