பதிவு செய்த நாள்
24 ஆக2020
00:36
மியூச்சுவல் பண்ட் முதலீடு பற்றி பேசப்படும் போதெல்லாம் எஸ்.ஐ.பி., எனும் ’சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மண்ட் பிளான்’ வழிமுறை பற்றி அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. குறிப்பிட்ட இடைவெளியில், குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்ய எஸ்.ஐ.பி., முறை உதவுகிறது. சீரான சேமிப்பை சாத்தியமாக்குவதோடு, சிறிய தொகையிலும் முதலீட்டை துவக்கலாம். இதே போலவே, எஸ்.டி.பி., எனப்படும் ’சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான்’ முறையும் இருக்கிறது. இதன் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்:
முதலீடு மாற்றம்:
பொருத்தமான மியூச்சுவல் பண்ட் திட்டத்தை தேர்வு செய்து அதில், சீரான முறையில் முதலீடு செய்ய எஸ்.ஐ.பி., வழி செய்கிறது. மொத்தமாக முதலீடு செய்துள்ள ஒரு மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் இருந்து, அதே நிறுவனத்தின் இன்னொரு திட்டத்திற்கு குறிப்பிட்ட தொகையை சீராக மாற்ற எஸ்.டி.பி., வழி செய்கிறது.
என்ன சிறப்பு?
மியூச்சுவல் பண்டில் மொத்தமாக முதலீடு செய்யலாம் அல்லது எஸ்.ஐ.பி., மூலம் சிறுக சிறுக முதலீடு செய்யலாம். மொத்தமாக முதலீடு செய்யும் போது, அதன் இடரை குறைக்க, வேறு ஒரு திட்டத்திற்கு பகுதி பகுதியாக முதலீட்டை மாற்றலாம். ஈக்விட்டி நிதியில் இருந்து கடன்சார் நிதிக்கு அல்லது கடன்சார் நிதியில் இருந்து ஈக்விட்டி நிதிக்கு மாற்றலாம்.
எதற்காக?
ஈக்விட்டி நிதி அதிக பலன் அளிக்க வல்லவை, ஆனால் இடர் மிக்கவை. கடன்சார் நிதியில் இடர் குறைவு என்றாலும், பலனும் மிதமாகவே இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப ஒருவர், ஒரு வகை நிதியில் இருந்து இன்னொரு நிதிக்கு முதலீட்டை படிப்படியாக மாற்றி பலன் பெறலாம்.
வரி தாக்கம்:
எஸ்.டி.பி., வசதியை பயன்படுத்த தீர்மானித்தால், குறைந்தது ஆறு முறையேனும் முதலீடு தொகையை மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறை மாற்றும் போது, யூனிட்கள் விலக்கி கொள்வதாக கணக்கிடப்படும். இதனால் ஏற்படக்கூடிய மூலதன ஆதாயம், நிதியின் தன்மைக்கு ஏற்ப வரி விதிப்புக்கு உட்பட்டது.
யாருக்கு ஏற்றது?
தற்போதைய சூழலில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கமாக இருக்கிறது. பலரும் பங்குகள் சார்ந்த ஈக்விட்டி நிதியில் மொத்தமாக முதலீடு செய்ய தயங்கலாம். எனவே, இடர் குறைந்த கடன்சார் நிதியில் மொத்தமாக முதலீடு செய்து, அதிலிருந்து ஈக்விட்டி நிதியில் எஸ்.டி.பி., மூலம் முதலீடு செய்யலாம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|