பதிவு செய்த நாள்
05 ஆக2019
00:32
’சமூகநல முதலீடுகளை அதிகரிக்க, ஒரு வர்த்தகச் சந்தையை இந்தியா உருவாக்கும்’ என்று பட்ஜெட் உரையில் தெரிவித்தார், நிர்மலா சீதாராமன்.
இது என்ன புதிய சந்தை?
உங்களிடம் உபரியாக பணம் உள்ளது. தாராள மனசும் இருக்கிறது. என்ன செய்வீர்கள்? தொண்டு நிறுவனங்களுக்கோ, கல்வி அமைப்புகளுக்கோ, நன்கொடை கொடுப்பீர்கள். தேவைப்படும் பொருட்கள் வாங்குவதற்கும், கட்டடம் எழுப்புவதற்கும், குறிப்பிட்ட சில வசதிகளைச் செய்வதற்கும் நிதியுதவி செய்வீர்கள்.
பல சமயங்களில் நீங்கள் நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கலாம். பிரமாதமாக சேவை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று நினைப்பீர்கள். ஆனால், அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிய வரலாம். ஒரு காரணத்தைச் சொல்லி நிதி வசூலித்துவிட்டு, சம்பந்தமே இல்லாத வேறொரு காரியத்துக்கு அதைச் செலவிடலாம். நீங்கள் என்ன நடக்கும் என்று எதிர்பார்த்து நிதி கொடுத்தீர்களோ, அது நடக்காமலேயே போய்விடலாம்.
நல்ல நோக்கம்
இன்னொரு தரப்பைப் பார்ப்போம். உண்மையாகவே மக்களுடைய தேவைகளைப் புரிந்துகொண்டு முயற்சிகள் மேற்கொள்ளும் அமைப்புகள் உள்ளன.உதாரணமாக, மலைவாழ் பழங்குடியினருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க ஒரு அமைப்பு நினைக்கலாம். முதுமை மற்றும் மறதிநோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சைகளை அளிக்கும் பிரிவு ஒன்றைத் தொடங்கி, இலவச சேவை வழங்க, ஒரு மருத்துமனை நினைக்கலாம்.
மின்சாரமே இல்லாத தொலைதூர கிராமம் ஒன்றில், காற்றாலை அமைத்து, மின்சாரம் வழங்க வேண்டும் என்று ஓர் இளைஞர் நினைக்கலாம்.இதற்கெல்லாம் பணம் செலவு ஆகும். ஒவ்வொரு முறையும், யாரேனும் புரவலரைத் தேடிப் போய் யாசகம் கேட்க முடியுமா? இவர்களுடைய நல்ல நோக்கத்தைப் புரிந்துகொண்டு, இத்தகைய திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் வந்தால் எப்படி இருக்கும்?இ
துபோன்ற, இரண்டு தரப்பையும் இணைக்கும் பாலமாக உருவெடுக்க இருப்பதுதான், ‘சமூகநல பங்குச் சந்தை’ என்பதாகும்.நமக்கு வழக்கமான பங்குச் சந்தை தெரியும். அதில் பல நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றின் பங்குகளை, சந்தையில் விற்கவும், வாங்கவும் செய்கிறோம். நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டும், தம் நிதிநிலை முடிவுகளை தெரிவிக்கும்.
அதேபோல், புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டால், புதிய ஆர்டர்கள் கிடைத்தால், பங்குச் சந்தைக்குத் தெரியவரும்.இதன் மூலம், அந்தப் பங்கின் விலை உயரவோ, வீழ்ச்சி அடையவோ செய்யும்.இதே முறை தான், சமூகநல பங்குச் சந்தையிலும் பின்பற்றப்படும்.
அதாவது, நன்றாகச் செயல்படக்கூடிய தன்னார்வ நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவை, இந்தப் பங்குச் சந்தையை அணுகலாம். இதேபோல், கடன் பத்திரங்களும் வெளியிட்டு நிதி திரட்டலாம்.
என்ன புதுமை?
இதுநாள் வரை நிதி ஆதாரம் இல்லாமல் தவித்த அமைப்புகள், இனி துணிந்து மக்கள் முன் போய் நிற்கலாம். அவர்களுடைய பணியே, அவர்களுக்கு உரிய நிதியைப் பெற்றுத் தரும்.இத்தகைய பங்குகளை வைத்துக்கொண்டு, வங்கிகளில் இருந்து கடன் பெறலாம். ஒரு சமூக நலத் திட்டத்தை, வெறும் நல்லெண்ணமாக மட்டுமல்லாமல், தொழில்நேர்த்தியுடன் செய்ய முடியும். சமூகத் தொழில்முனைவோர் எண்ணிக்கை இதனால் பெருகும்.இன்னொருபுறம், முதலீட்டாளர்களுக்குப் பெரும் பலன். இந்தப் பங்குச் சந்தை, ‘செபி’யின் கட்டுப்பாட்டுடன் தான் இயங்கும் என்பதால், அதன் அத்தனை சட்ட நெறிமுறைகளும் இங்கே அமலாகும்
.பங்குச் சந்தையில் பட்டியலிடும்போதே, அது தன்னைப் பற்றி அத்தனை தகவல்களை வழங்கிவிடும் என்பதால், முதலீட்டாளர்களுக்குச் சந்தேகம் ஏற்படாது. தாம், எந்த மாதிரியான அமைப்பில் முதலீடு செய்கிறோம் என்ற தெளிவு கிடைக்கும்.எல்லாவற்றைவிட மிக முக்கியமானது, பணத்தைத் திரும்ப எடுப்பது. பொதுவாக, நன்கொடை, நிதி உதவி போன்றவை, திரும்ப வராது. அதனால் தான், அவற்றை ‘தர்மம்’ என்று சொல்கிறோம்.இங்கே, இது முதலீடு. முதலீட்டாளர்களிடம் இருக்கும் பங்குகள் வர்த்தகமாகும். அவற்றை வேறொருவர் வாங்குவார். நீங்கள், வேறொருவரிடம் இருந்து வாங்க முடியும்.
வரவேற்போம்
இதனால், உங்கள் பணம் ஒரு சின்ன லாபத்தோடு திரும்ப வரும். பங்குச் சந்தை போன்ற லாபம், இங்கே கிடைக்காது தான்.ஆனால், உங்கள் முதலீடு, உண்மையிலேயே சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.இந்த மாதிரியான முதலீடுகளுக்கு, ஆங்கிலத்தில், ‘இம்பாக்ட் இன்வெஸ்ட்டிங்’ என்று பெயர். அதாவது, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் முதலீடு.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில், ஏற்கனவே இத்தகைய ‘சமூகநல பங்குச் சந்தை’கள் நடைமுறையில் இருக்கின்றன. கோடிக்கணக்கான முதலீடுகள், இதில் புழங்குகின்றன.இந்தியாவில், தற்போதுதான் இதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து இருக்கிறோம். இத்தகைய முதலீடுகளை அதிகரிக்கும் விதமாக, வரிச் சலுகைகள் வழங்கப்படுவதோடு, சட்டத்திட்டங்கள் எளிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சமூக நலப்பணி என்பது ‘தர்ம’த்துக்குச் செய்யவேண்டிய பணியாக இனியும் இருக்க வேண்டியதில்லை. அது மக்களிடையே தன்னிறைவை ஏற்படுத்தும், நேர்த்தியான தொழில்முறை முயற்சியாகவும் இருக்கலாம். அதற்கு வழிசெய்வது தான் ‘சமூகநல பங்குச் சந்தை.’இதை வரவேற்போம்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|