பதிவு செய்த நாள்
11 பிப்2020
18:16
கடந்த வாரங்களில் வருமான வரி பிடித்தம், சிறுதொழில் அமைப்புகளுக்கான கடன் வசதி, மானியங்கள் குறித்து பார்த்தோம். இப்போது ஜி.எஸ்.டி.,யின் நுணுக்கங்களையும் தெரிந்து கொள்வோம்.
“ஒரே நாடு, ஒரே வரி” என்ற அடிப்படையில், 17 மறைமுக வரிகளை உள்ளடக்கி ஒரே வரியாக, ஜி.எஸ்.டி., (goods and services tax) நடைமுறைப்படுத்தப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் அதுகுறித்த கேள்விகளும் விவாதங்களும் நீண்டு கொண்டிருக்கின்றன. இந்தியாவின் ‘பிரம்மாண்டமான வரி சீர்த்திருத்தம்’ என்று இதைச் சொல்லலாம்.உலகில் 160 நாடுகள் ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறையை பின்பற்றுகின்றன. சில நாடுகளில் மத்திய அரசு மட்டும் ஜி.எஸ்.டி.,யை செயல்படுத்துகின்றன. சிலவற்றில் மாநிலங்கள் மட்டுமே அமல்படுத்துகின்றன. மேலும் சில நாடுகளில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து இரட்டை ஜி.எஸ்.டி., முறையை செயல்படுத்துகின்றன. பிரேசில், கனடா போன்ற நாடுகள், இரட்டை ஜி.எஸ்.டி.,யை செயல்படுத்துகின்றன. இப்போது இந்தியாவும் இதில் இணைந்துள்ளது.
ஜி.எஸ்.டி-.,க்கு முந்தைய நடைமுறைப்படி, உற்பத்தி வரி, சேவை வரி ஆகியவற்றை மத்திய அரசும், மதிப்பு கூட்டு வரி, நுழைவு வரி, ஆடம்பர வரி, கொள்முதல் வரி உள்ளிட்டவற்றை மாநில அரசுகளும் விதித்து வந்தன. ஒரே வினியோகச் சங்கிலியில் பல்வேறு பெயர்களில் வரி வசூலிக்கப்பட்டு வந்தது.ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு வரி என்பது மத்திய அரசாலும் மாநில அரசுகளாலும் ஒரே நேரத்தில் எப்படி விதிக்கப்படும்? அதற்கான விடைதான் ஜி.எஸ்.டி.,
ஐந்தடுக்கு வரி நிலைகள்ஒரே மாநிலத்திற்குள் சரக்கு மற்றும் சேவை வினியோகிக்கப்படும்போது சரக்கு மற்றும் சேவை வரி என்பது இரண்டு விதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும். மத்திய ஜி.எஸ்.டி.,யை மத்திய அரசு விதித்து வசூலிக்கும், மாநில ஜி.எஸ்.டி.,யை மாநில அரசு விதித்து வசூலிக்கும். மாநிலங்களுக்கு இடையே சரக்கு மற்றும் சேவை வினியோகிக்கப்படும்போது மத்திய அரசு ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.,யை விதித்து வசூலிக்கும்.ஜி.எஸ்.டி., வரி விகிதம், இந்தியாவில் 0 சதவீதம், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 5 விதமாக உள்ளது. இதில் அதிகபட்சமாக 28 சதவீதம் என்பது சொகுசு பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் ஆஸ்திரேலியாவில் 10 சதவீதம், இங்கிலாந்து 20 சதவீதம், சிங்கப்பூர் 7 சதவீதம் , மெக்சிகோ 16 சதவீதம், ஜெர்மனி 19 சதவீதம், ஜப்பான் 8 சதவீதம் என்று உள்ளது.
ஜி.எஸ்.டி., எப்போது வசூலிக்கப்படும்?முந்தைய முறையில், விற்பனையின்போது மட்டுமே வரி வசூலிக்கப்பட்டு வந்தது. ஜி.எஸ்.டி., சட்டப்படி, சரக்கு மற்றும் சேவைகளின் வினியோகம் நடந்த காலத்தின் அடிப்படையிலேயே வரி விதிக்கப்படும். இது வினியோக நேரம் (Time of Supply) எனப்படும். வரிவிகிதம், மதிப்பு மற்றும் வரி செலுத்துவதற்கான தேதிகள் ஆகியவற்றை தீர்மானிக்க இது உதவுகிறது.
