பதிவு செய்த நாள்
17 மார்2020
22:39
சண்டையா, சமாதானமா என்று கேட்டால், எந்த ஒரு பிரச்னைக்கும் சமாதானமே, சந்தோஷமான தீர்வு என்பேன். பேசித்தீர்க்க பல்வேறு வழிகள் இருக்கும்போது, சச்சரவுகளை ஏன் நீட்டித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதனால், கால விரயம். பண விரயம்தான் மிச்சமாகும். நம் பக்கம் நியாயம்கிடைக்கும் வரை பேசலாம்.அது எட்டியவுடன் பிரச்னைகளை தீர்க்கும் வழிகாணலாம். போராட்டங்கள்தான் வாழ்க்கையைபுதுப்பிக்கிறது.
தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், தங்கள் தொழில் பயணத்தில் நிறைய சச்சரவுகளை சந்தித்திருப்பார்கள். அரசு துறைகளுடன், வர்த்தக போட்டியாளர்களுடன், வாடிக்கையாளர்களுடன் ஏன் ஊழியர்களுடன் கூட. சச்சரவுகளை பேசித் தீர்ப்பது ஒரு வணிகக் கலை. இங்கே அப்படி ஒரு சச்சரவுக்கான தீர்வு குறித்து காணப்போகிறோம்.
இது வருமான வரித்துறையுடன் வணிக நிறுவனங்கள் / தனி நபருக்கான வரி சச்சரவுகள் குறித்த இப்போதைய கள நிலவரம் குறித்து:கூடுதல் வரி விதிக்கலாம்தனிநபர், தொழில் நிறுவனங்கள் ஆண்டுதோறும் வருமான வரி கணக்குகளை, வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்கிறார்கள். பல சமயங்களில், அவற்றை வரித்துறையினர் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. அதிகாரிகளின் மதிப்பீடுகளில், சில வரிதாரர்களின் வருமானம் அதிகம் எனக் கொள்ளப்படும். சிலரின் செலவுகளை முழு அளவில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவை எல்லாமே இரு தரப்பும் தத்தம் வரிச்சட்டங்களை புரிந்து கொண்டிருக்கும் அளவில் மாறுபடும்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வரிதாரர் கணக்கிட்டிருக்கும் வரி தொகையைக்காட்டிலும், கூடுதல் வரி விதிக்கப்படலாம். அப்படி குறிப்பிடப்படும் கூடுதல் வரியை ஏற்றுக்கொள்ளாத வரிதாரர் மேல்முறையீட்டுக்கு செல்லலாம் / சென்றிருக்கலாம்.எப்படி நிகழ்கிறது?
வரிதாரர் தாக்கல் செய்யும் கணக்கு விவரங்களை, வருமான வரித்துறையின் வரி அதிகாரி அல்லது அந்த துறையின் உதவி ஆணையர் ஆகியோரில் ஒருவர், வரி மதிப்பீடு செய்வார். தாக்கல் செய்யப்பட்ட வருமானத்தைவிட அதிகம் காண்பிக்கப்பட்டு, அது வரிதாரருக்கு உடன்பாடில்லை என்றால் மேல்முறையீட்டுக்குச் செல்லலாம். மேல்முறையீடு ஆணையர், டிரிபியூனல், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று படிப்படியாக, சட்டத்தின் பாதையில், மேல்முறையீடு வழக்குகள் பயணிக்கும். இதில் ஏதாவது ஒரு நிலையில் வரிதாரர் / வரி அதிகாரிக்கு திருப்தி வரும் பட்சத்தில் அத்துடன் சச்சரவுகளை முடித்துக்கொண்டு அந்த பிரச்னையில் இருந்து வெளியேறலாம். அது இல்லாத பட்சத்தில், நீண்ட காலம் அந்த சச்சரவுகள் நிலுவையில் இருக்கும். அது வரிதாரருக்கும் ஒரு சுமை.
சுப்ரீம் கோர்ட் உட்பட அனைத்து மேல்முறையீட்டு அமைப்புகளில் சேர்த்து, இதுபோன்ற வருமான வரி சச்சரவுகள், நாடு முழுவதும், கிட்டதட்ட 4.83 லட்சம் வழக்குள் நிலுவையில் உள்ளன. இதன்மூலம் ரூ.9.36 லட்சம் கோடி தொகை முறையீட்டில் உள்ளது.
நடப்பு நிதியாண்டில், நேரடி (வருமான) வரி வசூல் இலக்கு, ரூ.13.35 லட்சம் கோடி என மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக நேரடி வரி வசூல் எதிர்பார்த்த அளவில் இல்லை. இதனால், வசூல் இலக்கையும் குறைத்து, ரூ. 11.8 லட்சம் கோடி என நிர்ணயித்துள்ளது. அந்த வசூல் இலக்கை அடைய, வரி சச்சரவு வழக்குகள் கொண்ட வரிதாரர்கள் பயனடைய, மேலும் ஒரு திட்டத்தை மத்திய நிதித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுவே, ‘’விவாத் சே விஸ்வாஸ்’’ என்ற சமாதான திட்டமாகும். அதன் பொருள், ‘‘சர்ச்சை இல்லை நம்பிக்கை’’ என்பதாகும்.
