பதிவு செய்த நாள்
18 டிச2019
02:48
புதுடில்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று தனியார் முதலீட்டை அதிகரிப்பது, ஏற்றுமதியை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, தொழில் துறையினர், வர்த்தகம் மற்றும் சேவை துறையினர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
வரும், 2020 – 2021ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், அடுத்த ஆண்டு பிப்., 1ல் தாக்கல் செய்யப்பட உள்ளது.இதையடுத்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், பட்ஜெட் தயாரிப்புக்கு முந்தைய ஆலோசனை கூட்டங்கள் துவங்கி உள்ளன. இதில், பல்வேறு துறையினருடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.பரிந்துரைகள்கடந்த திங்களன்று நடைபெற்ற முதல் நாள் கூட்டத்தில், வலைதளங்கள் உதவியுடன் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘ஸ்டார்ட் -அப்’ துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதி களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தனியார் முதலீட்டை அதிகரிப்பது, ஏற்றுமதியை மேம்படுத்துவது ஆகியவை குறித்து, தொழில் துறையினர், வர்த்தகம் மற்றும் சேவைகள் துறையினர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.இதில், வரி வழக்குகளை குறைப்பது, இடர்கள் குறைந்த தொழில்களில் சுய சான்றிதழ் வழங்கிக் கொள்வது, வரி மற்றும் நிறுவன சட்டங்களில் கிரிமினல் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து, பல்வேறு பரிந்துரைகளை துறையினர் சமர்ப்பித்தனர்.
இவை தவிர, பங்கு மூலதன செலவை குறைப்பது மற்றும் தொழிலாளர் சட்டங்களை எளிமையாக்குவது, சர்வதேச தரங்களை ஏற்றுக் கொள்வது ஆகியவை குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.மேலும் குறு, சிறு, நடுத்தர நிறுவன ஏற்றுமதியாளர்களுக்கு உதவுவதற்கான ஏற்றுமதி மேம்பாட்டு நிதியம், தொழில் துறைக்கு முதலீடுகள் எளிதாக வருவதற்கான வழிகள் ஆகியவை குறித்தும் பல பரிந்துரைகள் வழங்கப்பட்டன.
இது குறித்து, நிதியமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த கூட்டத்தின் போது, தனியார் முதலீட்டை பாதிக்கும் விதிமுறை அம்சங்கள், அதிகரித்து வரும் பாதுகாப்புவாத போக்குகளுக்கு மத்தியில், ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியவை குறித்து, விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. சிக்கல்கள்இவ்வாறு நிதியமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பின், பிரதிநிதிகளில் பலர், நடந்தவை குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கினர்.விக்ரம் கிர்லோஸ்கர், இந்திய தொழிலக கூட்டமைப்பின் தலைவர்: அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் நிலைமையை புரிந்து கொண்டுள்ளனர். பொருளாதார நிலைமைகளை சரி செய்வதற்கு, சாத்தியமான அனைத்து பரிந்துரைகளையும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.மேலும், வரி வசூலை மேம்படுத்துவது, நுகர்வு தேவையை அதிகரிப்பது ஆகியவை குறித்தும், நாங்கள் பல்வேறு பரிந்துரைகளை அவர்களுக்கு வழங்கினோம்.
சந்தீப் சோமனி, பிக்கி தலைவர்: வணிகத்தை பாதிக்கும் வகையிலான, ஒழுங்குமுறை விதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு சிக்கல்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கினோம். டி.கே.அகர்வால், பி.எச்.டி., சேம்பர் ஆப் காமர்ஸ்: வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெறுவதில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றன.அத்தகைய நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையில், 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியம் ஒன்றை உருவாக்குமாறு பரிந்துரைத்து உள்ளோம்.
தீபக் சூத், அசோசெம் செயலர்: தற்போதைய பொருளாதார நிலையில், தேவைகளை எவ்வாறு அதிகரிப்பது, பணப் புழக்கத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்த பொதுவான ஆலோசனைகளை வழங்கினோம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|