பதிவு செய்த நாள்
16 ஜூன்2020
23:59
புதுடில்லி:தொடர்ந்து, மூன்றாவது மாதமாக, மே மாதத்திலும், நாட்டின் ஏற்றுமதி சரிவைக் கண்டுள்ளது. கடந்த மே மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 36.47 சதவீதம் சரிந்து, 1.44 லட்சம்
கோடி ரூபாயாக உள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக, உலகளவிலான தேவைகள் குறைந்ததை அடுத்து, நாட்டின் ஏற்றுமதி குறைந்து வருகிறது. இருப்பினும், கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, மே மாதம் ஓரளவு வளர்ச்சி பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும். ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி, 60.28 சதவீதம் அளவுக்கு சரிந்திருந்தது.
கடந்த மே மாதத்தில், ஏற்றுமதி மட்டுமின்றி, இறக்குமதியும் சரிவைக் கண்டுள்ளது. நாட்டின் இறக்குமதி, 51 சதவீதம் சரிவைக் கண்டு, 1.68 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதையடுத்து, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, 23 ஆயிரத்து 783 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில், வர்த்தகப் பற்றாக்குறை, 1.16 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அரிசி, மசாலா பொருட்கள், இரும்பு தாது, மருந்துகள் என, 26 முக்கிய துறைகளில், மே
மாதத்தில், ஏற்றுமதி சரிவைக் கண்டுள்ளது.நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 68.83 சதவீதமும்; தோல் பொருட்கள் ஏற்றுமதி, 75 சதவீதமும் மதிப்பீட்டு மாதத்தில் சரிவைக் கண்டுள்ளன. ஆயத்த ஆடைகள் மற்றும் ஜவுளி, 66.19 சதவீதம் சரிவைக் கண்டு உள்ளது.இறக்குமதியை பொறுத்தவரை, எண்ணெய் இறக்குமதி, 71.98 சதவீதமும்; எண்ணெய் அல்லாத பொருட்கள் இறக்குமதி, 43.13 சதவீதமும் சரிந்துள்ளது.
தங்க இறக்குமதியும், கடந்த மே மாதத்தில், 98.4 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.
நாட்டின் சேவைகள் ஏற்றுமதியும், கடந்த ஏப்ரல் மாதத்தில், 8.92 சதவீதம் சரிந்து, 1.25 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதுவே, கடந்த ஆண்டு ஏப்ரலில், 1.33 லட்சம் கோடி ரூபாயாக
இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|