பதிவு செய்த நாள்
08 ஜூன்2020
13:18
கடன் தவணை செலுத்துவதை தள்ளி வைக்கும் சலுகை வசதி, வங்கிகளிடம் இருந்து புதிதாக கடன் பெறுவதை பாதிக்கலாம் என கருதப்படுகிறது.கொரோனா கால பாதிப்பை சமாளிக்க உதவும் வகையில், ரிசர்வ் வங்கி அறிவித்த கடன் தவணை தள்ளிவைப்பு சலுகை, ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்திற்கு வட்டி பொருந்தும் என்பதால், தள்ளிவைப்பு சலுகையை நாடுவதால், கடன் சுமை அதிகரிக்கும் என்று ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், தவணை தள்ளிவைப்பு சலுகையை நாடுவது, புதிய சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த வசதியை நாடுபவர்களுக்கு, வங்கிகள் புதிதாக கடன் கொடுக்க தயக்கம் காட்டலாம் என கூறப்படுகிறது. ஒரு சில வங்கிகள் ஏற்கனவே அங்கீகரித்த கடனை கூட நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
பாதிப்பு ஏன்?
கடன் தவணை தள்ளிவைப்பை அறிவித்த போதே, இதனால் ‘கிரெடிட் ஸ்கோர்’ எனப்படும் கடன் தகுதி மதிப்பெண் பாதிக்கப்படாது என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில், வங்கிகள் இந்த வசதியை நாடுபவர்களுக்கு புதிதாக கடன் கொடுக்க தயக்கம் காட்டுவது ஏன் எனும் கேள்வி எழலாம். வங்கிகள் கடன் கொடுக்கும் போது, கடனை திரும்பி செலுத்தும் ஆற்றலை முக்கியமாக கருதுகின்றன. இதை அளவிட கிரெடிட் ஸ்கோரும் உதவுகிறது.
தற்போது, கடன் தவணையை தள்ளி வைக்கும் வசதியை நாடுபவர்கள், உடனடியாக பணத்தை செலுத்த முடியாத நிலையில் இருப்பவர்கள் என கருதப்பட வாய்ப்பிருப்பதால், அவர்களின் திரும்ப செலுத்தும் ஆற்றல் கேள்விக்குள்ளாகிறது. எனவே, வங்கிகள் இவர்களுக்கு புதிதாக கடன் கொடுக்க தயங்குகின்றன. அதிக இடர்மிக்க கடன்களை வங்கிகள் தவிர்த்து வருவதால், கடன் தவணையை செலுத்த முடியாதவர்கள் என கருதப்படும் நபர்களிடம், எச்சரிக்கையான அணுகுமுறையை கடைப்பிடிக்கின்றன. ஏற்கனவே கடன் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், அதை மறுபரிசீலனை செய்கின்றன.
குறுகிய கால பாதிப்பு
வங்கிகளின் எச்சரிக்கையான அணுகுமுறை ஒரு பக்கம் இருக்க, கடன் தவணை தள்ளிவைப்பு சலுகையை நாடியவர்கள் எல்லாருமே சிக்கலில் இருப்பவர்கள் என கருதிவிட முடியாது. நிதி நெருக்கடி இல்லாத நிலையிலும் கூட, பலரும் இயல்பான வசதியாக இதை நாடியிருக்கலாம். மேலும் சிலர், தற்போதைய நெருக்கடி எவ்வளவு காலம் நீடிக்கும் என நிச்சயமாக தெரியாததால், இவ்வாறு தீர்மானித்திருக்கலாம். ஒரு சிலர், தேவையில்லாத நிலையிலும், தெரியாமல் இந்த வசதியை நாடியிருக்கலாம்.
எனவே, தவணை தள்ளிவைப்பை நாடுவதாலேயே ஒருவர் சிக்கலில் இருப்பதாக கருதி, கடன் வாய்ப்பு மறுக்கப்படுவது சரியா என கேள்வி எழலாம்.எனினும், இந்த தயக்கமும், கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதும் தற்காலிகமாகவே இருக்கும் என வல்லுனர்கள் கூறுகின்றனர். எப்படியும், வங்கிகள் கடன் பெற்றவரின் ஆற்றலை பரிசீலித்து, அதற்கேற்ப முடிவு செய்யும் என்று கருதப்படுகிறது.
தவணை சலுகையை நாடியதால், புதிய கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால், கடன்தாரர் வங்கியை அணுகி தங்கள் நிலையை விளக்கலாம். நிதி நிலை திருப்திகரமாக இருந்தால், கடன் கோரிக்கை ஏற்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், பொருளாதார நிச்சயமற்ற சூழலில், தேவையில்லாமல் புதிய கடனை நாடுவதை தவிர்ப்பதே நல்லது என, கருதப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|