பதிவு செய்த நாள்
23 ஏப்2020
04:03
புதுடில்லி : முகேஷ் அம்பானியின் தலைமையிலான, ஜியோ நிறுவனத்தின், 10 சதவீத பங்குகளை, ‘பேஸ்புக்’ கையகப்படுத்தி உள்ளது.இதன் மூலம், உலகில் வேகமாக வளர்ந்து வரும் இந்திய டிஜிட்டல் சந்தையில், தன் காலை இன்னும் அழுத்தமாக ஊன்றி இருக்கிறது, பேஸ்புக்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின், டிஜிட்டல் சேவைகளுக்கான நிறுவனம், ஜியோ பிளாட்பார்ம். இந்நிறுவனத்தின், 9.99 சதவீத பங்குகளை, 43 ஆயிரத்து, 574 கோடி ரூபாய்க்கு, பேஸ்புக் வாங்கி உள்ளது. இதையடுத்து, ஜியோ நிறுவனத்தின் பெரிய மைனாரிட்டி பங்குதாரராகி உள்ளது, பேஸ்புக்.
நோக்கம் : ரிலையன்ஸ் நிறுவனம், அடுத்த ஆண்டுக்குள், கடன் இல்லாத நிறுவனமாக மாறும் முயற்சியில் உள்ளது. அதன்படி, கடன்களை குறைத்து, மதிப்பை அதிகரிக்கும் முயற்சிகளில் ஒன்றாக, தற்போது பேஸ்புக் முதலீடு பெறப்பட்டுள்ளது.ஏற்கனவே, எண்ணெய் – -ரசாயன வணிகத்தின், 20 சதவீத பங்குகளை, 1,500 கோடி அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்வது குறித்த முயற்சியில், ரிலையன்ஸ் ஈடுபட்டு வருகிறது. மேலும், எரிபொருள் வணிகத்துக்காக, பி.பி.சி.எல்., நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.
ஏற்கனவே, ஜியோ குறித்து, கூகுளுடன் தனியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. ஆனால் அது என்னவானது என்பது தெரியவில்லை.தற்போது, ஜியோவில், பேஸ்புக் முதலீடு செய்திருப்பது, இருதரப்புக்கும் பயனளிப்பதாக இருக்கும் என்கிறார்கள், நிபுணர்கள். பேஸ்புக்குக்கு பயன்பேஸ்புக்கை பொறுத்தவரை, அதனால், இன்டர்நெட் சந்தையில், சீனாவுக்கு அடுத்து பெரிய நாடாக இருக்கும் இந்தியாவில், இன்னும் ஆழமாக காலுான்ற முடியும்.பேஸ்புக் நிறுவனத்துக்கு ஏற்கனவே, 40 கோடிக்கும் அதிகமான வாட்ஸ் ஆப் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில், இந்நிறுவனம் பணப்பரிவர்த்தனை வணிகத்திலும் ஈடுபட உள்ளது.
எனவே, உள்நாட்டு நிறுவனத்தின் துணை இருந்தால், தனியுரிமை மற்றும் தரவுகள் சேமிப்பு உள்ளிட்டவை எளிதாக இருக்கும் என்பதால், இம்முயற்சியை, பேஸ்புக் மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது.ரிலையன்சுக்கு பயன் ரிலையன்சை பொறுத்தவரை, பேஸ்புக்கின் தொழில்நுட்ப துணை கிடைக்கும்.மேலும் ஜியோவை, ஒரு டிஜிட்டல் கம்பெனியாக மாற்றவும் உதவிகரமாக இருக்கும்.கூடவே, அடுத்த மார்ச் மாதத்துக்குள், கடன் இல்லா நிறுவனமாக மாற்றும் இலக்குக்கும் இந்த கூட்டு பங்களிக்கும்.இந்திய டிஜிட்டல் சந்தையில், வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டிக்கு கடுமையாக ஈடு கொடுத்து வரும் ரிலையன்சுக்கு மட்டுமின்றி, சிறிய வணிகர்களுக்கும் இந்த கூட்டு, மிகவும் வலு சேர்க்கக்கூடியதாகவே இருக்கும் என, எதிர்பார்க்கலாம்.
வெகுவிரைவில், ஜியோவின் புதிய டிஜிட்டல் வர்த்தக தளமான, ‘ஜியோ மார்ட், வாட்ஸ் ஆப்’ உடன் இணைந்து, நாட்டிலுள்ள, மூன்று கோடி சிறு கடைகள், தங்கள் வாடிக்கையாளர்களுடன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவும். இதன் மூலம், அனைவரும் அன்றாட தேவைகளுக்கான பொருட்களை, அருகில் உள்ள கடைகளின் மூலம் எளிதாக பெற முடியும். சிறிய கடைகளும், தங்கள் வணிகத்தை பெருக்கி, கூடவே, வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்க முடியும். மேலும், பிரதமர் மோடியின், ’டிஜிட்டல் இந்தியா’ திட்டத்துக்கான இரண்டு குறிக்கோள்களான, ’வாழ்வில் எளிமை, வணிகத்தில் எளிமை’ என்பதை அடைய, இந்த கூட்டு உதவிகரமாக இருக்கும்.-முகேஷ் அம்பானி, தலைவர், ரிலையன்ஸ் குழுமம்இந்த முயற்சி, வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் மக்களுக்கும், வணிகங்களுக்கும் புது வழிகளைத் திறக்கும். உதாரணமாக, ஜியோ மார்ட், வாட்ஸ்- ஆப்பின் திறனுடன் சேரும்போது, வணிகத் தொடர்போ, பொருட்களை வாங்குவதோ சிரமமற்ற ஒரு சிறந்த மொபைல் அனுபவமாக இருக்கும். மார்க் ஜுகர் பெர்க், நிறுவனர், பேஸ்புக்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|