அபராதம் கிடையாது
இந்த திட்டத்தின்படி, எல்லா நிலைகளிலும், மேல்முறையீடு நிலுவையில் உள்ள வருமான வரி வழக்கு நடத்தும் வரிதாரர்கள் பலன் பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ், 2020 ஜனவரி 31 ம் தேதிக்கு முன்பு வரை நிலுவையில் உள்ள வருமான வரி வழக்குகளில் மேல் முறையீட்டை கைவிட்டு, வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் வரி செலுத்த முன் வருபவர்கள் வரி மட்டும் செலுத்தினால் போதும். அபராதம் மற்றும் வட்டி கிடையாது.
அதுபோல், மார்ச் 31க்குள் வரி செலுத்த முடியவில்லை என்றால், அடுத்த கட்டமாக, ஜூன் 30க்கு முன் செலுத்தினால், 110 சதவீதம் வரி செலுத்தினால் போதும். வட்டி, அபராதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
வரித்துறை மேல்முறையீடு செய்தால், அது 50 சதவீதம் ஆகும்.ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த வட்டி அபராதம் ஆகியவற்றிற்கு இது, 25 சதவீதம் ஆகும். மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போது ஏற்கனவே வரி செலுத்தி, வழக்கு நடத்துபவர்களும் இந்த திட்டத்தில் பலனடைய முடியும். தேங்கி கிடக்கும் நிலுவை வழக்குகளையும், அதனால் அரசுக்கு வர வேண்டிய வரி தொகைகளை வசூலிப்பதுமே இந்த திட்டத்தின் நோக்கம்.
சுமூக தீர்வு
மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, பிப்ரவரி மாதத்திலேயே இந்த சட்ட மசோதாவை பார்லிமென்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தபோதும், மார்ச் முதல் வாரத்துக்குப்பிறகுதான் இது சட்டமாகி உள்ளது. எனவே, இந்த திட்டத்தின் கீழ் பயனடைவதற்கான கால அவகாசம் (மார்ச் 31) மிக மிகக் குறைவு.
‘’விவாத் சே விஸ்வாஸ்’’ திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் வருமானவரித்துறை கமிஷனரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர், இந்த திட்டத்தின் கீழ் வரிதாரரின் மேல்முறையீடு வருகிறது என்று ஒத்துக்கொள்ளும் பட்சத்தில், 15 நாட்களுக்குள் ஏற்கனவே செய்யப்பட்ட மேல்முறையீட்டை வாபஸ் பெற்றுக்கொண்டு வரியை செலுத்தி அதற்கான மதிப்பீட்டையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் பயனடைய வரிதாரர்கள் தங்கள் ஆடிட்டரை அணுகலாம். அவர்கள் இந்த பிரச்னையை சுமூகமாக தீர்க்க உதவுவார்கள்.
வரிதாரர்களுக்கு மட்டுமல்ல... இந்த திட்டத்தை பயன்படுத்தி நிலுவை வழக்குகளை முடித்து, அரசு கஜானாவை நிரப்பும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு / விருப்ப பணியிட மாற்றங்கள் என்ற இனிப்பு காத்திருக்கிறது. இந்த திட்டத்தின்படி, இந்த நிதியாண்டில், மத்திய அரசுக்கு ரூ.1.5 லட்சம் கோடி வரி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு மட்டுமல்ல நாடு முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த இப்போதே களமிறங்கி உள்ளார்கள். நிலுவை மேல்முறையீட்டு வழக்குகளை முடிக்கச் சொல்லி, ஆடிட்டர்களுக்கும் தொலைபேசி அழைப்புகள் சென்ற வண்ணம் உள்ளன.
நீட்டிக்க கோரிக்கை
இந்த திட்டத்தை பயன்படுத்த மார்ச் 31 ஆம் தேதி என்ற மிக குறுகிய கால அவகாசம், ‘கொரோனா’ வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வர்த்தக தேக்க நிலை போன்ற காரணங்களால் சிறிது தொய்வு ஏற்படலாம். அரசின் முயற்சி பலனளிக்கவும், வரிதாரர்கள் பயனடையவும் ஏதுவாக, இந்த திட்டத்துக்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்பதே வரிதாரர்கள் / வர்த்தகர்கள் / தொழிலதிபர்கள் கோரிக்கையாக உள்ளது. வரிதாரர்களுக்கு ‘‘நம்பிக்கை’’ தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். நாமும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீது நம்பிக்கை கொள்வோம்.
யாருக்கு உடனடி பலன்?
அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் சார்பில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வருமான வரி வழக்குகள் இந்த திட்டத்தின் கீழ் வேகமாக தீர்க்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. தனிநபர் / தனியார் நிறுவனங்களும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
யாருக்கு பொருந்தாது?
வருமானவரிச் சோதனையின்போது ரூ.5 கோடிக்கு அதிகமான வரி மதிப்பீடு கொண்ட மேல்முறையீடு வரிதாரர்.வருமான வரி வழக்குகளில் தண்டனை பரிந்துரை செய்யப்பட்டவர்கள்.வெளிநாட்டு சொத்துக்களை கணக்கில் காட்டாதவர்கள்.சட்டத்துக்கு புறம்பான வருமான வரி மேல்முறையீடுபினாமி சட்டத்தின் கீழ் உள்ளவர்கள்.
(தொழில் சுகம் தொடரும்)
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|