பதிவு செய்த நாள்
09 நவ2019
00:30
புதுடில்லி:நிதியுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், நாட்டின் கடன் மதிப்பீட்டுக்கான தர நிலையை குறைத்து மதிப்பிட்டு அறிவித்துள்ளது, மூடிஸ் இன்வெஸ்டார் சர்வீசஸ் நிறுவனம்.கடன் தர மதிப்பீட்டில், நிலையான இடத்தில் இருந்த இந்தியா, தற்போது எதிர்மறையான இடத்துக்கு சென்றுவிட்டதாக மூடிஸ் அறிவித்துள்ளது.
அரசின் செயல்பாடு
தர நிலையில், இரண்டாவது மோசமான தரநிலையான, பி.ஏ.ஏ.2 எனும் தரத்தை, இந்தியாவுக்கு வழங்கி இருக்கிறது இந்நிறுவனம்.பொருளாதார மந்த நிலையை சீர்செய்வதில் அரசின் செயல்பாடுகள் முழுமையாக இல்லை என்றும், இது மேலும் வளர்ச்சியை பாதிக்கும் எனவும், மூடிஸ் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டின் நிதிப் பற்றாக்குறை, நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.3 சதவீதமாக இருக்கும் என அரசு கணித்திருக்கும் நிலையில், இது, 3.7 சதவீதமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இதற்கு பொருளாதார மந்த நிலையும், வருவாய் குறைவும் முக்கிய காரணம் என, தெரிவித்துஉள்ளது.இது குறித்து, மூடிஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது:கிராமப்புற குடும்பங்களின் நிதி அழுத்தங்கள், குறையும் வேலைவாய்ப்புகள், வங்கி சார நிதி நிறுவனங்களின் கடன் நெருக்கடி ஆகியவை, மந்த நிலையை மேலும் அதிகரிக்கும் வகையில் இருக்கின்றன.
பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்வதில், அரசு மற்றும் அதன் கொள்கைகளில் உள்ள பகுதியளவிலான குறைபாடுகள் காரணமாக, இந்தியாவின் கடன் பளு அதிகரிக்கும். இது ஏற்கெனவே அதிகமாக இருக்கிறது.இவ்வாறு, தெரிவித்துஉள்ளது.
முதலீடு குறையும்
ஒரு நாட்டின் கடன் மதிப்பீட்டு தர நிலை குறைக்கப்பட்டால், மூதலீடுகள் வருவது குறைந்து விடும். குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது பாதிப்புக்குள்ளாகும்.தற்போதைய பொருளாதார மந்த நிலையில், மூடிஸ் நிறுவனத்தின் தர குறைப்பு, நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என, நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
நிறுவனங்களுக்கும் அதே நிலை
மூடிஸ் நிறுவனம், நாட்டில் உள்ள, 21 நிறுவனங்களின் தர நிலையையும் குறைத்து அறிவித்துள்ளது.எஸ்.பி.ஐ., எச்.டி.எப்.சி., பேங்க், டி.சி.எஸ்., இன்போசிஸ், என்.டி.பி.சி., கெய்ல் என மொத்தம், 21 நிறுவனங்களின் தர மதிப்பீட்டை ஸ்திரமான நிலையிலிருந்து எதிர்மறை நிலைக்கு குறைத்துள்ளது.மேலும், இந்நிறுவனங்கள் மேம்படுவதற்கு, அடுத்த ஒன்றுமுதல் ஒன்றரை ஆண்டுகளில் வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளது.
பங்குச் சந்தையில் பாதிப்பு
மூடிஸ் நிறுவனத்தின் அறிவிப்பை அடுத்து, பங்குச் சந்தைகளும் அதன் பாதிப்பை உணர்ந்தன. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, 330.13 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு, 103.90 புள்ளிகளை இழந்தது.இந்திய ரூபாயின் மதிப்பும், 33 பைசா குறைந்து, 71.30 ரூபாயானது.
மறுப்பு
மூடிஸ் நிறுவனத்தின் அறிவிப்புக்கு மத்திய நிதியமைச்சகம் கடுமையான மறுப்பை
தெரிவித்துள்ளது.நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க அரசாங்கம் தீவிரமாக முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகள் மிகவும் வலுவானவை.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் முதலீடுகளை அதிகரிக்கும்.
அண்மையில் பன்னாட்டு நிதியம், பொருளாதார வளர்ச்சி, நடப்பு ஆண்டில், 6.1 சதவீதமாக இருக்கும் என்றும், அதற்கடுத்த ஆண்டில், 7 சதவீதமாக உயரும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் பல பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியாவின் வளர்ச்சி குறித்து நேர்மறையான
பார்வையை வழங்கி உள்ளன.இவ்வாறு, நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|