பதிவு செய்த நாள்
24 ஜூன்2020
13:36
மும்பை:கொரோனா தொற்றுக்குப் பின், நாட்டில் நிலவும் சமத்துவமின்மை இடைவெளி குறைந்துவிடும். ஏனெனில், பணக்கார மாநிலங்களின் வருமானம், ஏழை மாநிலங்களை விட குறையக்கூடும் என, எஸ்.பி.ஐ., ஆராய்ச்சி அறிக்கையான, ‘எகோவ்ரேப்’ தெரிவித்துள்ளது.மேலும், அகில இந்திய அளவில், தனிநபர் வருமானம், நடப்பு நிதியாண்டில், 5.4 சதவீதம் அளவுக்கு குறைந்து, 1.43 லட்சமாக இருக்கும் என்றும், இந்த ஆராய்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து, அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தனிநபர் வருமானம்
கொரோனா தொற்றுக்குப் பின், நாட்டில் சமத்துவமின்மை இடைவெளி குறையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏனெனில், பணக்கார மாநிலங்களின் வருமான வீழ்ச்சி, ஏழை மாநிலங்களின் வருமான வீழ்ச்சியைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்.எந்த மாநிலத்தில், தனிநபர் வருமானம், அகில இந்திய சராசரியை விட அதிகமாக இருக்கிறதோ, அந்த மாநிலம் பணக்கார மாநிலம் எனக் கருதப்படும். இதற்கு முன், இப்படி நடந்ததற்கு உதாரணம் இருக்கிறது. 1989ம் ஆண்டு, ஜெர்மனியில், ’பெர்லின் சுவர்’ வீழ்ந்த போது, இதே போன்ற சமத்துவமின்மை சரிவைக் காண நேர்ந்தது.கொரோனாவுக்கு பின், நாட்டில் தனிநபர் வருமான சரிவு விகிதம், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகித சரிவைவிட அதிகமாக இருக்கும்.
மிகவும் ஆபத்துடெல்லி மற்றும் சண்டிகர் மாநிலத்தின் தனிநபர் வருமானம், அகில இந்திய சராசரியை விட, மூன்று மடங்கு அதிகமாக சரியும். மொத்தம் எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தனிநபர் வருமானம், நடப்பு நிதியாண்டில், இரட்டை இலக்க சரிவைக் காணும். இது மிகவும் ஆபத்தானது.இந்த மாநிலங்களின் பங்கு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 47 சதவீதம் ஆகும்.இந்த சரிவுக்கு முக்கியமான காரணம், நகர்ப்புறங்களில் ஊரடங்கு கடுமையாக செயல்படுத்தப்படுவது தான். சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் மால்கள் மூடப்படுவது, இந்த பகுதிகளின் வருமானத்தை மோசமாக பாதித்துள்ளது.பல இடங்களில், சந்தைகளைத் திறந்த பிறகும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, கொரோனாவுக்கு முன் இருந்ததை விட, 70 முதல், 80 சதவீதம் வரை குறைவாகவே உள்ளது.
உள்நாட்டு உற்பத்திநடப்பு நிதியாண்டில், தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா போன்ற மாநிலங்களில், தனிநபர் வருமானம், 10 முதல், 12 சதவீதம் வரை, சரிவைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதேசமயம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பீஹார், ஒடிசா போன்ற மாநிலங்களில், தனிநபர் வருமான சரிவு, 8 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும்.இந்த மாநிலங்களில், கொரோனா தாக்கம் குறைவாக இருக்கும் பசுமை மண்டலங்கள் அதிகமாக இருப்பதும், விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படாததும், தனிநபர் வருமானம் குறையாமல் இருக்க காரணமாக அமைந்துள்ளது.நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில், 6.8 சதவீதம் அளவுக்கு சரிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|