ஜி.எஸ்.டி., எங்கு வசூலிக்கப்படும்ஜி.எஸ்.டி., மூலம் ஆரம்பநிலை வரி முறையிலிருந்து, நுகர்வு சார்ந்த வரி முறையாக மாறுகிறது. இதன் விளைவாக, வினியோகமாகும் இடம் வரி தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளை வாங்குபவர் எந்த மாநிலத்தில் இருக்கிறாரோ அந்த மாநிலத்திற்கான ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கப்படும். இது வினியோக இடம் (Place of Supply) எனப்படும். எந்த மாநிலத்துக்குச் செல்ல வேண்டிய வரி என்பதைக் கண்டறியவே வினியோக இடம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. என்ன சரக்கு/ சேவை? எங்கிருந்து அனுப்புகிறார்? அனுப்புகிறவர் யார்? பெறும் நபர் யார்? சரக்கு சென்று சேரும் இடம் எது? அல்லது சேவை பெறும் இடம் எது? என்பதை வரி கணக்கிடும் முன்பே தீர்மானிக்கவேண்டும்.ஒரு வினியோகம் மாநிலத்திற்குள் நடைபெறும் விநியோகமா அல்லது மாநிலங்களுக்கிடையேயான விநியோகமா என்பதை தீர்மானிப்பது எப்படி?
வினியோகிப்பவரின் இடம் (Location of Supplier), வினியோகம் நடைபெறும் இடம் (Place of Supply) ஆகிய இரண்டினை அடிப்படையாகக் கொண்டு ஒரு வினியோகம் மாநிலத்திற்குள் நடைபெறும் வினியோகமா அல்லது இரு மாநிலங்களுக்கிடையில் இடம் பெறும் வினியோகமா என்பது தீர்மானிக்கப்படும்.உதாரணமாக, சென்னையில் வியாபாரம் செய்யும் சோம்நாத், ஈரோட்டில் உள்ள ராஜாராம் என்பவருக்கு சரக்குகளை வினியோகம் செய்கிறார். இது ஒரே மாநிலத்திற்குள் நடைபெறுவதால் இதற்கு மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சி.ஜி.எஸ்.டி.,), மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்.ஜி.எஸ்.டி.,) செலுத்த வேண்டும்.
ஈரோட்டிலிருந்து சில வேலைப்பாடுகளுக்கு பிறகு அவர் குஜராத்திற்கு வினியோகம் செய்கிறார். இரு வேறு மாநிலங்களுக்கிடையே வினியோகம் நடைபெறுவதால் அவர் ஏற்கனவே செலுத்திய உள்ளீட்டு வரியை கழித்து கொண்டு ஒருங்கிணைந்த மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (ஐ.ஜி.எஸ்.டி.,) செலுத்த வேண்டும்.வினியோகிப்பவரின் இடம் மற்றும் வினியோக இடத்தின் இருப்பிடம் வேறுவேறு மாநிலத்தில் இருந்தால், வினியோகம் என்பது மாநிலங்களுக்கிடையேயான (Inter-state) நடைபெறும் வினியோகம் ஆகும்.
ஜி.எஸ்.டி.,யின் பலன்கள்ஜி.எஸ்.டி., அறிமுகத்தின் மூலம் வரி மேல் வரி தவிர்ப்பு, வரி முறைகளில் வெளிப்படைத்தன்மை, வினியோகத்தின் தொடக்க நிலையில் செலுத்தப்பட்ட வரி குறித்த உள்ளீட்டு வரி விவரங்கள் ஆகிய பலன்களை பார்த்து வருகிறோம்.இருப்பினும் ஜி.எஸ்.டி., ஏராளமான நடைமுறை சவால்களையும் பிரச்னைகளையும் சந்தித்து வருகிறது. அதுபற்றி வரும் கட்டுரைகளில் காண்போம்.
-ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்
வாசக வணிகர்களே உங்கள் சந்தேகங்களை எழுத வேண்டிய இமெயில்: karthi@gkmtax.com
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|