பதிவு செய்த நாள்
15 நவ2019
00:03
புதுடில்லி:நடப்பு ஆண்டுக்கான, நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை, 5.6 சதவீதமாக குறைத்துள்ளது, ‘மூடிஸ்’ முதலீட்டாளர் சேவை நிறுவனம்.
அரசின் நடவடிக்கைகள், நாட்டின் நுகர்வு தேவையில் பரவலாக உள்ள மந்தநிலையை தீர்ப்பதாக இல்லை என்பதால், வளர்ச்சிக் கணிப்பை, 5.6 சதவீதமாகக் குறைத்துஉள்ளது மூடிஸ்.இது குறித்து, மூடிஸ் அறிவித்துள்ளதாவது:
இந்தியாவுக்கான எங்கள் வளர்ச்சிக் கணிப்பை, நாங்கள் திருத்தி அமைத்துள்ளோம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2019ல், 5.6 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளோம். இது, 2018ல், 7.4 சதவீதமாக இருந்தது.இந்தியாவின் பொருளாதார மந்தநிலை, முன்பு எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் நீடிக்கும்.இவ்வாறு மூடிஸ் தெரிவித்துள்ளது.
நிதி அழுத்தம்
மூடிஸ் நிறுவனம், அக்டோபர், 10ம் தேதியன்று, 2019 – -20ம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சிக் கணிப்பை, 5.8 சதவீதமாகக் குறைத்து அறிவித்திருந்தது. இதற்கு முன்பு வளர்ச்சி, 6.2 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த வாரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலையானதாக இருக்கும் என்பதிலிருந்து, எதிர்மறை நிலைக்கு குறைத்தது.
நிதி அழுத்தங்கள் காரணமாக, கிராமப்புறங்களில் தேவை குறைந்தது. இதன் காரணமாக, பொருளாதார மந்தநிலை அதிகரித்து, முதலீடுகள் குறைந்ததாகவும், அக்டோபரில் மூடிஸ் தெரிவித்திருந்தது.தற்போது நாட்டின் வளர்ச்சி, 2020ல், 6.6 சதவீதமாகவும்; 2021ல், 6.7 சதவீதமாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், வளர்ச்சி வேகம் சமீப காலத்தை விட குறைந்திருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
நுகர்வு தேவை
மூடிஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 2018 மத்தியில் இருந்து குறைய ஆரம்பித்தது. வளர்ச்சி விகிதம், 8 சதவீதத்திலிருந்து, நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில், 5 சதவீதமாக சரிவைக் கண்டுள்ளது.வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது. முதலீட்டு நடவடிக்கைகளும் குறைந்து விட்டன. தற்போதைய மந்த நிலையை பொறுத்தவரை, கவலை தரும் விஷயமாக நுகர்வு தேவை குறைந்துஉள்ளது.
பொருளாதார வளர்ச்சி மந்தநிலையை தடுக்க, மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.கார்ப்பரேட் வரி விகிதத்தை, 30 சதவீதத்திலிருந்து, 22 சதவீதமாகக் குறைப்பதாக செப்டம்பரில் அறிவித்தது. மேலும், புதிய அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்காக புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி விகிதத்தை, 15 சதவீதமாகக் குறைத்தது அரசு.
இந்த வரி விகித குறைப்புகள், மற்ற ஆசிய நாடுகளின் விகிதங்களுக்கு இணையாக, இந்தியாவை மாற்றி வருகின்றன.ரிசர்வ் வங்கிமேலும், 10 பொதுத்துறை வங்கிகளை நான்காக இணைப்பது, வங்கிகளுக்கு மறு மூலதன முதலீடு செய்வது, வாகன துறைக்கு ஆதரவு, உள்கட்டமைப்பு செலவினங்களுக்கான திட்டங்கள் என, பல முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.
இருப்பினும், இந்த நடவடிக்கைகள் நுகர்வு தேவையில் ஏற்பட்டிருக்கும் தொய்வை தீர்ப்பதாக தெரியவில்லை.ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை தொடர்ந்து குறைத்து வருகிறது. மேலும், கூடுதல் வட்டி குறைப்பை ரிசர்வ் வங்கி அறிவிக்கக் கூடும்.இவ்வாறு, மூடிஸ் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|