பதிவு செய்த நாள்
19 ஜூன்2020
21:40
கோல்கட்டா:மக்களிடையே, சீன தயாரிப்புகளுக்கு எதிரான மனநிலை அதிகரித்து வரும் நிலையில், சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளை, இந்திய பிராண்டாக காட்டும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன.
இந்தியாவின் மொபைல் போன் சந்தையில், கிட்டத்தட்ட, 70 சதவீதம், சீன தயாரிப்பாளர்கள் வசம் உள்ளது. இந்நிலையில், சீன நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை, இந்திய பிராண்டாக காட்டும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன.'டெக்னோ மொபைல்' எனும் சீன நிறுவனம், தன் பொருட்களின் பேக்கேஜுகளில், 'மேட் இன் இந்தியா' என்பதை பளிச் என்று தெரியும் வகையில் அச்சிடப்போவதாக தெரிவித்துள்ளது.'ரியல்மி' பிராண்டு, சீன நிறுவனமான, 'பி.பி.கே., எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகும்.
இந்நிறுவனத்தின் வசம், 'ஒப்போ, விவோ, ஒன்பிளஸ், டிரான்சியான்' போன்ற பிராண்டு களும் உள்ளன. இந்நிலையில், 'ரியல்மி இந்தியா' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத், ''ரியல்மி, ஓர் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் என பெருமையாகச் சொல்வேன். இப்போது, இந்நிறுவனம், பன்னாட்டு நிறுவனமாக உயர்ந்துள்ளது,'' என தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலை குறித்து, மொபைல் போன் தயாரிப்பு நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:இதுவரை விற்பனையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் தெரிய வரவில்லை. இதற்கு முன், 'டோக்லாம்' விவகாரத்தின் போதும், குறுகிய கால அளவுக்கே பாதிப்புகளை சந்தித்தோம். இந்தியாவில் விற்பனை ஆகும், 'டாப் 5' ஸ்மார்ட்போன்களில், நான்கு சீன தயாரிப்புகளாகும். சந்தையில் இவற்றின் பங்களிப்பு, மார்ச் காலாண்டின் நிலரவரப்படி, 76 சதவீதமாகும். தென்கொரியாவை சேர்ந்த, 'சாம்சங்' மூன்றாவது இடத்தில் உள்ளது. இதன் சந்தை பங்களிப்பு, 15.6 சதவீதமாகும்.சீன போன்களை மக்கள் புறக்கணித்தால், அதன் பலன் போட்டி நிறுவனமான, கொரியாவை சேர்ந்த, 'சாம்சங்' நிறுவனத்துக்கு செல்லும் என எதிர்பார்க்கலாம். 'சாம்சங்' ஒன்று தான் குறிப்பிடத்தக்க மாற்றாக தற்போது இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, 'சியாமா' எனும், 'நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் சாதனங்கள் தயாரிப்பாளர்கள் சங்க'த்தின் தலைவர் கமல் நந்தி கூறியதாவது:சீன பொருட்களை புறக்கணிக்க கூறி, பல சமூக ஊடகங்கள் மூலம் நுகர்வோர் செய்திகளைப் பெறுகின்றனர். அவர்கள் என்ன முடிவுகளை எடுக்கின்றனரோ, அதைப் பொறுத்து, பொருட்களை வாங்குவது குறித்த மன நிலை அமையும். அதை அறிய இன்னும் சிறிது காலம் பிடிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
'இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்க'த்தின் தலைவர் பங்கஜ் மொகிந்த்ரூ கூறியதாவது:கடந்த சில ஆண்டுகளாகவே, சுயசார்பு நிலையை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. வலுவான திறன்களை வளர்ப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பதில், நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம், இப்போது, நாங்கள் உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கிறோம், 2025ம் ஆண்டுக்குள், மொபைல் போன் மற்றும் உப பாகங்கள்பிரிவில், வலுவான இந்திய நிறுவனங்களை உருவாக்குவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|