பதிவு செய்த நாள்
14 ஏப்2020
11:29
உலகை நடுங்க வைத்துள்ள ‘கொரோனா’ வைரஸ், 209 நாடுகளை பாதித்து, மரணங்கள் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதன் பிடியில் இருந்து தப்பிக்க, மக்கள் வீடுகளுக்குள் இருப்பதை தவிர, வேறு வழியில்லை.
இந்தியாவில், மார்ச் துவக்கத்தில் ஆரம்பித்த பாதிப்பு, மாத இறுதியில் தேசிய ஊரடங்கு என்ற அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது. உணவு மற்றும் மருந்து சந்தைகள் தவிர, வேறு எந்த சந்தைகளும் இந்தியாவில் இயங்கவில்லை. இதனால், மார்ச் மாத ஜி.எஸ்.டி., வரி வசூல் கடும் சரிவை சந்தித்தது.பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், நிதித்துறை சார்ந்த சில முக்கிய அறிவிப்புகளையும் பொருளாதார தாக்கத்தை எதிர்கொள்வதற்கான நிவாரண அறிவிப்புகளையும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். அதில் முக்கிய அறிவிப்பாக, ஜி.எஸ்.டி., தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. பல தரப்பினருக்கு, வட்டி, அபராதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
ஜி.எஸ்.டி., ரிட்டர்ன்காலக்கெடு நீட்டிப்பு
2020 மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான, ஜி.எஸ்.டி., தாக்கல் செய்யும் கடைசி நாள் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், வரி செலுத்துவதற்கும், 2019- –20ம் ஆண்டுக்கான வருடாந்திர வருவாயை, தொகுப்பு முறை (Composition Scheme) திட்டத்தின் கீழ் விற்பனையாளர்களால் தாக்கல் செய்யவும், 2020 ஜூன் கடைசி வாரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரிட்டர்ன் தாக்கலுக்கு மட்டுமல்லாமல், ஜி.எஸ்.டி., நோட்டீஸ் ரிப்ளை செய்தல், எந்தவொரு முறையீடு, பதில் அல்லது விண்ணப்பம் அல்லது எந்தவொரு அறிக்கை, ஆவணம், வருவாய், அறிக்கை அல்லது வேறு எந்த பதிவையும் தாக்கல் செய்தல் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும்.
யாருக்கெல்லாம்அபராதம் இல்லை
ரூ.5 கோடிக்கும் குறைவான விற்றுமுதல் (turnover) உள்ள நிறுவனங்களுக்கு, வட்டி, தாமத கட்டணம் அல்லது அபராதம் இல்லை. ரூ.5 கோடிக்கும் அதிக விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களுக்கு, தாமத கட்டணம், அபராதம் கிடையாது; ஆனால் 9 சதவீத வட்டி உண்டு.உதாரணமாக, ஒருவர் மார்ச் 2020 மாதத்துக்கான படிவம் ஜிஎஸ்டிஆர் 3B, மே 2 அன்று தாக்கல் செய்தால் வட்டி, அபராதம் இல்லை, அதுவே, மே 20 அன்று தாக்கல் செய்தால் அபராதம் இல்லை; ஆனால், வட்டி 9 சதவீதம் செலுத்த வேண்டும்.அதுபோலவே, ஏப்ரல் 2020 மாதத்துக்கான படிவம் ஜிஎஸ்டிஆர்-1 (காலக்கெடு மே 11, 2020) ஜூன் 20 அன்று தாக்கல் செய்தால், தாமத கட்டணம் இல்லை. அதுவே, ஜூலை 5 அன்று தாக்கல் செய்தால், ஒரு நாளைக்கு 20 ரூபாய் (for NIL taxpayer) எனவும், மற்ற ஜி.எஸ்.டி., வரிதாரர்களுக்கு ஒரு நாளைக்கு 50 ரூபாய் எனவும், 55 நாட்களுக்கு கணக்கிடப்படும். எனவே, இதை கருத்தில் கொண்டு, ஜி.எஸ்.டி., படிவங்களை தாக்கல் செய்தல் அவசியம்.
பதிலீடு திட்டத்தை தேர்வு செய்வதற்கான ‘சப் க விகாஸ்’ திட்டம், ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு இருந்தாலும், இக்காலத்தில் சுங்கத்துறை, 24 மணி நேரமும் செயல்படும். ‘இ-வே பில்’ தாக்கலுக்கான காலக்கெடுவும், ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடு நீட்டிப்பு பின்வரும் வகைகளுக்கு பொருந்தாது.
* வழங்கல் நேரத்தின் (time of supply) அடிப்படையில் வரி செலுத்த வேண்டிய வரும்போது.
* தொகுப்பு முறையில் பதிவு பெற்றவரின் விற்றுமுதல் வரம்பைக் கடக்கும்போது.
* புதிய பதிவு பெறுதல் தொடர்பான ஏற்பாடுகள்.
* வரி விலைப்பட்டியல், வழங்கப்பட்ட பில், பெறப்பட்ட ரசீது, சுய விலைப்பட்டியல், கட்டண ரசீது, திருத்தப்பட்ட வரி விலைப்பட்டியல் போன்றவற்றை வழங்கிய தேதி.
* மின்-வழித்தடத்தை உருவாக்குதல், சரிபார்ப்பு மற்றும் சரிபார்ப்பு (மேலே கொடுக்கப்பட்டுள்ளதைத் தவிர) மற்றும் பொருட்களின் தடுப்புக்காவல், பறிமுதல் மற்றும் வெளியீடு மற்றும் போக்குவரத்தில் அனுப்புதல்.
தொழில் அமைப்புக்களின் கைகளில், அதிக பணம் புரளும் வகையில் ஜி.எஸ்.டி., வருமான வரி மற்றும் கலால் ரீபண்ட் உடனடியாக திருப்பித்தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் தங்கள் வீட்டிலிருந்தே ஜிஎஸ்டி சாப்ட்வேர் மூலம், தங்கள் பணியை செய்ய அரசு அனுமதித்துள்ளது. இந்த ரீபண்ட் தொகை, சுமார் ரூ18,000 கோடி என்று கூறப்படுகிறது. இக்கட்டான இந்த சூழ்நிலையில், வரி விபரங்கள் தாக்கல் செய்வதும் கூட தொழில்துறையினருக்கு ஒரு சுமையை தந்துவிடக்கூடாது என்பதற்காக, மத்திய அரசு இந்த ஜி.எஸ்.டி., சலுகைகள் அறிவித்துள்ளது. இதுபோன்று மேலும் பல அறிவிப்புகள் வரும். அது தொழில், வணிக துறையினருக்கு தெம்பு தரலாம் என்று நம்புவோம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|