பதிவு செய்த நாள்
11 பிப்2020
18:13
நாட்டின் உற்பத்தித்துறையில், ஐம்பது சதவீதப் பங்களிப்பை, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி, 25 கோடி ரூபாய் வரையிலான கடன்களைப் பெற்று நிலுவையில் வைத்திருக்கும் நிறுவனங்கள், அவற்றை ஒருமுறை மறுசீரமைப்பு செய்துகொள்வதற்கான வாய்ப்பை, மத்திய அரசு வழங்கியது.
இதன்படி, நடப்பு மூலதனத்துக்காகப் பெற்ற கடன்களை நீண்டகாலக் கடன்களாக மாற்றிக்கொள்ளுதல், நீண்ட காலக் கடன் செலுத்துவதற்கான அவகாசத்தை அதிகரித்துக்கொள்ளுதல், வங்கிகள் ஏற்கனவே வாராக்கடனுக்காக ஒதுக்கியுள்ள தொகையுடன் கடன் மறுசீரமைப்புக்காக கூடுதலாக ஐந்து சதவீதத் தொகையை ஒதுக்குதல் போன்ற பயன்கள், இதன் மூலம் கிடைத்தன.அதேசமயம், திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள், கோவையில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் பலவும் கடன் நெருக்கடியில் இருந்து இன்னும் மீளவில்லை. இதனால், கடன் மறுசீரமைப்புக்கான அவகாசத்தை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. மத்திய பட்ஜெட்டில், இவர்களது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, ரிசர்வ் வங்கி, கடன் மறுசீரமைப்புக்கான அவகாசத்தை வரும் டிச., 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இதற்கு, நாடு முழுவதும் உள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறையினர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, நன்றி தெரிவித்துள்ளனர். ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், கடன் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு, இது நிச்சயம் பலன் அளிக்கும்.குறிப்பாக, வங்கிக்கணக்கு முடக்கம், புதிய கடன் வழங்க மறுப்பு, சொத்துகளைக் கைப்பற்றும் நடவடிக்கை போன்ற நெருக்கடிகளில் இருந்து, நிறுவனங்கள் விடுபட முடியும். ‘‘நிதி நெருக்கடியில் தவிக்கும் நிறுவனங்கள், கடனிலிருந்து மீண்டு, இழந்த வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் உத்தரவை, வங்கிகள் முறையாக பின்பற்றவேண்டும்’’ என்று கூறுகிறார், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜாசண்முகம்.இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, தொழில்துறையில், சாதிக்க, நிறுவனங்கள் முனைப்பு காட்ட வேண்டும்.
உதவிய ‘கடன் மேளா’வங்கிகளின் துணையின்றி, தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை, எண்ணிப் பார்க்க முடியாது. முதலீடு, நடைமுறை மூலதனம் உட்பட அனைத்து தேவைகளுக்கும் வங்கி கடன்களையே சார்ந்துள்ளன. மத்திய அரசு, இதற்கென, கோவை, திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில், ‘கடன் மேளா’வை நடத்தியது. இதன் மூலம், கோடிக்கணக்கான ரூபாய் கடனுதவி, தொழில் நிறுவனங்களுக்கு, வழங்கப்பட்டன. இதில், பெரிதும் பயன்பெற்றவை, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்தான்.‘‘59 நிமிடத்தில் கடன் அனுமதி, ‘முத்ரா’ திட்டம் போன்றவற்றை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில், வாராக்கடன் பெருகி வருவது, கவலையைத் தரும் விஷயம். கடன் முறையாகச் செலுத்தும் நிறுவனங்களுக்கு உடனடியாக கூடுதல் கடன் வழங்கப்பட்டு வருகிறது’’ என்கின்றனர், வங்கி அதிகாரிகள்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|