பதிவு செய்த நாள்
14 ஏப்2020
23:40
புதுடில்லி:கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், மேலும், 18 நாட்களுக்கு தடையை நீட்டிப்பதாக பிரதமர் அறிவித்துள்ளதை, இந்திய நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.
தடையை நீட்டித்து, விரிவான வழிகாட்டுதல்களும் வெளியிடப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை வரவேற்றுள்ள இந்திய நிறுவனங்கள், கூடவே, பொருளாதாரத்தை மீண்டும் கட்டமைக்க, சலுகைகள் தேவை என்றும் தெரிவித்துள்ளன.
நாடு முடக்கப்பட்டதால், பாதிப்படைந்தவர்கள் நிவாரணம் பெறவும், நோய் தொற்றை எதிர்கொள்ளும் மருத்துவ பணியாளர்களுக்கான காப்பீட்டுக்காகவும், கடந்த மாதம், 1.7 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை, மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், மேலும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என, நிறுவனங்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.
சங்கீதா ரெட்டி, தலைவர், இந்திய வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு:
நாடு முடக்கப்பட்டதை அடுத்து, தினசரி, 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், கடந்த, 21 நாட்களில், கிட்டத்தட்ட 7 முதல், 8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.மேலும், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், 4 கோடி பேர் வேலை இழக்கும் அபாயமும் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
படிப்படியாக தடைகள் தளர்த்தப்படும் என, பிரதமர் அறிவித்திருப்பதால், தடைகள் நீக்கப்பட்டதும், சில உற்பத்திகள் துவங்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.
சந்திரஜித் பேனர்ஜி, டைரக்டர் ஜெனரல், இந்திய தொழில் துறை கூட்டமைப்பு:
தடையை நீட்டிப்பது என்ற பிரதமரின் முடிவு மிக சரியானது தான். இம்மாதம், 20ம் தேதிக்குப் பிறகு தடையை தளர்த்த இருப்பது, நிறுவனங்கள் திட்டமிடுவதற்கு உதவியாக இருக்கும்.இந்த தடை நீட்டிப்பானது, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், பொருளாதாரத்தை பாதுகாப்பாக மேம்படுத்துவதற்கும் வசதியாக இருக்கும்.
அதைப்போலவே, நிறுவனங்களும், அவற்றின் செயல்பாட்டை துவங்குவது குறித்த திட்டமிடலுக்கு, இந்த நீட்டிப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.நாஸ்காம், தகவல் தொழில்நுட்ப துறை அமைப்பு அரசின் தடை நீட்டிப்பு குறித்து நாங்களும் சந்தோஷம் அடைகிறோம்.
மேலும், அரசு, சலுகை திட்டங்களையும் அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். அப்படி அறிவிப்பதன் மூலம், நாம் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து நம் கவனங்களை அதில் செலுத்தலாம்.ரதுல் புரி, தலைவர், ஹிந்துஸ்தான் பவர்:தடை விதிப்பு, விலகி இருப்பது என, இரண்டு வழிகள் தான், இந்த நோயை எதிர்ப்பதற்கு நம்மிடம் உள்ளன.
இந்த நோய் தொற்று, பரந்துபட்ட அளவில் வணிகத்தையும் பொருளாதாரத்தையும் பாதித்து உள்ளது. நவீன் ஜிண்டால், தலைவர், ஜிண்டால் ஸ்டீல் அண்டு பவர்:தடை நீட்டிப்பு மிகச் சிறந்த யோசனையாகும். மிகுந்த திட்டமிடல் இதற்கு தேவை. நோய் பாதிப்பை கண்காணிக்கவும், செயல்படுத்தவும், 20ம் தேதிக்கு பிறகு தளர்த்தவும் பிரதமர் எடுத்திருக்கும் முயற்சியை வரவேற்கிறோம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|